வாழ்க்கை இரகசியம்

Saturday, August 21, 2021

கடைசிவரை நல்லவனாகவே வாழ்ந்த ஒருவன் தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைக்கு சொல்லிவிட்டுப் போகும் வாழ்க்கைப் பாடம் என்ன தெரியுமா ?
மகனே ! எப்போதும் நல்லவனாகவே இருந்துவிடாதே !

கடைசிவரை கெட்டவனாகவே வாழ்ந்த ஒருவன் தான் இறக்கும் தருவாயில் தன் பிள்ளைக்கு சொல்லிவிட்டுப் போகும் வாழ்க்கைப் பாடம் என்ன தெரியுமா?
மகனே ! எப்போதும் கெட்டவனாகவே இருந்துவிடாதே !

* தினேஷ்மாயா *

தெரியாமை !

தெரிந்ததெல்லாம் சொல்லிவிட்டால்

உலகத்தில் தெரியாமையின் மகத்துவம்
சீரழியுமே !

தெரியாமையைத் தேடித்தானே வாழ்க்கை !

- சோ.தர்மன் அவர்களின் கூகை நாவலிலிருந்து..

* தினேஷ்மாயா *

ஞானத்தின் பிறப்பிடம்

ஞானத்தின் பிறப்பிடம் எது ?

எனக்கு எல்லாமே தெரியும் என்கிற மமதை நிலையில் அல்ல

எனக்கு எதுவும் தெரியாது என்கிற உண்மையை நீ ஒப்புக்கொள்ளும் தருணம் ஞானம் உன்னிடத்தில் வந்து சேர்ந்திருக்கும்..

* தினேஷ்மாயா *

என்னங்க சார் உங்க சட்டம் ?!

Friday, August 20, 2021

சட்டம்..

ஒவ்வொரு நபருக்கேற்ப

தத்தம் தேவைக்கேற்ப

அவரவர் சூழ்நிலைக்கேற்ப

மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும்..

பழகிக்கொள்ளுங்கள் !!

* தினேஷ்மாயா *

தேடல் !

 விழுங்கக் காத்திருக்கும் காலடி மண்ணை மறந்துவிட்டு நாலு கால் பாய்ச்சலில் நீ தேடியலைவது எதை ?

- கூகை நாவலில் சோ.தர்மன்

* தினேஷ்மாயா *

இங்கிதம் கிலோ எவ்வளவு ?

என் பயணத்தில், எனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் சப்தமாக எதையோ தன் கைப்பேசியில் பார்த்துக்கொண்டு வருகிறார். 

அது அவர் உரிமை.

ஆனால், அவருக்கு அருகில் இருந்து எந்த ஒலி தொந்தரவுமின்றி புத்தகம் படிக்க எனக்கும் அதே சம அளவு உரிமை உண்டு என்பதை அவர் அறிவாரா ?

இப்போதெல்லாம் பயண நேரங்களில் புத்தகம் படிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறேன். முன்பெல்லாம், பயணத்தில் படம் பார்ப்பதும், பாடல்கள் கேட்பதும் இருந்தது. சில மாதங்களாக புத்தகம் படிக்க துவங்கியிருக்கிறேன். இதற்கு முன்னர் பாடல் கேட்கும்போதோ, படம் பார்க்கும்போதோ நான் பிறர் எழுப்பும் தேவையற்ற சப்தங்கள் என்னை பாதித்ததில்லை. ஏனெனில் நான் என் காதில் தனியாக ஒரு இயந்திரத்தை மாட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பேன்.

ஆனால், இப்போது புத்தகம் படிக்க ஆரம்பித்ததுமேதான் தெரிகிறது, பிறர் எப்படி பொதுவெளியில் இங்கிதம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று.

நேற்று இரயிலில் ஏறியவுடன், ஒரு இருக்கையில் அமர்ந்து புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். எனக்கு அருகில் இருப்பவர் நான் ஏறும் முன்னரே அந்த இருக்கையில் இருந்திருக்கிறார். நான் வரும்போது கூட தன் செல்பேசியில் சப்தமாக Youtube Shorts பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர் சப்தத்தை குறைக்கவில்லை. சரி நான் ஏதும் சொல்லிக்கொள்ளவில்லை. பிறகு நான் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அதைப் பார்த்தும் அவர் தன் செல்பேசியில் அதே சப்தத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். அவர் குறைப்பதாக தெரியவில்லை. நான் சொன்னேன், சார் கொஞ்சம் Sound குறைச்சுக்குறீங்களா please. அவருக்கு அப்போதுதான் உணர்ந்திருக்கிறது போலும். உடனே தன் செல்பேசியை அணைத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.

என்ன செய்ய. என் உரிமையை கேட்டுத்தான் பெற வேண்டியுள்ளது எங்கேயும் எப்போதும் !

* தினேஷ்மாயா *

வெளிக்காட்டா சுமை

நமக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அவரிடம் கூட மனசு விட்டு சொல்ல முடியாத சில விடயங்கள் நம் அனைவரின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வெளியில் பகிர்ந்துக்கொள்ள முடியாத துயரங்களை சுமந்துக்கொண்டுதான் மனிதன் வாழ்கிறான். அந்த சுமையோடே சாகிறான்.

* தினேஷ்மாயா * 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் !

அது என்னவோ தெரியல


எல்லாத்துலயும் மெரிட்ட (MERIT) எதிர்பார்க்குற அவா,


கோயில்களில் ஆகமம் வேதம் படிச்சு மெரிட்ல குருக்களா வர்ரவாள மட்டும் ஏத்துக்க மாட்டேனுறா !


காலம் கலி காலம் ஆயிடுத்துறா அம்பி


* தினேஷ்மாயா *

கூகை - சோ.தர்மன்


எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள் எழுதிய ‘கூகை’ நாவலை சமீபத்தில் படித்தேன். இந்த நாவலைப் பற்றி முன்னமே நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தலித் இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத நாவல் மிக அற்புதமான நாவல் என்று.

பகலில் கண் தெரியாமல் இருட்டில் மட்டுமே கண் தெரியும் கூகையின் வாழ்க்கையை ஒத்தது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை என்பதை அழகாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வலி நிறைந்தது என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், அந்த வலியை நமக்கும் கடத்தியிருக்கிறார்.


தன் பலம் என்னவென்றே தெரியாமல் பிற சிறிய பறவைகளுக்கும்கூட பயந்து வாழும் கூகையின் வாழ்க்கையை தலித் மக்களின் வாழ்க்கையோடு பொறுத்தி புனைவு தந்திருக்கிறார்.

இந்த நாவலில் வரும் சீனி, முத்துப்பேச்சி, அப்புச்சுப்பன் ஆகிய மூவரும் என் மனம் கவர்ந்த நபர்கள். இடையிடையே பல கதாப்பாத்திரங்கள் வந்து மனம் கவர்ந்து சென்றாலும், கதை முடிந்தாலும் இந்த மூன்று பேர் மனதில் கூடாரம் அமைத்துத் தங்கிவிடுகிறார்கள். தன் இன மக்களின் நலனையே கருத்தில் கொண்டிருக்கும் சீனியின் ஒவ்வொரு செயலும் ஆச்சரியமூட்டுகிறது. மேகலக்குடி மக்களுக்கும் தன் இன மக்களுக்கும் ஒரு பாலமாய் செயல்பட்டு முடிந்தவரை சண்டை சச்சரவின்றி வாழ உறுதுணையாக நிற்கிறான். ஐயர் எழுதி வைத்த வயலில் உழுது தன் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பெரிதும் காரணாய் விளங்குகிறான்.


அப்புச்சுப்பன் கோபக்காரன். ஆனால் மூளை கம்மி. அதிகம் சிந்திக்க மாட்டான். எடுத்தோம் கவுத்தோம் என்று தடாலடியாக சண்டியர்தனம் செய்வான். ஆனால் அவன் செய்வது அனைத்தும் தன் மக்களுக்காகவே.


பேச்சி..


அப்புசுப்பனுக்கு அடைக்கலம் மட்டுமல்ல மறுவாழ்வும் கொடுத்தவள். அனைத்து குடி மக்களுக்கும் நீதி கிடைக்கவும் வாழ்வு கிடைக்கவும் பாடு பட்டவள். இரக்க குணம், வைராக்கியம் இவற்றின் மறுபெயர் பேச்சி.


அனைத்து கதாபாத்திரங்களிலும் என்னை அதிகம் கவர்ந்தது பேச்சியின் கதாப்பாத்திரமே. சீனியும் கூட தன் இன மக்கள் என்கிற ஒரு ஒட்டும் உறவும் இருந்ததால் அவர்களுக்காக நின்றான் எனலாம். ஆனால், முன்பின் பார்த்திராத அப்புச்சுப்பனுக்கு உதவி செய்து அவனுக்கு வாழ்வை மீட்டு கொடுத்தது இவளின் பெருந்தன்மை குணத்தை காட்டுகிறது. இவளின் பொறுமையும் அனுபவமும் எனக்கு வியப்பை கொடுக்கிறது.


இரண்டாம் பாகத்தில் வரும் கற்பனை நாடும், சீனியின் மரணமும் ஏனோ கதையுடன் ஒட்டவே இல்லை என்பதுபோல நான் உணர்கிறேன்.


எழுத்தாளர் சில இடங்களில் விரசமான விடயங்களையும்கூட நாசூக்காக சொல்லி இருப்பார். இரட்டை அர்த்தமுண்டு என்று போகிறப்போக்கில் படிப்பவர்களுக்கு புரியாது. மூன்று நான்கு முறைப் படித்தால் மட்டுமே அதன் உள் அர்த்தம் விளங்கும். அவரின் கற்பனைத்திறம் என்னை கவர்ந்தது.


பள்ளக்குடி, பறக்குடி, சக்கிலியக்குடி மக்கள் என்றைக்குமே பிறருக்கு மாடாய் உழைத்து ஏடாய் போகும் நிலை என்று மாறும் என்பதோடு கதை முடிகிறது. அவர்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். நல்லொழுக்கத்தோடு உழைப்பும் வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியும் இருந்தால் மட்டுமே இவர்கள் வாழ்வில் ஆயிரம் சூரியனை கண்களாக கொண்ட கூகையின் கண் போல் ஒளி ஏற்படும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.


நாவலை படித்து முடித்தபோது மனம் கனக்கவுமில்லை, லேசாகவுமில்லை. இரண்டும் கலந்த ஓர் உணர்வு. ஒரு பத்து நாட்களாக கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இந்த புத்தகத்தை படித்து வந்தேன். இந்த பத்து நாட்களாக நான் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையோடு இன்னொரு வாழ்க்கையும் அதாவது கூகை நாவலில் வரும் நபர்களோடு சேர்ந்து பயணித்து அவர்களின் வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டு வந்த ஓர் திருப்தி கிடைக்கிறது.


இந்த நாவலை நிச்சயம் நான் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன். படித்து முடித்து உங்கள் கருத்துக்களை இங்கே என்னுடன் பகிரலாம்.


நன்றி.


* தினேஷ்மாயா *