வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்

Thursday, April 01, 2010





பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

சரணங்கள்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்

வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,

எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே

எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,

மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,

நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே

நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

சிந்து நதியின்மிசை நிலவினிலே

சேர நன்னாட்டிளம் பெண்களுட னே

சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்

ராசபுத் தானத்து வீரர் தமக்கு

நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்

காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்

கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் \n

வானையளப் போம்கடல் மீனையளப்போம்

சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்

சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்

கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்

ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்

உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

- மகாகவி பாரதியார்...

துடிப்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: