உறவுகள் சிறுகதை

Thursday, September 27, 2018


     
        உறவுகள் தொடர்கதை.....

இந்த வாசகத்தை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால் நான் இங்கே ஒரு புது வாசகத்தை சொல்லப் போகிறேன்.

       உறவுகள் சிறுகதை.....

ஆம் உறவுகள் இன்றைய காலகட்டத்தில் வெறும் சிறுகதையாக இருக்கின்றன. ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நம் சமூகம் கூட்டுக் குடும்பத்தை பின்பற்றி வந்தது. காலப்போக்கில் உலகமயமாதலின் பல்வேறு விளைவுகளில் கூட்டுக் குடும்பங்கள் இன்று தனி குடும்பங்களாக மாறிவிட்டது. இதனால் இந்த இருபது ஆண்டுகளாக குடும்ப சூழலில் வாழ்ந்து வந்த குழந்தைகளுக்கு உறவுகளின் மகத்துவம் தெரியாமலே போய்விட்டது என்றும் கூட சொல்லலாம். அன்றைக்கு தனிக் குடும்பங்களில் வளர்ந்து, வாழ்ந்து வந்த குழந்தைகள் இன்று பெரியவர்களாக தங்களுக்கென ஒரு குடும்பத்தை தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு உறவுகளின் தேவையும் உறவுகளின் அவசியமும் புரியாது. இவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாங்கள் எப்படி வளர்ந்தார்களோ, அந்த ஒரு சூழ்நிலையையே கொடுப்பார்கள்.

 நான் என்னுடைய சிறுவயதில், ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பெரியம்மா வீட்டிற்கு, தாத்தா வீட்டிற்கு, மாமா வீட்டிற்கு இப்படி சொந்த பந்தங்களின் வீட்டிற்கெல்லாம் சென்று வருவேன். நான் அந்த ஓராண்டில் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டதை விட, இந்த ஒரு மாதத்தில் என் சொந்த பந்தங்களின் வீட்டில் இருந்து வளர்ந்து கற்றுக்கொண்டது அதிகம் என்று கூட சொல்லலாம். பள்ளியில் எனக்கு, என் வாழ்க்கைக்கு தேவையான எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக சொல்லிக் கொடுக்கவில்லை. வகுப்பில் நான் முதல் முதலில் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது- "பேசாதே" என்பதைத்தான் .

  வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் நண்பனுடன் பேசினாலே ஆசிரியர் என்னை திட்டுவார். பேசாதே பேசினால் வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் என் சிறு வயதிலேயே என் மனதில் பதிந்து விட்டது. மற்றவருடன் பேசுவது தவறு அப்படி  பேசினால் நாம் தண்டிக்கப்பட்டு விடுவோம் இது நமக்கு அசிங்கத்தை கொடுக்கும் அதனால் நாம் எவருடனும் பேச வேண்டாம் என்கிற ஒரு முடிவு என் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே நான் ஊருக்கு விடுமுறை நாட்களில் செல்லும் பொழுது அங்கே கிராமத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுவார்கள். தெருவில் நடந்து செல்பவர் கூட யார் என்று எனக்குத் தெரியாது இருந்தாலும் அவர்கள் வீட்டிற்கு வந்து என்னிடம், 'தம்பி எப்ப வந்த எப்படி இருக்க நல்லா இருக்கியா ஊர்ல அம்மா அப்பா தங்கச்சி எல்லாம் நல்லா இருக்காங்களா ஏன் அவங்க வரலையா?' இந்த மாதிரி நலம் விசாரிச்சுட்டு போவாங்க. இது மாதிரி விஷயங்கள் முகம் தெரியாத, முன்பின் தெரியாத ஒருவருடன் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

  நம் மனித சமூகமே ஒருவருடன் இன்னொருவர் தொடர்பில் இருப்பதில் தான் வளர்கிறது. ஆனால் நான் இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதை என் பள்ளிக்கூடம் சொல்லித் தரவில்லை. மாறாக நான் அவருடன் பேச கூடாது என்பது மட்டுமே எனக்கு வற்புறுத்தியது. அதுமட்டுமில்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் பள்ளிக்கூடத்தை விட இந்த உறவுகளிடம் இருந்தும் வெளியில் இருந்துதான் கற்றுக் கொள்கிறேன் என்பதை 28 ஆண்டுகள் கழித்து இன்று நான் உணர்கிறேன். பள்ளிக்கூடத்தில் விளையாடுவதற்கு என்று வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் இருக்கும் வாரத்திற்கு அந்த இரண்டு வகுப்பிற்காக அனைவரும் காத்து கிடப்போம். மற்ற நேரங்களில் விளையாடுவதை பெற்றோர்களும் பொதுவாக விரும்புவதில்லை. விளையாடினால் படிப்பதற்கான நேரம் குறைந்துவிடும். படிக்கும் நேரம் குறைவு என்பதற்காகவே வெளியே விளையாட விடமாட்டார்கள். ஆனால் கிராமத்திற்கு சென்ற போது அங்கே அதிகம் விளையாடுவதற்கு நேரம் இருக்கும், புது புது நபர்களுடன் பழகுவதற்கு நேரம் இருக்கும், நல்லது கெட்டது என்ன என்பதை தெரிந்து கொள்ள நேரம் இருக்கும், இவை அனைத்திற்கும் வாய்ப்பு இருக்கும் .


  உறவுகள் நம் வளர்ச்சியை நிச்சயம் விரும்புவார்கள். நமக்கு நல்ல விஷயங்களையும் எவையெல்லாம் தேவையில்லை என்பதையும் சொல்லிக் கொடுப்பார்கள். சில விஷயங்களை பெற்றோர்களும் சொல்லிக்கொடுக்க மறந்துவிடும், மறுத்துவிடும் விஷயங்களை நமக்கு உறவுகள் சொல்லிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. நம்மை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் நம் உறவுகளுக்கு அப்போது கொடுத்திருந்தோம்.  கூட்டுக்குடும்பம் என்பதையும் தாண்டி தனி குடும்பங்களாக இருக்கும் பொழுதும் கூட உறவுகளுடன் ஒரு தொடர்பில் இருந்து வந்த காலம் அது. ஆனால் இன்று இருக்கும் பெரியவர்கள் அதாவது இருபது முப்பது வயதைக் கடந்த பெரியவர்களாகிய அந்த காலத்து குழந்தைகளுக்கு தங்கள் உறவுகளின் பெயர் கூட தெரியாது. அப்படி வளர்ந்து விட்டார்கள். உறவுகளின் அவசியம் அவர்களுக்கு எப்போது புரியும் என்று எனக்கு தெரியவில்லை. நம் சமூக கட்டமைப்பு மாறிவிட்டது. நாமும் அந்த மாற்றத்திற்கு ஒரு காரணம்தான் மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல மாற்றத்தை ஆதரித்தவர்களும் நாம் தான். யாரோ ஒரு சமூகம் என்று ஒரு சமூகத்தின் மீது பழியை போட்டுவிட்டு நாம் தப்பித்துக் கொள்வது நியாயமல்ல . அனைத்து பிழைகளுக்கும் நாமும் ஒரு காரணம் என்பதை உணர வேண்டும் . ஒரு செய்தியை படித்தேன். சீனாவில் இப்போது இருக்கும் 40 அல்லது 50 வயதை கடந்தவர்களுக்கு உறவுகள் என்று எவருமில்லை. தாய் மாமன், அத்தை, பெரியப்பா இந்த மாதிரி சொல்லிக்கொள்ள ஒரு உறவுகளும் இல்லை என்பதை படித்தேன். ஏனென்றால், சீனாவில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு குழந்தை என்கிற திட்டத்தால், சட்டத்தால் ஒரு பெற்றோர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள, அதனால் அவர்களுக்கு அண்ணன் தம்பி அக்கா தங்கை அதுமட்டுமல்லாமல் மாமன் அத்தை பெரியம்மா பெரியப்பா சித்தப்பா சித்தி இதுபோன்ற எந்த ஒரு உறவுகளைப் பற்றியும் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களின் பாசத்தை அவர்கள் உணரவில்லை. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா. நாம், நம் குடும்பம் என்பது, தாய் தந்தை மற்றும் நம்முடன் பிறந்த நம் ரத்த சொந்தம் இவை மட்டும்தான் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இது ஒரு குடும்பம் ஆகிவிடாது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஒரு நான்கு பேர் ஐந்து பேர் சேர்ந்து ஒரு குடும்பம் ஆகிவிடாது. ஒட்டுமொத்த சொந்தங்களும் சேர்ந்ததுதான் ஒரு குடும்பம். அந்த ஒரு குடும்பமே பல்கலைக்கழகம் என அழைக்கப்படும். ஒரு பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும் அதேபோன்று நம் குடும்பத்தின் பல்வேறு உறவுகளில் ஒவ்வொரு உறவிற்கும் நிறைகள் குறைகள் அனைத்தும் இருக்கும்.


  குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்கிற ஒரு பழமொழியே நம்மிடம் உண்டு எத்தனை பேருக்கு தெரியும். ஒருவர் தவறு செய்துவிட்டால் அவர் உடனே நமக்கு வேண்டாம் என்றும் ஒதுக்கிவிடும் பழக்கம் தான் இருக்கிறது. உறவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளத்தான் அந்த ஒரு பழமொழி நம்மிடையே சொல்லப்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து மனிதர்களுக்கும் நிறை குறை என்று இரண்டுமே இருக்கும். குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் எதையுமே சாதிக்க முடியாது. அதிலுள்ள நிறைகளையும் பார்க்க வேண்டும். அது போலத்தான் உறவுகள் செய்யும் தவறுகளை மட்டுமே நாம் பெரிதாக எண்ணினால் அவர்களின் நல்ல விஷயம் நம் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும்.


  உறவுகள் தொடர்கதையாக இருந்த காலம் போய் இன்று வெறும் சிறுகதையாக மாறிவிட்டது. இன்னும் சில காலத்திற்குள் இந்த உறவுகள் ஹைக்கூ கவிதையாக மாறும். இன்னும் உறவுகளின் அவசியம் சுருங்கிப்போகும், ஏன் உறவுகளே இல்லாமல் கூட போய்விடும் நிலை ஏற்படலாம். அதை தடுப்பது நம் கையில்தான் உள்ளது. உறவுகளுக்கு முக்கியத்துவத்தை கொடுப்போம் உறவுகளின் முக்கியத்துவத்தை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம் இந்த சமூகத்திற்கும் சொல்லிக் கொடுப்போம்.

* தினேஷ்மாயா *

மனிதனின் எதிர்கால வரலாறு

Tuesday, September 18, 2018

   


     நாம் இன்றைக்கு அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டெடுக்கும் குறிப்புகளை வைத்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், அவர்களின் சமூக கட்டமைப்பை பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமன்றி அவர்களின் கலை, அரசியல், தெய்வ வழிபாடு, ஆட்சி முறை, அறிவியல் சார்ந்த அறிவு, தொழில்நுட்பம், இலக்கிய அறிவு இவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

   இது நம் முன்னோர்களின் வரலாறு. சரி, அது இருக்கட்டும், நம்மைப் பற்றிய நிகழ்கால குறிப்புகளை எதிர்காலத்தில் நம் சந்ததியினர் ஆராய்ந்தால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? நம்மைப் பற்றிய குறிப்புகள் ஏதாவது கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கல்வெட்டுகளில், பாறைகளில்,  பானைகளில், ஓலைச்சுவடிகளில் இப்படி பல பொருட்களில் தங்கள் குறிப்புகளை விட்டு சென்றிருக்கிறார்கள்.

   நம் எதிர்கால வரலாறு என்னவாக இருக்கும் என்று எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா ?

   நம்மைப் பற்றி ஆராயும் எதிர்கால அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு நம்மைப் பற்றி குறிப்புகள் என்ன கிடைத்துவிடப் போகிறது? நாம் எழுதும் புத்தகங்கள் அனைத்தும் காகிதத்தில் பிரசுரிக்கப்படுகிறது. காலப்போக்கில் காகிதம் மழுங்கிவிடும். நம்முடைய அனைத்து தகவல் பரிமாற்றங்களும் இப்போது இணையதளம் மூலமாக நடந்து வருகிறது. ஒருவன் இன்னொருவனுடன் எப்படிப் பேசினான், இந்த சமூகத்தில் என்ன மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் இருந்தது, இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்ன, இந்த சமூகத்தின் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது, இக்காலத்தில் அரசியல் எப்படி இருந்தது, இந்த அரசியலில் எது மாதிரியான சூழ்ச்சிகள், சாதனைகள் இருந்தது இது போன்ற எந்த ஒரு குறிப்புகளும் நம் எதிர்கால தலைமுறையினருக்கு விட்டு செல்ல முடியாது.

  ஏனென்றால் நம்மை பற்றிய அனைத்து குறிப்புகளும் தகவல்களும் இணையதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத்தவிர வேறு எங்கும் நம்மால் குறிப்புகளை விட்டு செல்ல முடியாது. அதற்கு எவரும் முயன்றதும் இல்லை. நம்மைப் பற்றிய குறிப்புகளை விட்டுச் செல்வதற்கு இங்கே எவருக்கும் விருப்பமில்லை அல்லது நேரமில்லை என்றும் கூறலாம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் தங்களின் அரிய நேரத்தை பயன்படுத்தி கல்வெட்டுகள் செதுக்கினார்கள் பாறைகளில் செதுக்கினார்கள் பானைகள் செய்து அவர்களின் வாழ்க்கை முறையை அதில் சொல்லி இருந்தார்கள். ஓலைச்சுவடிகள் மூலம் தங்களின் இலக்கியத்தை பறைசாற்றினார்கள். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

    ஆனால் நாம் என்ன செய்கிறோம்? எதற்கெடுத்தாலும் ஒரு ஸ்மார்ட்போன் அதில் பல்லாயிரக்கணக்கான Apps இன்ஸ்டால் செய்துவிட்டு அதிலேயே நமது வாழ்க்கை முழுவதையும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். அதுவும் நாம் பயன்படுத்தும் இந்த கணினி, செல்போன் இது போன்ற உபகரணங்கள் காலப்போக்கில் அழிந்து விடக்கூடியது. நாம் புதிதாக வாங்கிய செல்போன் இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாக பயன்படுத்த முடியாத  நிலைக்கு தள்ளப்படுகிறது. அதாவது எந்த ஒரு மின்னனு சாதனமாக இருந்தாலும் அதிகபட்சம் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பிழைக்க முடியாது. அப்படி இருக்கையில் நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் தலைமுறையினருக்கு நாம் நம்மை பற்றிய குறிப்புகளை எடுத்து செல்வோம்?

   இதைப்பற்றி இப்போது இருக்கும் வரலாற்று ஆய்வாளர்களும் சரி, அகழ்வாரய்ச்சி செய்பவர்களும் சரி, ஏன் நம் மக்களுக்கும் அதைப் பற்றி பெரிதாக கவலை ஒன்றும் இல்லை. வெறும் இணையத்தை மட்டுமே நம்பி நம் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வரலாற்றை ஒப்படைத்து விட முடியுமா? அது நியாயம்தானா ?

* தினேஷ்மாயா *

கண்ணியம்



       பெண்களுக்கு கற்பு நெறி முக்கியம் என்று இந்த சமூகம் கருதுவது போல ஆண்களுக்கு கண்ணியம் மிக மிக முக்கியம் என்பதை இந்த சமூகம் ஆண்களுக்கு உணர்த்த வேண்டும் இதை ஆண்களும் உணர வேண்டும்.

       கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டிய ஒரு நெறி அல்ல. அது ஆண்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு நெறி. பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், ஆண்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை.

    "ஜான் மகன் ஆனாலும் ஆண்மகன்" - இது மாதிரியான பழமொழிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். ஆணாதிக்கத்தை சமூகத்தில் விதைத்து சென்ற நம் முன்னோர்களின் இதுபோன்ற சடங்குகளை பேச்சுகளை சம்பிரதாயங்களை பழமொழிகளை அறவே ஒழிக்க வேண்டும்.

           இன்றைய பெண்களுக்கு சமூகத்தில் ஒரு  சிறப்பான இடம் இருக்கிறது. ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு பெண் ஒரு நாட்டிற்கு குடியரசுத் தலைவர் அல்லது பிரதமராகவே ஆனாலும் அங்கேயும் அவர் ஒரு பெண் என்கிற வகையில் சில சங்கடங்களை கஷ்டங்களை எதிர்கொள்ள தான் செய்கிறார். ஒரு நாட்டின் தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை எண்ணி பாருங்களேன் !

   ஒரு பெண் நம்முடன் பேருந்தில் பயணிக்கும் பொழுது முடிந்தவரை நாம் அவரை தொடாமலும் உரசாமல் இருப்பது நமது கண்ணியம். ஒரு தாய் தன் சேய்க்கு பாலூட்டும் போது நீங்கள் அருகில் இருந்தால் சற்று விலகி நிற்பது உங்களது கண்ணியம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நம் சக  பெண் ஊழியர்களிடம் காக்கவேண்டியது கண்ணியம். நட்புடன் பழகினாலும் அந்த உறவிலும் ஒரு கண்ணியத்தை காக்க வேண்டும். முதலில் நாம் ஆண்களுக்கு நடத்தையில் கண்ணியத்தை சொல்லிக் கொடுப்பதை விட அவர்களின் சிந்தனையில் கண்ணியத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு பெண்ணையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது என்கிற எண்ணத்தை விதைக்க வேண்டும். இந்த ஒரு கண்ணியத்தை ஒவ்வொரு ஆண்மகனின் மனதிலும் சிந்தனையிலும் விதைத்து விட்டால் பெரும்பாலான குற்றங்கள் சமூக அவலங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறையும் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை.

* தினேஷ்மாயா *

உலகப் பொருளாதார சீர்திருத்தம்


         அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நாணயங்களும் தொடர்ச்சியாக டாலருக்கு நிகரான மதிப்பில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் பல இருந்தாலும் அதற்கு முழுமுதற் காரணம் என்னவென்றால் உலக வர்த்தகம் அனைத்தும் பெரும்பான்மையாக அமெரிக்க டாலர்களிலேயே நடத்தப்படுகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்க டாலருக்கு அதிகமான தேவை ஏற்படுகிறது.

      எந்த ஒரு விஷயத்திற்கு தேவை அதிகமாக இருக்கிறதோ அதன் மதிப்பு அதிகமாக தான் இருக்கும். அதுபோலத்தான் அமெரிக்க டாலரின் மதிப்பு பல நாட்டு நாணயங்களை விடவும் சர்வதேச பொருளாதாரத்தில் அதிகமாக இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. அது என்னவென்றால், ஒவ்வொரு நாடும் தங்களின் வர்த்தகத்தை தங்கள் நாட்டின் நாணயத்தில் மேற்கொண்டால் அமெரிக்க டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

    உதாரணமாக, நாம் சீனாவில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்கிறோம் என்றால் அதற்கு அமெரிக்க டாலரில் நாம் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, அதற்கு நம் இந்திய ரூபாய் மூலமாகவே பணம் செலுத்தலாம். இந்த நிலை வரும்போது அமெரிக்க டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒவ்வொரு நாடும் தங்களின் அமெரிக்க டாலர் எவ்வளவு கையிருப்பு இருக்கிறது என்பதை மிக தீவிரமாக கவனித்து வருகின்றனர். ஏன் இந்தியாவில் கூட அந்நிய செலாவணி கையிருப்பு எவ்வளவு என்பதை தினமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்நிய செலாவணி என்று சொல்லும் பொழுது இந்தியா அல்லது எந்த ஒரு நாடும் ஒரு ஆறு அல்லது ஏழு முக்கிய நாட்டின் நாணயங்களை தங்கள் கைவசம் வைத்துள்ளது. உலக வர்த்தகத்தில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் சில நாடுகளின் நாணயங்களில் தான் வர்த்தகம் செய்கிறார்கள். அந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் .

    ஏனென்றால், இந்த நிலை அந்த குறிப்பிட்ட சில நாணயங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாடுகளுக்கே உயர்வை தருகிறது வளர்ச்சியை தருகிறது ஏற்றத்தை தருகிறது. அந்த நாணயங்vகளை வர்த்தகம் பிற நாடுகளுக்கு பொருளாதார வீழ்ச்சியை மட்டுமே தருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டமைப்பாக ஒன்றிணைந்து இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும். நாம் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் அதற்கு நாம் ஏன் அமெரிக்க டாலரில் பணம் செலுத்த வேண்டும்? மாறாக தென்னாப்பிரிக்காவில் என்ன நாணயம் பயன்படுத்துகிறார்களோ அந்த நாணயத்தை நம்மிடம் கையிருப்பாக வைத்திருந்து அதில் நாம் செலுத்தலாமே!? இப்படி செலுத்துவதால் நாம் அமெரிக்க டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதுபோல இந்தியாவின் ரூபாயை தென்னாபிரிக்காவும் அந்நிய செலாவணியாக வைத்திருந்து இந்தியாவில் எந்த ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டாலும் அதற்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம். இது போன்ற நாடுகள் அல்லது பல கூட்டமைப்பான நாடுகள் தங்களுக்கிடையே வர்த்தகம் செய்யும் பொழுது தங்கள் பரஸ்பர நாணயங்களை தங்களின் வர்த்தகத்திற்கு பயன்படுத்தினால் அமெரிக்க டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது . அதுமட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு நிகரான தங்கள் நாணயத்தின் மதிப்பு வீழ்ந்தாலும் வளர்ச்சி அடைந்தாலும் அதனால் தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பது என் கருத்து.

* தினேஷ்மாயா *

பெரியார்



பெரியார் இன்னமும் நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.


இன்றும் கூட பெரியார் சிலையை உடைக்கிறார்கள் அவர்  சிலை மீது காலணி வீசுகிறார்கள் என்றால் அது அவருடைய கொள்கைகளும் அவரும் இன்னும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் என்பதற்கு ஒரு சான்று ஆகும். இதுபோன்ற தரம்கெட்ட செயல்களால் அவரின் புகழ் ஒன்றும் குறைந்துவிடாது மாறாக அவரின் புகழ் சமூகத்தில் அனைவரிடமும் சென்று சேர வழிவகுக்கிறது.

 நம் சமூகத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் பெரியாரின் கருத்துக்களை யார் வந்தாலும் எவர் வந்தாலும் மாற்ற முடியாது மறுக்க முடியாது.

பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளில் அவரின் சமூகநீதி கொள்கைகளையும் அவரையும் வழங்குவதில் நான் கர்வம் கொள்கிறேன்.

பெரியார்
தோற்றம்: 17.09.1879
மறைவு: சமூக அவலங்கள் இருக்கும் வரை அவர் மறைய மாட்டார்.

தினேஷ்மாயா