பிரபஞ்ச அழகி

Saturday, December 25, 2021

 உலக அழகி சரி.

அதென்ன பிரபஞ்ச அழகி ?

ஏன் பிரபஞ்ச அழகிப்போட்டியில் கலந்துக்கொள்ளும் அனைத்து அழகிகளும் இந்த உலகத்தில் இருந்து மட்டுமே வருகின்றனர் ? பிரபஞ்சத்தில் எத்தனையோ அழகிகள் இருக்கலாம்..

இந்த குறுகிய மனப்பான்மையை மனிதன் மாற்றிக்கொள்வானா ?


* தினேஷ்மாயா *

பெரியாரியம்


* தினேஷ்மாயா *

வானும் மண்ணும்



ஒரு பறவை

வானிற்கும் இந்த மண்ணிற்கும் இடையே

பறந்துக்கொண்டே இருக்க -

அது நம் நினைவுகள்தாம்

என மனம் அறியாதோ !

மேலே வானமாய் நீ

கீழே மண்ணாய் நான்..

* தினேஷ்மாயா *

முடிவில்லா காவியம்

 


கையில்லா ரவிக்கை !!

கட்டுப்பாடில்லா என் மனம் !!!

முடிவில்லா காவியமாய் நம்

ஊடலும் கூடலும் !

* தினேஷ்மாயா *

விண்ணுலக தேவதை

 


விளக்கொளியில் கண்டேன்

விண்ணுலக தேவதையை !!


* தினேஷ்மாயா *

சிறைப்பட்ட மனிதன்


மண்புழுக்கள்கூட தன்

உடலை இழுத்து

இழுத்துக்கொண்டு ஓர்

இடம்விட்டு மற்றோர் இடம்

ஊர்ந்துகொண்டுதான்

இருக்கின்றன.

மனிதர்கள் மட்டும்தான்,

தன் இருப்பிடத்துக்கு வெளியே

உலகம் இல்லை என்று

நினைக்கிறார்கள்..


- மறைக்கப்பட்ட இந்தியா நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்


* தினேஷ்மாயா *

In Science We Trust !!

 

அறிவியலே கடவுள்

ஆன்மிகத்தில் ஓடி கடவுளைத் தேடினேன்.. 

கிடைக்கவில்லை..

அறிவியலை நாடி கடவுளைத் தேடினேன்..

கண்டுகொண்டேன்....

In Science We Trust !!

* தினேஷ்மாயா *

ஈ.வே.ரா

பெரியார்

அனைவரும் இங்கே சமம்.  நீ வேறா நான் வேறா இருக்கக் கூடாது என்று நினைத்தவரே எங்கள் ஈ.வே.ரா..

- படித்ததில் பிடித்தது -

* தினேஷ்மாயா *

தலைகோதும் இளங்காத்து..


தலைகோதும் இளங்காத்து

சேதி கொண்டுவரும்

மரமாகும் வெதை எல்லாம்

வாழ சொல்லித்தரும்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்


கலங்காத கலங்காத

நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத

நாளும் இங்கு இல்ல

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்


தலைகோதும் இளங்காத்து

சேதி கொண்டுவரும்

மரமாகும் வெதை எல்லாம்

வாழ சொல்லித்தரும்


கலங்காத கலங்காத

நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத

நாளும் இங்கு இல்ல


ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே


ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே

உன்ன நம்பி நீ முன்ன போகையிலே

பாத உண்டாகும்


நிக்காம முன்னேறு

கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு

அன்பால நீ கை சேறு


நீல வண்ண கூர இல்லாத

நிலமிங்கு ஏது

காலம் எனும் தோழன் உன்னோடு

தடைகள் மீறு


மாறுமோ தானா நிலை

எல்லாமே தன்னாலே

போராடு நீயே

ஆறம் உண்டாகும் மண்மேலே


மீதி இருள் நீ கடந்தால்

காலை ஒளி வாசல் வரும்

தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்

நமக்கான நாள் வரும்


தலைகோதும் இளங்காத்து

சேதி கொண்டுவரும்

மரமாகும் வெதை எல்லாம்

வாழ சொல்லித்தரும்


கலங்காத கலங்காத

நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத

நாளும் இங்கு இல்ல


ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே

உன்ன நம்பி நீ முன்ன போகையிலே

பாத உண்டாகும்


நிக்காம முன்னேறு

கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு

அன்பால நீ கை சேறு


நிக்காம முன்னேறு

கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு

அன்பால நீ கை சேறு


படம்: ஜெய்பீம்

வரிகள் : ராஜூமுருகன்

குரல்: பிரதீப் குமார்

இசை: ஷான் ரோல்டன்


பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தன்னம்பிக்கையூட்டும் பாடல் என் மனதை தொட்டிருக்கிறது. இசை, வரிகள், குரல் எல்லாம் கச்சிதமாக பொருந்தி என் மனதில் தென்றலாய் வருடிச்செல்கிறது. Loop-ல் அதிகம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இந்தப்பாடலை.


* தினேஷ்மாயா *

Homo sapiens

Thursday, December 23, 2021

 

Dear Mother Nature,

Homo sapiens is a failure model..

- DhineshMaya

இதுவும் கடந்து போகும் !!!

Friday, October 08, 2021


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்....


சுடரி இருளில் ஏங்காதே

வெளிதான் கதவை மூடாதே.. அட

ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே..

அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே..


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?


சுடரி சுடரி உடைந்து போகாதே...

உடனே வலிகள் மறைந்து போகாதே...

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்...


இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்  

ஏதுவும் கடந்து போகும்


அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

மனம் தான் ஒரு குழந்தையே...

அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

அது போல் இந்த கவலையே...


நாள்தோரும் ஏதோ மாறுதல்

வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்...


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?


சுடரி சுடரி உடைந்து போகாதே...

உடனே வலிகள் மறைந்து போகாதே...

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்...


அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

குழந்தை நடை பழகுதே...

மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

பறவை திசை அமைக்குதே...


வசம் தான் பூவின் பார்வைகள்

காற்றில் ஏறி காணும் காட்சிகள்

காணாமல் வெளியாக பார்த்திடுமே...


சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே...

பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே...


சுடரி சுடரி... வெளிச்சம் தீராதே....

அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே...

அழகே சுடரி அட ஏங்காதே...

மலரின் நினைவில் மனம் வாடாதே....


இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும் 

கடந்து போகும் கடந்து போகும் .


படம்: நெற்றிக்கண்

வரிகள்: கார்த்திக் நேத்தா

குரல்: சிட் ஸ்ரீராம்

இசை:  கிரீஷ்


ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் மீண்டும் கேட்கும்படியான ஒரு மெலடி. வரிகளும் power packed. கதையின் சூழ்நிலைக்கேற்ப அருமையான வரிகள். நாமும் நம் வாழ்வின் சில தருணங்களில் மனசு உடைந்து நொறுங்கிக்கிடக்கும் சமயம் இந்த பாடலும் வரிகளும் கேட்கும்போது மழைக்கால ஈரத்தென்றல் வந்து நம் மனதை வருடிவிட்டு அந்த வலியையும் கொஞ்சம் சுமந்து செல்வதாய் உணரலாம்.


* தினேஷ்மாயா * 

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்

கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ

அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே

அல்லல் நீக்க மாட்டாயா?


வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே

வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்

வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ

அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்

ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே

ஆடிக் காட்ட மாட்டாயா?


அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே

அறிகிலாத போது - யாம்

அறிகிலாத போது - தமிழ்

இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்

இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ

இயம்பிக் காட்ட மாட்டாயா?


புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே

புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்

புலவர் கண்ட நூலின் - நல்

திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்

செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்

செல்வம் ஆக மாட்டாயா?


- பாரதிதாசன் -

இந்த வரிகளை பாடல்களாக கேட்டுப்பாருங்கள். அற்புதமாக இருக்கும். Youtube-ல் நிறைய பேர் பாடியுள்ளனர். ஓர் இரவு என்னும் பழைய தமிழ் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

* தினேஷ்மாயா *

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

என்னை கலி தீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்

என்னை கலி தீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே


பிள்ளை கனி அமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமேஏ

பிள்ளை கனி அமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமேஏ

அள்ளி அணைத்திடவே என் முன்னே

ஆடி வரும் தேரேஏ

அள்ளி அணைத்திடவே என் முன்னே

ஆடி வரும் தேரேஏ


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே


ஓடி வருகையிலே கண்ணம்மா

உள்ளம் குளிருதடீ

ஓடி வருகையிலே கண்ணம்மா

உள்ளம் குளிருதடீ

ஆடி திரிதல் கண்டால் உனை போய்

ஆவி தழுவுதடீ

ஆடி திரிதல் கண்டால் உனை போய்

ஆவி தழுவுதடீ


உச்சி தன்னை முகர்ந்தால்

கர்வம் ஓங்கி வளருதடீ

உச்சி தன்னை முகர்ந்தால்

கர்வம் ஓங்கி வளருதடீ

மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ

மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ


கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி

கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி

கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா

உன்மத்தம் ஆகுதடிஏ

உன்னை தழுவிடலோ கண்ணம்மா

உன்மத்தம் ஆகுதடிஏ

உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம்

உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ


- பாரதியாரின் கண்ணன் பாட்டிலிருந்து -


அருமையான வரிகள். தமிழ் கர்நாடிக் இசைக்கச்சேரிகளில் நிச்சயம் இந்த பாடல் இடம்பிடித்திடும். இப்பாடல் நிறைய versions-ல் இருக்கிறது. எதாவது ஒரு version-ஐ கேட்டுப்பாருங்களேன். மனம் அவ்வளவு லேசாக மாறிவிடுகிறது.

* தினேஷ்மாயா *

தேவதை ?!?!

Wednesday, September 29, 2021

 துன்பத்தில் இருக்கும்போது வராத தேவதைகள்,

மீளாத்துயிலில் சென்றப்பிறகு,

உயிரை ஏந்திச்செல்ல வருவது -

எதற்காக ?

* தினேஷ்மாயா *

கையறுநிலை

எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில்


மனிதனும் மனிதமும் தோற்றுப்போவதை உணரமுடிகிறது..


* தினேஷ்மாயா *

வெறுமை

வாழ்க்கை வெறுமைகளால் நிரம்பியிருக்க,


அங்கொன்றும் இங்கொன்றுமாய் மகிழ்ச்சியானத் தருணங்கள் எப்போதாவது தென்படுகின்றன..

* தினேஷ்மாயா *

புதிய தலைமுறை

Thursday, September 23, 2021

 ஒரு நாவலை எடுத்தால் அதை படித்து முடிக்கும்வரை உணவோ உறக்கமோ வராது. புத்தக வாசிப்பிலேயே புதியதோர் உலகிற்கு பயணித்து புதியதோர் வாழ்க்கை அனுபவத்தைப் பெறும் அந்த  அதிஅற்புதமான உணர்வை..


Netflix, Amazon Prime என இணையத்தில், தூக்கம் கெட்டு தொடர்ச்சியாக படங்கள் பார்க்கும் இக்கால தலைமுறையினர் உணர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்..


* தினேஷ்மாயா *

தன்னிகரற்ற தலைவர் - பெரியார்

 பெரியாருக்கு முன்னர் உலகில் பல்வேறு பகுத்தறிவுவாதிகள் தோன்றி, பெரியாரைவிடவும் சிறந்த கருத்துகளை மக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் அத்துனைப்பேரும் சிந்தனைவாதிகளாகவே நினைவுக்கூறப்படும் வேளையில், பெரியார் மட்டுமே ஒரு இனத்தின் தலைவராக போற்றப்படுகிறார். அவர், வெறும் சொல்லோடு நிற்காமல் செயலிலும் தன் சித்தாந்தத்தை இறுதிவரை கடைப்பிடித்து பகுத்தறிவின் அகராதியாக திகழ்வதே அதற்கான காரணம்..

🤍


* தினேஷ்மாயா *

மதம் மனிதனை மிருகமாக்கும்

 இலங்கையில் புத்தரின் பல், புத்தரின் எலும்பு என்று அவர் நினைவாக பல பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். அந்த பொருட்கள் உண்மையாகவே புத்தருடையதுதானா என்கிற விவாதம் இருக்கட்டும். 

ஆனால், புத்தரின் நினைவாக என்னவெல்லாமோ வைத்துக்கொண்டு, அவர் போதித்த அன்பையும் மனிதநேயத்தையும் மறந்து தன் மக்களையே வஞ்சிக்கும் கொடிய தேசமாய் இலங்கை விளங்குவது வேதனையே..

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இலங்கையில் சுமார் 70% மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். ஒரு புத்த நாடாக இருக்கும் இலங்கையில் ஏன் இத்தனை போர், கலவரம், அமைதியின்மை என்று சிந்தித்தால், பெரியார் சொன்ன ஒரு வாசகமே மனதில் தோன்றுகிறது.

”மதம் மனிதனை மிருகமாக்கும்”

என்னது ? புத்த மதம் கூடவா? சமண மதம் கூடவா ? என்று பலர் உங்கள் புருவத்தை உயர்த்துவது எனக்குத் தெரிகிறது. ஆம். அனைத்து மதங்களுமே மனிதனை மிருகமாக்கும்.

புத்தர் போதித்த கருத்துகளை வாழ்வியலுக்குப் பொருத்திப்பார்த்து வாழ்வதை விடுத்து, அவற்றையும் இன்னபிற கதைகளையும் தொகுத்து புத்தத்தை மதமாக உருவாக்கியதன் விளைவே இது. மதம் என்று எப்போது ஒன்று உருவெடுக்கிறதோ அங்கே மனிதநேயம் மறைந்தேப்போகிறது.

சமணமும்கூட, தீர்த்தங்கரர்கள் மக்களை நல்வழிப்படுத்த போதித்த கருத்துகளை மறந்து அந்த தீர்த்தங்கரர்களையே தெய்வமாக வழிப்படத்தொடங்கி இன்று ஒரு மதமாக வளர்ந்து நிற்கிறது. 

இதனால்தான் பெரியார் சொல்லியிருக்கிறார். மதம் மனிதனை மிருகமாக்கும் என்று. சிந்தித்துப்பார்த்தால், அது எவ்வளவு உண்மை என்று புரிகிறது.

* தினேஷ்மாயா *


முற்பிறவி பித்தலாட்டங்கள்


நான் என்னுடைய இந்த பிறவி எடுப்பதற்குக் காரணம் கர்மா (முற்பிறவியின் பாவ புண்ணியங்கள்) என்று அனைத்தையும் கர்மா மீது பழிபோடும் மதவாதிகளே.. கர்மாதான் என்னுடைய இந்த பிறவிக்குக் காரணமென்றால், உங்கள் கூற்றின்படியே, நான் எடுத்த முதல் பிறவிக்கு எந்த கர்மா காரணம் ?

அனைத்தையும் கர்மா மீது திணிப்பதை நிறுத்துங்கள். மனிதனாய் மாறுங்கள். மனிதநேயத்தோடு வாழுவோம்..

🤍


* தினேஷ்மாயா *

வாழ்க்கை

Saturday, September 18, 2021

 ஒருமுறை நாம செத்துப் போயிட்டோம்னா



நாம உயிரோட இருந்ததையே மறந்துடுவோம்...


அதனால, உயிரோட இருக்கும்போதே நல்லா நிம்மதியா சந்தோஷமா வாழ்ந்துக்கோங்க..

 * தினேஷ்மாயா *

பெருந்தன்மை

 ஆமாம். நான் தெரியாம தப்புப்பண்ணிட்டேன் என்று தன் தவறை ஒப்புக்கொள்பவரை நம்பலாம். 


இல்லை, அது என் தவறில்லை, பிறரால்தான் அப்படி நடந்தது என்று தெரிந்தே பொய்யுரைக்கும் நபர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள்..


* தினேஷ்மாயா *

பொம்ம பொம்மதான்

 பாடல்: பொம்ம பொம்மதா

தைய தையனக்கு

தின்னாக்கு நக்குதின் பஜங்கரே !!


அர்த்தம்: தினமும் எனக்கு தைய தையனு பஜனை செய்றீங்களே, நான் வெறும் பொம்மை பொம்மைதான்..


- இப்படிக்கு அருள்மிகு ஆனைமுகத்தான்..  🐘


* தினேஷ்மாயா *

திராவிடம் vs ஆரியம் - ஒரு பார்வை

 சங்க காலத்தில் பெண் புலவர்கள் பலர் இருந்தனர். ஆனால், ஆரிய பண்பாடு திராவிட நாகரிகத்தோடு கலந்த பிற்பாடு பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். பக்தி இலக்கிய காலத்தில் பெண் புலவர்களின் பங்களிப்பு வெகு குறைவு. அதற்குப்பின் பெண் புலவர்களின் எண்ணிக்கை கைவிட்டு எண்ணும் அளவிலேயே இருந்தது. கடந்த நூற்றாண்டில்தான் திராவிடத்தின் எழுச்சி மற்றும் மீட்சியால் பெண்கள் இலக்கியத்திலும் பல்வேறு துறைகளிலும் சாதிக்க துவங்கினர்.


#திராவிடம் vs ஆரியம் - ஒரு பார்வை..


* தினேஷ்மாயா *

வாழ்க்கை இரகசியம்

Saturday, August 21, 2021

கடைசிவரை நல்லவனாகவே வாழ்ந்த ஒருவன் தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைக்கு சொல்லிவிட்டுப் போகும் வாழ்க்கைப் பாடம் என்ன தெரியுமா ?
மகனே ! எப்போதும் நல்லவனாகவே இருந்துவிடாதே !

கடைசிவரை கெட்டவனாகவே வாழ்ந்த ஒருவன் தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைக்கு சொல்லிவிட்டுப் போகும் வாழ்க்கைப் பாடம் என்ன தெரியுமா?
மகனே ! எப்போதும் கெட்டவனாகவே இருந்துவிடாதே !

* தினேஷ்மாயா *

தெரியாமை !

தெரிந்ததெல்லாம் சொல்லிவிட்டால்

உலகத்தில் தெரியாமையின் மகத்துவம்
சீரழியுமே !

தெரியாமையைத் தேடித்தானே வாழ்க்கை !

- சோ.தர்மன் அவர்களின் கூகை நாவலிலிருந்து..

* தினேஷ்மாயா *

ஞானத்தின் பிறப்பிடம்

ஞானத்தின் பிறப்பிடம் எது ?

எனக்கு எல்லாமே தெரியும் என்கிற மமதை நிலையில் அல்ல

எனக்கு எதுவும் தெரியாது என்கிற உண்மையை நீ ஒப்புக்கொள்ளும் தருணம் ஞானம் உன்னிடத்தில் வந்து சேர்ந்திருக்கும்..

* தினேஷ்மாயா *

என்னங்க சார் உங்க சட்டம் ?!

Friday, August 20, 2021

சட்டம்..

ஒவ்வொரு நபருக்கேற்ப

தத்தம் தேவைக்கேற்ப

அவரவர் சூழ்நிலைக்கேற்ப

மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்..

பழகிக்கொள்ளுங்கள் !!

* தினேஷ்மாயா *

தேடல் !

 விழுங்கக் காத்திருக்கும் காலடி மண்ணை மறந்துவிட்டு நாலு கால் பாய்ச்சலில் நீ தேடியலைவது எதை ?

- கூகை நாவலில் சோ.தர்மன்

* தினேஷ்மாயா *

இங்கிதம் கிலோ எவ்வளவு ?

என் பயணத்தில், எனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் சப்தமாக எதையோ தன் கைப்பேசியில் பார்த்துக்கொண்டு வருகிறார். 

அது அவர் உரிமை.

ஆனால், அவருக்கு அருகில் இருந்து எந்த ஒலி தொந்தரவுமின்றி புத்தகம் படிக்க எனக்கும் அதே சம அளவு உரிமை உண்டு என்பதை அவர் அறிவாரா ?

இப்போதெல்லாம் பயண நேரங்களில் புத்தகம் படிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறேன். முன்பெல்லாம், பயணத்தில் படம் பார்ப்பதும், பாடல்கள் கேட்பதும் இருந்தது. சில மாதங்களாக புத்தகம் படிக்க துவங்கியிருக்கிறேன். இதற்கு முன்னர் பாடல் கேட்கும்போதோ, படம் பார்க்கும்போதோ நான் பிறர் எழுப்பும் தேவையற்ற சப்தங்கள் என்னை பாதித்ததில்லை. ஏனெனில் நான் என் காதில் தனியாக ஒரு இயந்திரத்தை மாட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பேன்.

ஆனால், இப்போது புத்தகம் படிக்க ஆரம்பித்ததுமேதான் தெரிகிறது, பிறர் எப்படி பொதுவெளியில் இங்கிதம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று.

நேற்று இரயிலில் ஏறியவுடன், ஒரு இருக்கையில் அமர்ந்து புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். எனக்கு அருகில் இருப்பவர் நான் ஏறும் முன்னரே அந்த இருக்கையில் இருந்திருக்கிறார். நான் வரும்போது கூட தன் செல்பேசியில் சப்தமாக Youtube Shorts பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர் சப்தத்தை குறைக்கவில்லை. சரி நான் ஏதும் சொல்லிக்கொள்ளவில்லை. பிறகு நான் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அதைப் பார்த்தும் அவர் தன் செல்பேசியில் அதே சப்தத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். அவர் குறைப்பதாக தெரியவில்லை. நான் சொன்னேன், சார் கொஞ்சம் Sound குறைச்சுக்குறீங்களா please. அவருக்கு அப்போதுதான் உணர்ந்திருக்கிறது போலும். உடனே தன் செல்பேசியை அணைத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.

என்ன செய்ய. என் உரிமையை கேட்டுத்தான் பெற வேண்டியுள்ளது எங்கேயும் எப்போதும் !

* தினேஷ்மாயா *

வெளிக்காட்டா சுமை

நமக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அவரிடம் கூட மனசு விட்டு சொல்ல முடியாத சில விடயங்கள் நம் அனைவரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வெளியில் பகிர்ந்துக்கொள்ள முடியாத துயரங்களை சுமந்துக்கொண்டுதான் மனிதன் வாழ்கிறான். அந்த சுமையோடே சாகிறான்.

* தினேஷ்மாயா * 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் !

அது என்னவோ தெரியல


எல்லாத்துலயும் மெரிட்ட (MERIT) எதிர்பார்க்குற அவா,


கோயில்களில் ஆகமம் வேதம் படிச்சு மெரிட்ல குருக்களா வர்ரவாள மட்டும் ஏத்துக்க மாட்டேனுறா !


காலம் கலி காலம் ஆயிடுத்துறா அம்பி


* தினேஷ்மாயா *

கூகை - சோ.தர்மன்


எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள் எழுதிய ‘கூகை’ நாவலை சமீபத்தில் படித்தேன். இந்த நாவலைப் பற்றி முன்னமே நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தலித் இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத நாவல் மிக அற்புதமான நாவல் என்று.

பகலில் கண் தெரியாமல் இருட்டில் மட்டுமே கண் தெரியும் கூகையின் வாழ்க்கையை ஒத்தது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை என்பதை அழகாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வலி நிறைந்தது என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், அந்த வலியை நமக்கும் கடத்தியிருக்கிறார்.


தன் பலம் என்னவென்றே தெரியாமல் பிற சிறிய பறவைகளுக்கும்கூட பயந்து வாழும் கூகையின் வாழ்க்கையை தலித் மக்களின் வாழ்க்கையோடு பொறுத்தி புனைவு தந்திருக்கிறார்.

இந்த நாவலில் வரும் சீனி, முத்துப்பேச்சி, அப்புச்சுப்பன் ஆகிய மூவரும் என் மனம் கவர்ந்த நபர்கள். இடையிடையே பல கதாப்பாத்திரங்கள் வந்து மனம் கவர்ந்து சென்றாலும், கதை முடிந்தாலும் இந்த மூன்று பேர் மனதில் கூடாரம் அமைத்துத் தங்கிவிடுகிறார்கள். தன் இன மக்களின் நலனையே கருத்தில் கொண்டிருக்கும் சீனியின் ஒவ்வொரு செயலும் ஆச்சரியமூட்டுகிறது. மேகலக்குடி மக்களுக்கும் தன் இன மக்களுக்கும் ஒரு பாலமாய் செயல்பட்டு முடிந்தவரை சண்டை சச்சரவின்றி வாழ உறுதுணையாக நிற்கிறான். ஐயர் எழுதி வைத்த வயலில் உழுது தன் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பெரிதும் காரணாய் விளங்குகிறான்.


அப்புச்சுப்பன் கோபக்காரன். ஆனால் மூளை கம்மி. அதிகம் சிந்திக்க மாட்டான். எடுத்தோம் கவுத்தோம் என்று தடாலடியாக சண்டியர்தனம் செய்வான். ஆனால் அவன் செய்வது அனைத்தும் தன் மக்களுக்காகவே.


பேச்சி..


அப்புசுப்பனுக்கு அடைக்கலம் மட்டுமல்ல மறுவாழ்வும் கொடுத்தவள். அனைத்து குடி மக்களுக்கும் நீதி கிடைக்கவும் வாழ்வு கிடைக்கவும் பாடு பட்டவள். இரக்க குணம், வைராக்கியம் இவற்றின் மறுபெயர் பேச்சி.


அனைத்து கதாபாத்திரங்களிலும் என்னை அதிகம் கவர்ந்தது பேச்சியின் கதாப்பாத்திரமே. சீனியும் கூட தன் இன மக்கள் என்கிற ஒரு ஒட்டும் உறவும் இருந்ததால் அவர்களுக்காக நின்றான் எனலாம். ஆனால், முன்பின் பார்த்திராத அப்புச்சுப்பனுக்கு உதவி செய்து அவனுக்கு வாழ்வை மீட்டு கொடுத்தது இவளின் பெருந்தன்மை குணத்தை காட்டுகிறது. இவளின் பொறுமையும் அனுபவமும் எனக்கு வியப்பை கொடுக்கிறது.


இரண்டாம் பாகத்தில் வரும் கற்பனை நாடும், சீனியின் மரணமும் ஏனோ கதையுடன் ஒட்டவே இல்லை என்பதுபோல நான் உணர்கிறேன்.


எழுத்தாளர் சில இடங்களில் விரசமான விடயங்களையும்கூட நாசூக்காக சொல்லி இருப்பார். இரட்டை அர்த்தமுண்டு என்று போகிறப்போக்கில் படிப்பவர்களுக்கு புரியாது. மூன்று நான்கு முறைப் படித்தால் மட்டுமே அதன் உள் அர்த்தம் விளங்கும். அவரின் கற்பனைத்திறம் என்னை கவர்ந்தது.


பள்ளக்குடி, பறக்குடி, சக்கிலியக்குடி மக்கள் என்றைக்குமே பிறருக்கு மாடாய் உழைத்து ஏடாய் போகும் நிலை என்று மாறும் என்பதோடு கதை முடிகிறது. அவர்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். நல்லொழுக்கத்தோடு உழைப்பும் வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியும் இருந்தால் மட்டுமே இவர்கள் வாழ்வில் ஆயிரம் சூரியனை கண்களாக கொண்ட கூகையின் கண் போல் ஒளி ஏற்படும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.


நாவலை படித்து முடித்தபோது மனம் கனக்கவுமில்லை, லேசாகவுமில்லை. இரண்டும் கலந்த ஓர் உணர்வு. ஒரு பத்து நாட்களாக கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இந்த புத்தகத்தை படித்து வந்தேன். இந்த பத்து நாட்களாக நான் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையோடு இன்னொரு வாழ்க்கையும் அதாவது கூகை நாவலில் வரும் நபர்களோடு சேர்ந்து பயணித்து அவர்களின் வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டு வந்த ஓர் திருப்தி கிடைக்கிறது.


இந்த நாவலை நிச்சயம் நான் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். படித்து முடித்து உங்கள் கருத்துக்களை இங்கே என்னுடன் பகிரலாம்.


நன்றி.


* தினேஷ்மாயா *

நீங்க தலித்தா ?

Monday, July 26, 2021

இயற்கையே ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. இயற்கையை சார்ந்தே அமைந்த மனிதனின் வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததே. ஆனால், ஆதி மனிதனின் காலத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் யாவும், வளங்களை வைத்தே எழுந்தவை. ஒருவன் இருக்கும் இடத்தில் நிர் வளம் இருக்கும் இன்னொருவன் வசிக்கும் இடத்தில் மண் வளம் இருக்கலாம். இதனால் ஒருவனைவிட மற்றொருவன் செழிப்பாக வாழ முடிந்தது அதன் பொருட்டு மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு எழுந்தது. என்றைக்கு மதம் என்கிற பெயரில் இங்கே சாதிய வேற்றுமைகள் எழுந்ததோ அன்றுமுதல் இயற்கையால் மட்டுமின்றி செயற்கையாக மனிதனால் மனிதனுக்கிடையே பல ஏற்றத்தாழ்வுகள் எழத்துவங்கின. இதனால் ஒருவனை இன்னொருவன் அடக்கி ஆள முயல்வதும், அடிமையாய் நடத்துவதும், பல மனிதர்கள் குரலற்று போவதும், எதிர்த்தால் நசுக்கப்படுவதும் சில சமயங்களுல் வேறருக்கப்படுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் எனக்கிருந்த கனவை நோக்கிய என் பயணத்தால் அதில் மட்டுமே என் கவனம் முழுவதும் இருந்தது. இன்று என் கனவை எட்டிவிட்டப் பிறகு,வாழ்க்கையில் திருமணம் குழந்தை என்கிற பொறுப்புகள் வந்தபிறகு என் பார்வை விசாலமானது. தெரியாத பல சங்கதிகளை தேடித்தேடி தெரிந்துக்கொண்டே இருக்கிறேன். இதுநாள் வரையில் நான் கண்ட, கேட்ட, என்னை நம்பவைத்த பல விடயங்கள் யாவும் மாயையே என்பதை உணர ஆரம்பித்திருக்கிறேன். சாதி என்னும் பெயரால் இங்கே நம் சமூகத்தில் நடந்துக்கொண்டிருக்கும் அவலங்கள் என் கண்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. ஆதிக்க சாதியினர் என்று சிலர் தங்களை எண்ணிக்கொண்டு வேறு சில சாதியினரை ஒடுக்குகின்றனர். இந்த ஒடுக்கப்பட்டவர்கள் யாரென்று பார்த்தால் அவர்களோடு என்னால் எளிதில் தொடர்புப் படுத்திக்கொள்ள முடிகிறது. நான் தினமும் காணும் மனிதர்களே அவர்கள். தங்கள் வாழ்க்கையில் எப்படியாவது வெளிச்சம் வந்துவிடாதா என்கிற நப்பாசையுடன் உழைக்கும் ஏழை வர்க்கம். இங்கே பொருளாதாரத்தால் மட்டும் இங்கே வர்க்க பேதங்கள் இல்லை, அதையும் தாண்டி, சாதியினால் ஏற்பட்டிருக்கும் வர்க்க பேதமே பெரிதாய் தெரிகிறது. பெரும்பாலும், ஒடுக்கப்பட்ட சாதியினரே ஏழைகள் என்னும் வட்டத்தின் பெரும்பகுதிக்குள் அடங்குகின்றனர். பிராமணர் சாதியிலும் உணவுக்காக ஏங்கும் ஏழைகளும் உள்ளனர் அதேசமயம் ஒடுக்கப்பட்ட சாதி என்று சொல்லப்படும் மக்களிடையே கோடிஸ்வரனும் உண்டு. ஆனால், பெரும்பான்மை என்று வந்தால், ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் ஏழைகளாக இருக்கின்றனர் என்று தரவுகள் சொல்கிறது. 

இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதாலும், அவர்களின் பிரச்சனைகளை பொதுவெளியில் பேசுவதாலும், பிறரிடம் இவர்களுக்காக இவர்களின் குரலாக என் குரலை பதிவு செய்யும் தருணங்களிலும் நான் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான்... நீங்க தலித்தா?

இதற்கு சுற்றி வளைத்து பதில் அளிக்க நான் விரும்பவில்லை. நேராகவே சொல்கிறேன்.

ஆம். நான் தலித் தான்.

தலித் என்றால் யார் ?

தலித் என்பதற்கு உடைந்த / சிதறடிக்கப்பட்ட / சிதைக்கப்பட்ட / ஒடுக்கப்பட்ட என்று பொருள். ஆனால், இன்றைய சமூகத்தில் தலித் என்னும் வார்த்தை பட்டியலின மக்களை மட்டுமே குறிக்கும் ஒரு வார்த்தையாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.

வேதங்களின் படி பார்த்தால், பிராமணர்களைத் தவிர இன்று இருக்கும் அத்தனை மக்களும் சூத்திரர்களே. அதாவது, அவா பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் இங்கே இருப்பவர்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று அவா மற்ற அனைவரும் தலித்துகள்.

என்னை நோக்கி நீங்க தலித்தா என்று கேட்கும் அந்த நபர்களும் தலித்தான் என்று அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் நான் ?

நான் கடந்து வந்த 32 ஆண்டுகால வாழ்க்கையில் பல வெற்றிகளை நான் சந்தித்திருந்தாலும் அவற்றைவிட ஆயிரக்கணக்கில் அவமானங்களை சந்தித்திருக்கிறேன். ஒடுக்கப்பட்டிருக்கிறேன். புறக்கணிக்கப்பட்டிருக்கிறேன். வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டிருக்கிறேன். செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்திருக்கிறேன். என் பக்க நியாயத்தை சொல்லவிடாமல் அமுக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளை வேண்டுமென்றே தடுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாதபடி தள்ளப்பட்டிருக்கிறேன் அதையும் மீறி குரல் கொடுத்தால் அது பலனளிக்காமல் போகும்படி செய்வதை கண்டிருக்கிறே.

நிலமும் செல்வமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, கடனில் நீந்தி, வட்டிக்கு முத்தமிட்டு, தோல்விகளையும் அவமானங்களையும் அணைத்தவாறு பயணித்து, கல்வி என்னும் ஒற்றை ஆயுதத்தால் வாழ்வில் நல்ல நிலையை எட்டியிருக்கிறேன். நான் தலித்தாக இல்லாமலிருந்திருந்தால் இந்நேரம் வெளிநாட்டில் குடியேறி பத்து ஆண்டுகள் ஓடியிருக்கும். 

தலித் என்பது ஒரு சாதியை அடையாளப்படுத்தும் வார்த்தை அல்ல. அது ஒரு புரட்சியின் வெளிப்பாடு. இங்கே ஒடுக்கப்படும் அனைவரும் தலித்துதான் என்பதை எப்போது உணரப்போகிறோம்.  இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். அதை நீங்கள் உணர்ந்தவராக இருக்கலாம், அல்லது இனிமேல் உணர்பவராக இருக்கலாம். ஆனால் உண்மை என்பது இதுதான்.

ஆம். நான் தலித் தான்.

உங்களையும் போல.

* தினேஷ்மாயா *


தோட்டியின் மகன் - படித்ததில் பிடித்தது


 


தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்களின் தோட்டியின் மகன் என்னும் நாவலில் என்னை பாதித்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

இசக்கிமுத்து நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கையில், ஓவர்சீயரிடம் பேசி தன் வேலையை தன் மகனான சுடலைமுத்துவிற்கு வாங்கிக் கொடுக்கிறார். மறுநாள் வாளியையும், மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்லும் சுடலைமுத்து, தன்மானம் உள்ளவனாக நடந்துக்கொள்கிறான். வேலையையும் விரைவிலேயே நன்கு கற்று தேர்கிறான். ஆனால் அவன் சுயமரியாதை தன் தந்தையை பட்டினியால் கொன்றுவிடுகிறது. இறந்துப்போன இசக்கியை புதைக்கக்கூட தோட்டிகளால் முடியவில்லை. அதற்கும் காசு தேவைப்படுகிறது. காசு இல்லாத காரணத்தினால் ஒரு ஆலமரத்தின் அடியில் குழித்தோண்டி புதைக்கிறார்கள். பெரும்பாலும் ஒருவர் இறந்துவிட்டால் அவரை புதைத்தப்பின்னர் அவரை சார்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை முடிந்தது. ஆனால் அந்த நிம்மதிக்கூட ஒரு தோட்டிக்கு கிடையாது. தோட்டிகள் இசக்கியை புத்தைத்த இடத்தில் நாய்கள் சண்டையிட்டு இசக்கியின் பிணத்தை தோண்டி வெளியில் கொணர்ந்து போட்டிருக்கிறது. இந்த காட்சியை ஆரிசியர் விவரிக்கும் அந்த தருணம் நடு நடுங்கிப்போனேன். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய கட்டமைப்பும் அதனால் எழுந்த ஏற்றத்தாழ்வும் ஒருவனின் மரணத்திற்குப் பிறகும் தொடர்கிறது என்பதை தெளிவாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். 

சுடலைமுத்துவின் தன்மானம் என்னை அதிகம் ஈர்த்தது. தன் மகன் ஒரு தோட்டியாகக் கூடாது என்பதில் அவன் தீர்க்கமாக இருந்தான். அவனை பள்ளியில் சேர்க்க படாதபாடு பட்டான். வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு தோட்டியின் மகன் பள்ளியில் சேர்ந்திருக்கிறான். ஆனால் என்ன வருத்தமென்றால், அந்த பிள்ளையின் தகப்பனும் தாயும் வேறு ஒருவர் என்று சொல்லியே பள்ளியில் அவனை அனுமதித்தனர். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், ஒரு தோட்டியின் மகன் படிக்க நேர்ந்தாலும் அவன் தன் தாய் தந்தையரின் பெயரை அரசு பதிவேட்டில் ஏற்றாமல், வேறு ஒருவரின் மகனாகவே பள்ளியில் சேர முடியும். ச்சீ. என்னமாதிரியான சமூகம் !! தோட்டியின் மகன் படிக்க வந்துவிட்டால், அந்த வேலையை அவன் செய்ய மாட்டான். அவர்களுக்கு என்றைக்குமே அடிமைகள் தேவைப்படிகிறார்கள். 

எல்லோரும் தோட்டியை அறுவறுப்பாகவே பார்த்தனர். அவன் மீது துர்நாற்றம் வீசுவதாக அவனை எல்லோரும் தள்ளியே வைத்தனர். அப்போது சுடலை நினைக்கிறான், இவ்வளவு நாற்றமும் இந்த மனிதர்களின் உடம்பில்தான் மறைந்துள்ளது, அவர்களே இந்த நாற்றம் அனைத்திற்கும் காரணம் என்பது ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? அடடா. இப்படி தோட்டியை விலக்கி வைக்க நினைக்கும் அனைத்து மனிதனையும் செருப்பால் அடிக்கும்படியான கேள்வி இது.

தோட்டிகளுக்காக சங்கம் அமைக்க வேண்டும் என்று சுடலை விரும்புகிறான். அது மிக துணிச்சலான முடிவு. ஒற்றுமையான போராட்டமே நமக்கான உரிமையை பெற்றுத்தரும் என்பதன் வெளிப்பாடாகவே நான் இதைப் பார்க்கிறேன்.

சுடலைக்கும் வள்ளிக்குமான காதலை அழகாக விவரித்திருப்பார். 

சுந்தரத்தின் மனைவி அம்முவை வைசூரி நோய்க்காக மருத்துவமனைக்கு வலுகட்டாயமாக அழைத்து (அ) இழுத்துச் செல்லும் அந்த காட்சி கண்களின் கண்ணீரையும் மனதில் இரணத்தையும் கொணரும். அதன் பின்னர் அவன் குழந்தைகளின் நிலையை ஆசிரியர் விவரித்திருக்கும் விதம் கண்களில் குருதியை அறுவடை செய்யும்.

சங்கம் அமைக்கும் முடிவில் இருந்து பிச்சாண்டியை பின்வாங்க வைக்க அவன் மீது பொய்யான திருட்டுப் பட்டம் கட்டுவதும் அதற்கு சுடலையும் துணை நிற்பதும், பணம் என்கிற வேட்டையில் இருக்கும் மனிதன் எப்படி மனிதாபிமானத்தை இழந்து மிருகமாக பிறப்பெடுக்கிறான் என்பதை சொல்கிறது.

தன் குழந்தைக்காகவும், வரப்போகும் தலைமுறைக்காகவும் அனைத்து சுகங்களையும் துறந்து கடினமாக உழைக்கும் சுடலையின் எண்ணம் என்னை அதிகம் ஈர்த்தது. தாம்தான் தோட்டியாக இருக்கிறோம், தம் குழந்தை நிச்சயமாக தோட்டியாக மாறக்கூடாது என்பதில் விடாப்ப்டியாக இருக்கிறான். கல்வியால் மட்டுமே ஒடுக்கப்பட்ட மனிதன் ஒருவன் வாழ்வில் நல்ல மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

சுடலை தன் மகனுக்கு மோகன் என்று பெயரிடுகிறான். ஆனால் அந்த பெயர் ஒரு தோட்டியின் மகனுக்கு பொறுந்தவில்லை என்பது ஊரார் நினைப்பு. பாருங்களேன். இன்னாருக்கு இன்னப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று சமூகம் ஒரு எழுதப்படாத சட்டத்தையே போட்டுள்ளது.

வைசூரியும் காலராவும் எப்படி தோட்டிகளை மட்டுமே குறிவைத்துக் கொல்லுகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. சரியான உணவும் போதிய ஊட்டசத்தும் இல்லாமல் வாழும் வாழ்க்கை அவர்களுடையது. தோட்டிகள் மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளுக்குமே பிடித்தமான உணவென்றால் அது பட்டினிதான். இப்படி வாழும் ஒருவனை அதுவும் பிறரின் மலத்தை சுத்தம் செய்யும் ஒருவனை இதுமாதிரியான தொற்று வியாதிகள் திண்பது ஆச்சரியமில்லையே.

முதலில் பணம் பணம் என்று மட்டுமே ஓடிய சுடலை, சுடுகாட்டின் காவலாளியாக பணி மாற்றம் செய்துக்கொண்டப் பிறகு, மயானத்தில் தினம் தினம் குவியும் பிணங்களைப் பார்த்து, வாழ்க்கையின் அருமையை உணர்கிறான். ஆனால், அவன் உணர்ந்திருக்கும் அந்த நேரத்தில் மண்ணுக்குள் சென்றிருந்தான்.

அநியாயமாக வள்ளி இறந்துகிடக்கும் காட்சி மனதை உலுக்குகிறது. சுடலைக்கு வாக்கப்பட்டு வந்ததிலிருந்து அவள் செய்த தியாகங்கள் சுடலை செய்த தியாகங்களைவிடவும் பெரியது என்பேன் நான்.

எவருடனும் பழக விடாமல், மோகனை பொத்தி பொத்தி வளர்க்கும் சுடலையின் எண்ணத்தில் தவறில்லை என்றாலும், வெளி உலகமே தெரியாமல் வளரும் மோகம் மீது கொஞ்சம் பரிகாசம் ஏற்படவே செய்கிறது.

முனிசிபல் சேர்மேன் நிச்சயம் ஏமாற்றிவிடுவார் என்றே ஆரம்பத்திலிருந்தே நான் பயந்திருந்தேன். ஆனால், அவர் ஏமாற்றினாரா அல்லது அவரிடம் இருக்கும் பணத்தை சுடலை கேட்கும்போதே வேண்டுமென்றே இல்லையென்றாரா என்று ஆராய்ந்தால், அதற்கான விடை மோகன் அவர் வீட்டை கொழுத்தியபோது எழுந்த தீயின் அனலில் புரிந்தது.

சுடலை எப்படி தோட்டிகளுக்கென்று ஒரு சங்கம் வேண்டுமென்று நினைத்தானோ, பிச்சாண்டியை எந்த சங்கத்தின் காரணத்தால் திருடன் என பட்டம் சூட்டினானோ, அவன் மகனான மோகனும் சங்கத்தின் தலைவனாகி துப்பாக்கியின் தோட்டாக்களை உண்டு அந்த குழியில் செம்மாலையுடன் ஓய்வெடுக்கிறான்.

பூக்களின் வாசனையையும் தோட்டிகளின் மூக்கிற்கு நுகரத் தெரியும், இனிமையான சுவைகளையும் தோட்டியின் நாவிற்கு சுவைக்கத் தெரியும். அவர்களும் மனிதர்கள்தான் என்று சுடலையும் வள்ளியும் பட்டணத்தில் இருக்கும் அந்த பத்து நாட்களில் உணர்கின்றனர். அவர்களும்தாம் மனிதர்கள் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறார்.


இந்த நாவல் எழுதப்பட்ட ஆண்டு 1947. அப்போது இதுமாதிரியான நிலைதான் இருந்திருக்கிறது என்று நினைத்தாலே மனம் வருந்துகிறது. மனிதர்கள் எவ்வளவு ஒடுக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று நினைத்தாலே மனம் கனக்கிறது.

* தினேஷ்மாயா *

தோட்டியின் மகன்

தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளத்தில் எழுதி 1947 வெளிவந்த “தோட்டியின் மகன்” என்னும் நாவலின் தமிழாக்கத்தை சுந்தர ராமசாமி “தோட்டியின் மகன்” என்கிற தலைப்பிலேயே வெளியிட்டுள்ளார்.

இந்த நாவலை சமீபத்தில் படித்தேன். ஒரு தோட்டியின் வாழ்க்கையை, அவர்கள் சந்திக்கும் துன்பங்கள், புறக்கணிப்புகள், அவமானங்கள் அனைத்தையும் நம் கண் முன்னர் கொண்டுவந்து நிறுத்துகிறார் தகழி சிவசங்கரப் பிள்ளை. 

இதன் தமிழாக்கம் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நாவலின் முதல் பக்கத்தை படிக்க ஆரம்பிக்கும்போது ஆசிரியர் நம் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு தோட்டியின் வாழ்க்கைக்குள் கூட்டிச் செல்கிறார். அனைவரும் அறிந்திருந்தவாறு ஒரு தோட்டியின் வாழ்வில் துர்நாற்றம் மட்டுமே இல்லை.

அங்கேயும் கனவுகள் உண்டு, ஆசைகள் உண்டு. அவனுக்கும் சக மனிதனைப்போல் வாழ உரிமை உண்டு அதற்கு தகுதியும் உண்டு என்பதை சொல்லியிருக்கிறார். 

ஒரு தோட்டி என்பவன் தோட்டியால் சிருஷ்டிக்கப்படுவதில்லை. காலமும் சமூகமுமே ஒருவனை தோட்டியாக்குகிறது என்பதை விளக்கியிருப்பார். சுடலைமுத்து தன் மகன் தோட்டியாக மாறக்கூடாது என்று அவன் காணும் கனவில் நியாயம் தெரிகிறது. அவன் தன்மானத்தின் வெளிப்பாடாக சித்தரிக்கப்படுகிறான்.

ஆனால் சில நேரங்களில் அவன் கனவு வெறியாக மாறுவதையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். தோட்டியின் மகனுக்கு மோகன் என்ற பெயர் கொஞ்சமும் ஒட்டவில்லை என்பதை அந்த ஆலப்புழா நகரத்துவாசிகளின் எள்ளல்களாலும் சிரிப்புகளாலும் சொல்வதில் இருந்து, மனித மனதின் ஆழத்தில் குடிக்கொண்டிருக்கும் குரூரத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார்.

தோட்டியின் மகனாய் மாறிய மோகன் ஒரு புரட்சியாளனாய் மாறி ஒரு தலைவனாய் செந்நிற மாலையை சுமந்து நிற்கின்றான். 

தலித் இலக்கியத்தில் இந்த நாவல் ஒரு மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் அப்படியே காட்டுகிறது. இந்த நாவல் எழுதப்பட்டது 1947 என்றாலும், இன்றும் பல மக்களின் நிலை இதில் வரும் மக்களின் நிலையை ஒத்துள்ளது என்பதை உணரும்பொழுது, நாம் ஒரு சமூகமாக தோற்றுவிட்டோம் என்பதையே காட்டுகிறது.

நேரம் கிடைத்தால் இந்த நாவலை தவறாமல் படித்துப் பார்க்கவும்.

நன்றி..


* தினேஷ்மாயா *


இரகசியம்

Monday, June 21, 2021


உன் ரவிக்கை ரகசியம் அறிய வந்தவனை

மஞ்சள் கயிறெனும் வேலியால் தடுத்துவிட்டாயே !

* தினேஷ்மாயா *


தொடரும்


அதிகாலை பனித்துளிக்கும் புல்லுக்குமான தொடர்பு

சூரியன் வரும்வரை...

உனக்கும் எனக்குமான அன்பு

மரணம் வரும்வரை...

* தினேஷ்மாயா *

கடற்கன்னி



கடற்கன்னிகள் உண்மையல்ல என்றிருந்தேன்.

கடற்கரையில் அவளைக்காணும் வரையில்..

* தினேஷ்மாயா *



 

பரப்பிரம்மம்

ஆரம்பத்தில் ரிக் வேதம் மற்றும் பிற வேத, ஆரன்யக, உபநிடத நூல்களில் எல்லாம் கடவுளைப்பற்றிய பிம்பம் ஒருவாறாக கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற்காலத்தில் இதை கேள்வி கேட்கும் முற்போக்கு சிந்தனையாளர்கள் வரலாம் என்று எவனோ ஒருவன் நினைத்திருக்கிறான். அவன் உருவாக்கிய பொய்யான சித்தாந்தமே இந்த “பரப்பிரம்மம்” என்பது.

கடவுள் எங்கே இருக்கிறார் அவரைக் காட்டுங்கள் என்று கேட்போருக்கு, அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று பதில் கூறவே இந்த பரப்பிரம்மம் சித்தாந்தம் உருவாக்கப்பட்டது. காற்றைப்போல எங்கும் இருப்பவரை நீதான் உணர வேண்டும், உன் கண்களுக்கெல்லாம் தெரியாது, நீயே உணர்ந்து புரிந்துக்கொள் என்று கிளப்பிவிட்டான்.

அவன் சொல்லிவிட்டுச் சென்றதை, ஏன் என்று எவரும் கேள்விகேட்காமல், அவன் சொன்னது உண்மைதானா என்றும் ஆராயாமல் அப்படியே அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தொடங்கினர். 

இந்த உண்மையை அறிந்து, பரப்பிரம்மம் என்று ஏதுமில்லை என்பதை உணர்வோமாக.

* தினேஷ்மாயா *

பித்தலாட்டம்

 கடவுள் பெயரால் நடக்கும் பொய்யும் பித்தலாட்டத்தையும் கடவுள் கண்டுக்கொள்ளவோ தடுக்காதபோதுதான் புரிகிறது, கடவுள் என்கிற சித்தாந்தமே பொய்யும் பித்தலாட்டமுமே என்று...

* தினேஷ்மாயா *

புலம்பல்கள்

Thursday, June 10, 2021

நான் உன்னுடன் பேச நினைத்து, என்னுள்ளேயே பேசிக்கொண்ட வார்த்தைகளை சேமித்தால் ஆயிரம் பக்கங்கள் கொண்ட பல புத்தகங்களை பிரசுரிக்கலாம்.

நான் உன்னிடம் அழ நினைத்து, கண்ணீர் வரும்படி தனியாகவும், கண்ணீரை வெளிப்படுத்தாமல் என்னுள்ளும் தொண்டை தழுதழுக்க அழுதபோது வெளிப்பட்ட கண்ணீரை எல்லாம் சேமித்தால் செவ்வாய் கிரகத்தில் இவ்வுலகின் அனைத்து உயிரினங்களும் வாழப் போதுமான நீரை காணலாம்.

நான் உன்னிடம் காட்ட விரும்பி, ஆனால் உன்னிடம் வெளிக்காட்டாமல் விட்ட அன்பினை சேமித்தால், பிரபங்சத்தையே நிரப்பிடலாம்.

* தினேஷ்மாயா *

44-வது சென்னை புத்தகக்காட்சி



 

ஏறத்தாழ பல ஆண்டுகள் கழித்து, சென்னை புத்தகக் காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

44-வது சென்னை புத்தகக் காட்சியில்..

* தினேஷ்மாயா *

மனிதத்தை மீட்டெடுப்போம்

 நாம் நிம்மதியாய் வாழ எதுவும் தேவையில்லை. நம் வாழ்க்கையையும், நிம்மதியையும் கெடுக்கவே இங்கே பல விடயங்கள் இருக்கின்றன. மனிதனை மகிழ்விக்க கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் இன்று மனிதனையும் மனிதத்தையும், பல நாள் பசியா இருந்த மலைப்பாம்பு தனக்கு கிடைத்த சிறு ஆட்டுக்குட்டியை விழுங்குவதைப்போல விழுங்கிக்கொண்டிருக்கிறது.

இதனாலேயே, மனித உறவுகளில் அதிகம் பிளவு ஏற்படுகிறது. ஒரே இடத்தில் இருந்து மட்டுமே தொலைப்பேசியை பேச முடியும் என்கிற வசதியே முன்னர் இருந்தது. நாம் எங்கு இருக்கிறோமோ அங்கும் நம் தொலைப்பேசியை எடுத்துக்கொண்டு செல்லலாம் என்கிற நிலை வந்தது. தொலைக்காட்சியில் பார்க்கும் அனைத்தையும் நம் தொடுதிரை தொலைப்பேசியில் காணும்படி செய்துவிட்டனர். பிறகென்ன, நிற்கும்போது, நடக்கும்போது, உறங்கும்போது இப்படி எல்லா நேரங்களிலும் தொலைப்பேசி தொல்லைப்பேசியாக நம்முடன் பயணிக்கிறது. இறந்தபிறகு மனிதனுடன் சேர்த்து புதைக்கப்படுவதில்லை, அதைத்தவிர இந்த தொல்லைப்பேசி மனித உறவுகளை மேம்படுத்துவதை விடவும் அதிகம் பிளவையே ஏற்படுத்துவதை உணர முடிகிறது.

ஒரு மாதம் முழுவதற்கும் 1GB data பயன்படுத்திய நாம், இன்று ஒரு நாளைக்கு 1.5 GB data நமக்கு போதவில்லை. இணையம் என்வது சிலந்திவலை. அதில் இரைகள் சிக்குண்டு சிலந்திக்கு உணவாவதுபோல, அந்த வலையில் நாமும் சிக்குண்டு நம் மனிதத்தையும், வாழ்க்கையையும் நாசமாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. நல்ல விடயங்களுக்காக இணையம் பயன்பட்டாலும், குணம் நாடி குற்றமும் நாடி என்கிற விதிப்படி பார்த்தால், இதில் குணங்களைவிடவும் குற்றங்களே அதிகம் என்பது திண்ணம்.

உறவுகளையும், உணர்வுகளையும், மனிதத்தையும் மீட்டெடுப்போம். 

* தினேஷ்மாயா *

be happy

 every human 100% deserve to live happy...

--------------------

that's the message..

*DhineshMaya*

நீண்ட ஆயுள்

Monday, June 07, 2021

ஒரு மனிதனுக்கு மரணம் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஒருவர் இயற்கையாக மரணிக்கிறார் என்றால், அவர் நீண்ட காலம் வாழ்ந்தபிறகே இறப்பார். ஒருவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டுமானால், முதலில் தன் வாழ்வில் கோபத்தை அவர் விட்டொழிக்க வேண்டும். 
எவர் ஒருவர் கோபம் கொள்ளாமல் இருக்கிறாரோ, அவர் நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.

* தினேஷ்மாயா *

என்னுள்ளே என்னுள்ளே

Tuesday, June 01, 2021

 


வானத்தை அடைய வழிகள் வேண்டா

எவ்விடத்திலிருந்தும் வானை அடையலாம்..

உன்னை அடையவும் வழிகள் வேண்டா

என்னுள்ளேயே உறைந்திருக்கும் உன்னை !!

* தினேஷ்மாயா *

சரணாகதி



எங்கிருந்து விழுந்தாலும்

பூமியின் மீதுதான் விழுந்தாக வேண்டும்..

நானும் எவ்விடத்தே இருப்பினும்

என் நினைவுகள் உன்னை மட்டுமே

சரணடையும் !!

* தினேஷ்மாயா * 

அமில மழை



அது என்னவோ குளிர்மழை தான்

ஆனால் - 

அந்த குளிர் மழையில்

நீயும் என்னருகில் இருக்கையில்

என்னுள் ஏனோ

அமில மழை !!

 * தினேஷ்மாயா *

நெஞ்சத்துப் பூச்சி


வானில் உலவும் வண்ணத்துப்பூச்சி

நீ இருக்கும் நெஞ்சத்துள் நுழைந்துவிட்டது...

தன் இராணியான

உன்னைக் காண...

* தினேஷ்மாயா *

வரட்டுமே !!

Monday, May 24, 2021

 நான் வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்துவிட்டேனா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், இப்போழ்தே மரணம் என்னைத் தழுவினாலும் இவ்வுலகை விட்டு விடைப்பெற என் மனம் தயாராகிவிட்டது. வாழ்க்கையின் மீது துளியும் வெறுப்பில்லை. உலகின் மீதும், உலகத்து மானிடர்கள் மீதும்கூட எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. வாழ்க்கை என்பதன் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரிய துவங்கியிருக்கிறது. அதனால், நான் கண்ட உண்மைகளை வெளியில் சொல்ல முடியாமல், எவருடனும் பேசுவதில் நாட்டம் காட்டாமல் இருக்கிறேன். உண்மை என்னவென்று உணர்ந்தவன், அதை பிறருக்கு சொல்ல விரும்பமாட்டான். ஏனென்றால், இங்கே இருப்பவர்கள் எவருக்கும் உண்மை என்பது ஒரு கசப்பான விடயம். அதை கேட்கும் பக்குவமோ, நேரமோ அல்லது பொறுமையோ இல்லை. 

மனம் செம்மையாகிவிட்ட காரணத்தால், மரணம் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. மரணம்தானே. வந்தால் வரட்டுமே ! என்று மனம் தயாராகிவிட்டது !!

* தினேஷ்மாயா *

ABC - கவிதை !

Monday, May 17, 2021


உன் A-காந்தப் பார்வை

என்மீது B-ரங்கியாய் துளைக்க

என் C-று இதயமோ 

நொறுங்கிப் போகிறதடி..

* தினேஷ்மாயா *


ஒன்னுமில்லை

Monday, May 10, 2021

 பெரும்பாலும் பலர் என்னிடம் "என்னாச்சு" என வினவும் நேரங்களில்

"ஒன்னுமில்லை" என்கிற பொதுவான பதிலையே அவர்களிடம் தூவிவிட்டு நடையை கட்டுகிறேன்.

அந்த "ஒன்னுமில்லை" அல்லது "Nothing. Am alright" என்னும் வாசகத்திற்குள் சொல்லி புரிய வைக்க முடியாத, சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத, சொல்லக் கூடாத, சொன்னால் மட்டும் புரிந்துவிடுமா, சொல்லி மட்டும் என்னாகப் போகிறது இப்படி பல அர்த்தங்கள் புதைந்திருக்கலாம்.

வலியை மறைத்துக்கொண்டு நான் உதிர்க்கும் அந்த குறும் புன்னகை, பின்னாளில் ரணமாய், ஆறா வடுவாய் என் மனதில் விருட்சமாய் வளர்ந்திருக்கும்..

* தினேஷ்மாயா *

நிழலினை நிஜமும்...

Monday, May 03, 2021

நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க

விதி செய்த சதியா தெரியலம்மா
கடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேத்துக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ஆ..


பாடல்: நிழலினை நிஜமும் பிரிந்திடுமா 
படம்: ராம்

#பிடித்த_வரிகள்

* தினேஷ்மாயா *

தவணை

Tuesday, March 16, 2021

 தவணை முறையில்

அவள் அழகை

இரசித்துக் கொண்டிருக்கிறேன்..

- தினேஷ்மாயா 

வாழ்வின் சூட்சுமம்

 எனக்கு வாழவே பிடிக்கலனு சொல்ற நிலைமை நம் எல்லோருக்கும் எப்போதாவது ஒரு கட்டத்தில் வந்திருக்கும். ஆனால் அத்தோடு நொடிந்துப் போகாமல், வாழ்வை எதிர்நோக்கி நடப்பதில்தான் வாழ்வின் சூட்சுமமே அடங்கி இருக்கிறது. அடுத்த நொடி நமக்கு பல ஆச்சரியங்களை மறைத்து வைத்திருக்கலாம், அதில் வலிகளும் கலந்திருக்கலாம். இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை. கண்ணீர் சிந்தி வருந்துவதைவிட, வியர்வை சிந்தி உயர்வது உத்தமம்.

-தினேஷ்மாயா

மோகத்தீ

Saturday, March 13, 2021


என் மோகத்தீ

உன் பாதம் பட்ட

அந்நொடியே

உருகி

டி

து

.

.

.


* தினேஷ்மாயா  *

ஒற்றை உயிர்

 


என் ஒற்றை உயிர்

பல துண்டுகளாக உடைந்து

அந்த சலங்கைக்குள்

அடைந்து கிடக்கிறது..

நானே ஆடி ஆடி

என்னை உயிர்ப்பிக்கிறேன்..

* தினேஷ்மாயா *

தாண்டவக்கோனே...

 


சலங்கைகள் 

என் காலில் சேர்ந்ததும்

ஆடல் நாயகனாம்

சிவனும் தோற்கும்படி

உருத்திர தாண்டவமே

அரங்கேற்றி விடுகிறேன்..

* தினேஷ்மாயா *

அறம் பொருள் இன்பம்

Monday, March 08, 2021

 அறம் என்பது ஆண்.

ஆண், அறத்துடன் நிற்றல் வேண்டும்.

பொருள் என்பது பெண்.

பெண், பொருளை நிர்வகிப்பதில் தனித்து விளங்க வேண்டும்.

அறமும் பொருளுமாகிய ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே நிலையான இன்பம் கிடைக்கும்.

இந்த தத்துவத்தையே வள்ளுவப் பெருந்தகை நமக்கு அருளியுள்ளார்..

* தினேஷ்மாயா *

மூலதனம்

 பொதுமக்களின் மூடத்தனமே, இன்று பல்கிப் பெருகி இருக்கும் கார்ப்பரேட் சாமியார்களின் மூலதனம்.

 * தினேஷ்மாயா *

என்ன மாயம்?

Thursday, February 25, 2021



நிலவு இறங்கி வந்து

விளக்கேற்றும் மாயம் என்னவோ ?

* தினேஷ்மாயா *

செய்தீ....

Friday, February 19, 2021

 செய்தித்தாளில் மட்டுமே செய்திகளைப் படித்துத் தெரிந்துக்கொண்டிருந்த வரையில், இந்த சமூகமும் நம் வாழ்க்கையும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது எனலாம்.

முன்பெல்லாம் உண்மையிலேயே எதாவது முக்கிய செய்தி இருந்தால் மட்டுமே, நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு Flash News என்று வாசிப்பார்கள்.

ஆனால், இன்று பல செய்தி சேனல்கள் வந்தபிறகு, ஆத்தூரில் கிணற்றில் மாடு விழுந்தது, தஞ்சையில் சாலையில் எதிர்கட்சி கவுன்சிலர் டீ குடித்தது, காஞ்சியில் இரு சாரார் இடையே நடந்த சிறு சண்டை, அடுத்த வாரம் வரும் புயலுக்கு இன்றிலிருந்தே முழுநேர கவரேஜ் இப்படி எதுவெல்லாமோ Flash News, Breaking News, Hot News என்று ஒளிபரப்பு செய்கிறார்கள்.

24 மணி நேர செய்தி சேனலை வைத்துக்கொண்டு செய்திகளுக்கு அவர்கள் என்ன செய்வார்கள். விளம்பரம்தான் அவர்களுக்கு மிகப்பெரிய வருமானம். அதை ஈர்க்க, இவ்வாறான செய்திகளை மக்களிடையே பரப்ப வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

Business Ethics, News Ethics இதெல்லாம் மலையேறிவிட்டது. 

Non Stop News என்று நிகழ்ச்சிப்பெயர் வைத்துவிட்டு 30 நிமிடத்தில் 20 நிமிடம் விளம்பரம் போடுகிறார்கள். 

இவர்கள் விவாத நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று உப்பு சப்பில்லாத விசயத்தை காரசாரமாக விவாதம் செய்கிறதாக எண்ணிக்கொண்டு தெருவில் இரவில் சண்டையிடும் விலங்கினங்கள் போல கத்துகிறார்கள். 

செய்தியாளரோ, ஒரு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே சென்று நேரலையில் தகவல் தருகிறேன் என்று கண்டதை உளறுகிறார். நீங்கள் இந்த காட்சியை பலமுறை கண்டிருப்பீர்கள்.

ஊடகம் என்பது உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு எடுத்துரைக்கும் காலம் போய், மக்களுக்கு எதை தெரியப்படுத்த வேண்டும் எதை தெரியப்படுத்தக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்து செய்திகளை ஒளிபரப்பு செய்கிறார்கள்.

ஊடக தர்மம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை என்னால் உணர முடிகிறது.

"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"

* தினேஷ்மாயா *

செயலின் செல்வர்

Monday, February 08, 2021

சொல்லின் செல்வர் பலர் உண்டு.

எவர் ஒருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக இடைவெளி இல்லையோ அவரையே உயர்ந்த மனிதர் என நான் ஏற்பேன்.

அவ்வாறே, நானும் உயர்ந்த மனிதனாய் திகழ முயன்றும் வருகிறேன்..

* தினேஷ்மாயா *

HAPPY NEW YEAR 2021

Friday, January 01, 2021


 

- DhineshMaya