நீங்க தலித்தா ?

Monday, July 26, 2021

இயற்கையே ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. இயற்கையை சார்ந்தே அமைந்த மனிதனின் வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததே. ஆனால், ஆதி மனிதனின் காலத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் யாவும், வளங்களை வைத்தே எழுந்தவை. ஒருவன் இருக்கும் இடத்தில் நிர் வளம் இருக்கும் இன்னொருவன் வசிக்கும் இடத்தில் மண் வளம் இருக்கலாம். இதனால் ஒருவனைவிட மற்றொருவன் செழிப்பாக வாழ முடிந்தது அதன் பொருட்டு மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு எழுந்தது. என்றைக்கு மதம் என்கிற பெயரில் இங்கே சாதிய வேற்றுமைகள் எழுந்ததோ அன்றுமுதல் இயற்கையால் மட்டுமின்றி செயற்கையாக மனிதனால் மனிதனுக்கிடையே பல ஏற்றத்தாழ்வுகள் எழத்துவங்கின. இதனால் ஒருவனை இன்னொருவன் அடக்கி ஆள முயல்வதும், அடிமையாய் நடத்துவதும், பல மனிதர்கள் குரலற்று போவதும், எதிர்த்தால் நசுக்கப்படுவதும் சில சமயங்களுல் வேறருக்கப்படுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் எனக்கிருந்த கனவை நோக்கிய என் பயணத்தால் அதில் மட்டுமே என் கவனம் முழுவதும் இருந்தது. இன்று என் கனவை எட்டிவிட்டப் பிறகு,வாழ்க்கையில் திருமணம் குழந்தை என்கிற பொறுப்புகள் வந்தபிறகு என் பார்வை விசாலமானது. தெரியாத பல சங்கதிகளை தேடித்தேடி தெரிந்துக்கொண்டே இருக்கிறேன். இதுநாள் வரையில் நான் கண்ட, கேட்ட, என்னை நம்பவைத்த பல விடயங்கள் யாவும் மாயையே என்பதை உணர ஆரம்பித்திருக்கிறேன். சாதி என்னும் பெயரால் இங்கே நம் சமூகத்தில் நடந்துக்கொண்டிருக்கும் அவலங்கள் என் கண்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. ஆதிக்க சாதியினர் என்று சிலர் தங்களை எண்ணிக்கொண்டு வேறு சில சாதியினரை ஒடுக்குகின்றனர். இந்த ஒடுக்கப்பட்டவர்கள் யாரென்று பார்த்தால் அவர்களோடு என்னால் எளிதில் தொடர்புப் படுத்திக்கொள்ள முடிகிறது. நான் தினமும் காணும் மனிதர்களே அவர்கள். தங்கள் வாழ்க்கையில் எப்படியாவது வெளிச்சம் வந்துவிடாதா என்கிற நப்பாசையுடன் உழைக்கும் ஏழை வர்க்கம். இங்கே பொருளாதாரத்தால் மட்டும் இங்கே வர்க்க பேதங்கள் இல்லை, அதையும் தாண்டி, சாதியினால் ஏற்பட்டிருக்கும் வர்க்க பேதமே பெரிதாய் தெரிகிறது. பெரும்பாலும், ஒடுக்கப்பட்ட சாதியினரே ஏழைகள் என்னும் வட்டத்தின் பெரும்பகுதிக்குள் அடங்குகின்றனர். பிராமணர் சாதியிலும் உணவுக்காக ஏங்கும் ஏழைகளும் உள்ளனர் அதேசமயம் ஒடுக்கப்பட்ட சாதி என்று சொல்லப்படும் மக்களிடையே கோடிஸ்வரனும் உண்டு. ஆனால், பெரும்பான்மை என்று வந்தால், ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் ஏழைகளாக இருக்கின்றனர் என்று தரவுகள் சொல்கிறது. 

இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதாலும், அவர்களின் பிரச்சனைகளை பொதுவெளியில் பேசுவதாலும், பிறரிடம் இவர்களுக்காக இவர்களின் குரலாக என் குரலை பதிவு செய்யும் தருணங்களிலும் நான் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான்... நீங்க தலித்தா?

இதற்கு சுற்றி வளைத்து பதில் அளிக்க நான் விரும்பவில்லை. நேராகவே சொல்கிறேன்.

ஆம். நான் தலித் தான்.

தலித் என்றால் யார் ?

தலித் என்பதற்கு உடைந்த / சிதறடிக்கப்பட்ட / சிதைக்கப்பட்ட / ஒடுக்கப்பட்ட என்று பொருள். ஆனால், இன்றைய சமூகத்தில் தலித் என்னும் வார்த்தை பட்டியலின மக்களை மட்டுமே குறிக்கும் ஒரு வார்த்தையாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.

வேதங்களின் படி பார்த்தால், பிராமணர்களைத் தவிர இன்று இருக்கும் அத்தனை மக்களும் சூத்திரர்களே. அதாவது, அவா பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் இங்கே இருப்பவர்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று அவா மற்ற அனைவரும் தலித்துகள்.

என்னை நோக்கி நீங்க தலித்தா என்று கேட்கும் அந்த நபர்களும் தலித்தான் என்று அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் நான் ?

நான் கடந்து வந்த 32 ஆண்டுகால வாழ்க்கையில் பல வெற்றிகளை நான் சந்தித்திருந்தாலும் அவற்றைவிட ஆயிரக்கணக்கில் அவமானங்களை சந்தித்திருக்கிறேன். ஒடுக்கப்பட்டிருக்கிறேன். புறக்கணிக்கப்பட்டிருக்கிறேன். வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டிருக்கிறேன். செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவித்திருக்கிறேன். என் பக்க நியாயத்தை சொல்லவிடாமல் அமுக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளை வேண்டுமென்றே தடுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாதபடி தள்ளப்பட்டிருக்கிறேன் அதையும் மீறி குரல் கொடுத்தால் அது பலனளிக்காமல் போகும்படி செய்வதை கண்டிருக்கிறே.

நிலமும் செல்வமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, கடனில் நீந்தி, வட்டிக்கு முத்தமிட்டு, தோல்விகளையும் அவமானங்களையும் அணைத்தவாறு பயணித்து, கல்வி என்னும் ஒற்றை ஆயுதத்தால் வாழ்வில் நல்ல நிலையை எட்டியிருக்கிறேன். நான் தலித்தாக இல்லாமலிருந்திருந்தால் இந்நேரம் வெளிநாட்டில் குடியேறி பத்து ஆண்டுகள் ஓடியிருக்கும். 

தலித் என்பது ஒரு சாதியை அடையாளப்படுத்தும் வார்த்தை அல்ல. அது ஒரு புரட்சியின் வெளிப்பாடு. இங்கே ஒடுக்கப்படும் அனைவரும் தலித்துதான் என்பதை எப்போது உணரப்போகிறோம்.  இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். அதை நீங்கள் உணர்ந்தவராக இருக்கலாம், அல்லது இனிமேல் உணர்பவராக இருக்கலாம். ஆனால் உண்மை என்பது இதுதான்.

ஆம். நான் தலித் தான்.

உங்களையும் போல.

* தினேஷ்மாயா *


தோட்டியின் மகன் - படித்ததில் பிடித்தது


 


தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்களின் தோட்டியின் மகன் என்னும் நாவலில் என்னை பாதித்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

இசக்கிமுத்து நோய்வாய்ப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கையில், ஓவர்சீயரிடம் பேசி தன் வேலையை தன் மகனான சுடலைமுத்துவிற்கு வாங்கிக் கொடுக்கிறார். மறுநாள் வாளியையும், மண்வெட்டியையும் எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்லும் சுடலைமுத்து, தன்மானம் உள்ளவனாக நடந்துக்கொள்கிறான். வேலையையும் விரைவிலேயே நன்கு கற்று தேர்கிறான். ஆனால் அவன் சுயமரியாதை தன் தந்தையை பட்டினியால் கொன்றுவிடுகிறது. இறந்துப்போன இசக்கியை புதைக்கக்கூட தோட்டிகளால் முடியவில்லை. அதற்கும் காசு தேவைப்படுகிறது. காசு இல்லாத காரணத்தினால் ஒரு ஆலமரத்தின் அடியில் குழித்தோண்டி புதைக்கிறார்கள். பெரும்பாலும் ஒருவர் இறந்துவிட்டால் அவரை புதைத்தப்பின்னர் அவரை சார்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை முடிந்தது. ஆனால் அந்த நிம்மதிக்கூட ஒரு தோட்டிக்கு கிடையாது. தோட்டிகள் இசக்கியை புத்தைத்த இடத்தில் நாய்கள் சண்டையிட்டு இசக்கியின் பிணத்தை தோண்டி வெளியில் கொணர்ந்து போட்டிருக்கிறது. இந்த காட்சியை ஆரிசியர் விவரிக்கும் அந்த தருணம் நடு நடுங்கிப்போனேன். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய கட்டமைப்பும் அதனால் எழுந்த ஏற்றத்தாழ்வும் ஒருவனின் மரணத்திற்குப் பிறகும் தொடர்கிறது என்பதை தெளிவாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். 

சுடலைமுத்துவின் தன்மானம் என்னை அதிகம் ஈர்த்தது. தன் மகன் ஒரு தோட்டியாகக் கூடாது என்பதில் அவன் தீர்க்கமாக இருந்தான். அவனை பள்ளியில் சேர்க்க படாதபாடு பட்டான். வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு தோட்டியின் மகன் பள்ளியில் சேர்ந்திருக்கிறான். ஆனால் என்ன வருத்தமென்றால், அந்த பிள்ளையின் தகப்பனும் தாயும் வேறு ஒருவர் என்று சொல்லியே பள்ளியில் அவனை அனுமதித்தனர். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், ஒரு தோட்டியின் மகன் படிக்க நேர்ந்தாலும் அவன் தன் தாய் தந்தையரின் பெயரை அரசு பதிவேட்டில் ஏற்றாமல், வேறு ஒருவரின் மகனாகவே பள்ளியில் சேர முடியும். ச்சீ. என்னமாதிரியான சமூகம் !! தோட்டியின் மகன் படிக்க வந்துவிட்டால், அந்த வேலையை அவன் செய்ய மாட்டான். அவர்களுக்கு என்றைக்குமே அடிமைகள் தேவைப்படிகிறார்கள். 

எல்லோரும் தோட்டியை அறுவறுப்பாகவே பார்த்தனர். அவன் மீது துர்நாற்றம் வீசுவதாக அவனை எல்லோரும் தள்ளியே வைத்தனர். அப்போது சுடலை நினைக்கிறான், இவ்வளவு நாற்றமும் இந்த மனிதர்களின் உடம்பில்தான் மறைந்துள்ளது, அவர்களே இந்த நாற்றம் அனைத்திற்கும் காரணம் என்பது ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? அடடா. இப்படி தோட்டியை விலக்கி வைக்க நினைக்கும் அனைத்து மனிதனையும் செருப்பால் அடிக்கும்படியான கேள்வி இது.

தோட்டிகளுக்காக சங்கம் அமைக்க வேண்டும் என்று சுடலை விரும்புகிறான். அது மிக துணிச்சலான முடிவு. ஒற்றுமையான போராட்டமே நமக்கான உரிமையை பெற்றுத்தரும் என்பதன் வெளிப்பாடாகவே நான் இதைப் பார்க்கிறேன்.

சுடலைக்கும் வள்ளிக்குமான காதலை அழகாக விவரித்திருப்பார். 

சுந்தரத்தின் மனைவி அம்முவை வைசூரி நோய்க்காக மருத்துவமனைக்கு வலுகட்டாயமாக அழைத்து (அ) இழுத்துச் செல்லும் அந்த காட்சி கண்களின் கண்ணீரையும் மனதில் இரணத்தையும் கொணரும். அதன் பின்னர் அவன் குழந்தைகளின் நிலையை ஆசிரியர் விவரித்திருக்கும் விதம் கண்களில் குருதியை அறுவடை செய்யும்.

சங்கம் அமைக்கும் முடிவில் இருந்து பிச்சாண்டியை பின்வாங்க வைக்க அவன் மீது பொய்யான திருட்டுப் பட்டம் கட்டுவதும் அதற்கு சுடலையும் துணை நிற்பதும், பணம் என்கிற வேட்டையில் இருக்கும் மனிதன் எப்படி மனிதாபிமானத்தை இழந்து மிருகமாக பிறப்பெடுக்கிறான் என்பதை சொல்கிறது.

தன் குழந்தைக்காகவும், வரப்போகும் தலைமுறைக்காகவும் அனைத்து சுகங்களையும் துறந்து கடினமாக உழைக்கும் சுடலையின் எண்ணம் என்னை அதிகம் ஈர்த்தது. தாம்தான் தோட்டியாக இருக்கிறோம், தம் குழந்தை நிச்சயமாக தோட்டியாக மாறக்கூடாது என்பதில் விடாப்ப்டியாக இருக்கிறான். கல்வியால் மட்டுமே ஒடுக்கப்பட்ட மனிதன் ஒருவன் வாழ்வில் நல்ல மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

சுடலை தன் மகனுக்கு மோகன் என்று பெயரிடுகிறான். ஆனால் அந்த பெயர் ஒரு தோட்டியின் மகனுக்கு பொறுந்தவில்லை என்பது ஊரார் நினைப்பு. பாருங்களேன். இன்னாருக்கு இன்னப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று சமூகம் ஒரு எழுதப்படாத சட்டத்தையே போட்டுள்ளது.

வைசூரியும் காலராவும் எப்படி தோட்டிகளை மட்டுமே குறிவைத்துக் கொல்லுகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. சரியான உணவும் போதிய ஊட்டசத்தும் இல்லாமல் வாழும் வாழ்க்கை அவர்களுடையது. தோட்டிகள் மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளுக்குமே பிடித்தமான உணவென்றால் அது பட்டினிதான். இப்படி வாழும் ஒருவனை அதுவும் பிறரின் மலத்தை சுத்தம் செய்யும் ஒருவனை இதுமாதிரியான தொற்று வியாதிகள் திண்பது ஆச்சரியமில்லையே.

முதலில் பணம் பணம் என்று மட்டுமே ஓடிய சுடலை, சுடுகாட்டின் காவலாளியாக பணி மாற்றம் செய்துக்கொண்டப் பிறகு, மயானத்தில் தினம் தினம் குவியும் பிணங்களைப் பார்த்து, வாழ்க்கையின் அருமையை உணர்கிறான். ஆனால், அவன் உணர்ந்திருக்கும் அந்த நேரத்தில் மண்ணுக்குள் சென்றிருந்தான்.

அநியாயமாக வள்ளி இறந்துகிடக்கும் காட்சி மனதை உலுக்குகிறது. சுடலைக்கு வாக்கப்பட்டு வந்ததிலிருந்து அவள் செய்த தியாகங்கள் சுடலை செய்த தியாகங்களைவிடவும் பெரியது என்பேன் நான்.

எவருடனும் பழக விடாமல், மோகனை பொத்தி பொத்தி வளர்க்கும் சுடலையின் எண்ணத்தில் தவறில்லை என்றாலும், வெளி உலகமே தெரியாமல் வளரும் மோகம் மீது கொஞ்சம் பரிகாசம் ஏற்படவே செய்கிறது.

முனிசிபல் சேர்மேன் நிச்சயம் ஏமாற்றிவிடுவார் என்றே ஆரம்பத்திலிருந்தே நான் பயந்திருந்தேன். ஆனால், அவர் ஏமாற்றினாரா அல்லது அவரிடம் இருக்கும் பணத்தை சுடலை கேட்கும்போதே வேண்டுமென்றே இல்லையென்றாரா என்று ஆராய்ந்தால், அதற்கான விடை மோகன் அவர் வீட்டை கொழுத்தியபோது எழுந்த தீயின் அனலில் புரிந்தது.

சுடலை எப்படி தோட்டிகளுக்கென்று ஒரு சங்கம் வேண்டுமென்று நினைத்தானோ, பிச்சாண்டியை எந்த சங்கத்தின் காரணத்தால் திருடன் என பட்டம் சூட்டினானோ, அவன் மகனான மோகனும் சங்கத்தின் தலைவனாகி துப்பாக்கியின் தோட்டாக்களை உண்டு அந்த குழியில் செம்மாலையுடன் ஓய்வெடுக்கிறான்.

பூக்களின் வாசனையையும் தோட்டிகளின் மூக்கிற்கு நுகரத் தெரியும், இனிமையான சுவைகளையும் தோட்டியின் நாவிற்கு சுவைக்கத் தெரியும். அவர்களும் மனிதர்கள்தான் என்று சுடலையும் வள்ளியும் பட்டணத்தில் இருக்கும் அந்த பத்து நாட்களில் உணர்கின்றனர். அவர்களும்தாம் மனிதர்கள் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறார்.


இந்த நாவல் எழுதப்பட்ட ஆண்டு 1947. அப்போது இதுமாதிரியான நிலைதான் இருந்திருக்கிறது என்று நினைத்தாலே மனம் வருந்துகிறது. மனிதர்கள் எவ்வளவு ஒடுக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று நினைத்தாலே மனம் கனக்கிறது.

* தினேஷ்மாயா *

தோட்டியின் மகன்

தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளத்தில் எழுதி 1947 வெளிவந்த “தோட்டியின் மகன்” என்னும் நாவலின் தமிழாக்கத்தை சுந்தர ராமசாமி “தோட்டியின் மகன்” என்கிற தலைப்பிலேயே வெளியிட்டுள்ளார்.

இந்த நாவலை சமீபத்தில் படித்தேன். ஒரு தோட்டியின் வாழ்க்கையை, அவர்கள் சந்திக்கும் துன்பங்கள், புறக்கணிப்புகள், அவமானங்கள் அனைத்தையும் நம் கண் முன்னர் கொண்டுவந்து நிறுத்துகிறார் தகழி சிவசங்கரப் பிள்ளை. 

இதன் தமிழாக்கம் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நாவலின் முதல் பக்கத்தை படிக்க ஆரம்பிக்கும்போது ஆசிரியர் நம் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு தோட்டியின் வாழ்க்கைக்குள் கூட்டிச் செல்கிறார். அனைவரும் அறிந்திருந்தவாறு ஒரு தோட்டியின் வாழ்வில் துர்நாற்றம் மட்டுமே இல்லை.

அங்கேயும் கனவுகள் உண்டு, ஆசைகள் உண்டு. அவனுக்கும் சக மனிதனைப்போல் வாழ உரிமை உண்டு அதற்கு தகுதியும் உண்டு என்பதை சொல்லியிருக்கிறார். 

ஒரு தோட்டி என்பவன் தோட்டியால் சிருஷ்டிக்கப்படுவதில்லை. காலமும் சமூகமுமே ஒருவனை தோட்டியாக்குகிறது என்பதை விளக்கியிருப்பார். சுடலைமுத்து தன் மகன் தோட்டியாக மாறக்கூடாது என்று அவன் காணும் கனவில் நியாயம் தெரிகிறது. அவன் தன்மானத்தின் வெளிப்பாடாக சித்தரிக்கப்படுகிறான்.

ஆனால் சில நேரங்களில் அவன் கனவு வெறியாக மாறுவதையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். தோட்டியின் மகனுக்கு மோகன் என்ற பெயர் கொஞ்சமும் ஒட்டவில்லை என்பதை அந்த ஆலப்புழா நகரத்துவாசிகளின் எள்ளல்களாலும் சிரிப்புகளாலும் சொல்வதில் இருந்து, மனித மனதின் ஆழத்தில் குடிக்கொண்டிருக்கும் குரூரத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார்.

தோட்டியின் மகனாய் மாறிய மோகன் ஒரு புரட்சியாளனாய் மாறி ஒரு தலைவனாய் செந்நிற மாலையை சுமந்து நிற்கின்றான். 

தலித் இலக்கியத்தில் இந்த நாவல் ஒரு மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் அப்படியே காட்டுகிறது. இந்த நாவல் எழுதப்பட்டது 1947 என்றாலும், இன்றும் பல மக்களின் நிலை இதில் வரும் மக்களின் நிலையை ஒத்துள்ளது என்பதை உணரும்பொழுது, நாம் ஒரு சமூகமாக தோற்றுவிட்டோம் என்பதையே காட்டுகிறது.

நேரம் கிடைத்தால் இந்த நாவலை தவறாமல் படித்துப் பார்க்கவும்.

நன்றி..


* தினேஷ்மாயா *