Made in China

Sunday, July 26, 2020



 சீனப் பொருட்கள் இந்த உலகமெங்கும் பரவிக்கிடக்கிறது. ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் என் அக்கா என்னிடம் ஒரு நகைச்சுவை துணுக்கு சொன்னார். ஒரு விண்கலத்தில் இருந்து பூமியை பார்த்தால் அதில் Made in China என்றே தெரிந்ததாம். அது எனக்கு முதலில் புரியவில்லை. பின்னர் அவரே விளக்கினார். இந்த உலகில் இருக்கும் 90% பொருட்கள் சீனாவில் தயாரானதே அதனால்தான் இந்த உலகமே சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று விண்வெளியில் இருந்தே தெரிகிறது என்றார். நகைச்சுவைதான் என்றாலும் அதில் பொதிந்துள்ள கருத்து ஆழமானது.

 சீனர்கள் தங்களுடைய மக்கள்தொகையை ஒரு பாரமாக பார்க்காமல், வரமாக கையாண்டு உலகில் பல்வேறு துறைகளுக்கு தேவையான மூலப்பொருட்களையும், மேலும் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்து வருகின்றனர்.

சமீபத்தில், இந்தியா பல்வேறு சீன மென்பொருட்களுக்கு தடை விதித்தது. மேலும், சீனப்பொருட்களுக்கும் தடை விதிக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்து பரிந்துரைகள் வந்தவண்ணம் உள்ளது. இதை இந்திய அரசாங்கம் எப்படி கையாளப்போகிறது என்பதை விடுங்கள். நாம் கொஞ்சம் இதைப்பற்றி சிந்திப்போமே.

நேற்று ஒரு Nail Cutter வாங்க போனேன். அது குழந்தைகளுக்கானது. விலை ரூ.245/- மற்றும் அது Made in China. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. விலை அதிகம் என்று முதலில் நினைத்தேன். Born Babies கடையில் வாங்கியதால் அந்த கடை நிர்வாகமே கொஞ்சம் அதிக விலை வைத்து விற்றிருக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் நான் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு Nail Cutter-ஐ கூட இந்தியாவில் உற்பத்தி செய்யாமல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய காரணம் என்ன ? அங்கே ஒரு பொருளின் உற்பத்தி விலை மிக மிக குறைவு. உதாராணமாக இதே Nail Cutter-ஐ இரண்டு அல்லது மூன்று Container-களில் இறக்குமதி செய்தால், அதன் மொத்த விலை என்பது இறக்குமதி வரியையும் சேர்த்தாலும் மிகவும் குறைவாகவே இருக்கும். அப்படி பார்த்தால் ஒரு Nail Cutter-ன் விலை என்பது வெறும் ரூ.30 முதல் ரூ.50-ஐ தாண்டாது. ஆனால், மொத்தமாக இறக்குமதி செய்து இங்கே அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர் இந்திய தொழில்முனைவோர்.

அவர்களை, இந்திய பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமும் இல்லை. ஏனென்றால், இங்கே ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதை சந்தையில் விற்க ஆகும் செலவு என்பது, சீனாவில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்து அதற்கான வரியையும் செலுத்தி விற்பனை செய்வதைவிடவும் அதிகம். அதனாலேயே வியாபாரிகளும் இந்திய பொருட்களை விடுத்து சீனப் பொருட்களை வாங்க முற்படுகின்றனர்.

சீனப் பொருட்களை தடை செய்வதென்பது, இந்திய பொருட்களை சீனாவில் தடை செய்ய சொல்வது போன்றது. எந்தவொரு நாட்டின் பொருளையும் வேறெந்தவொரு நாட்டிலும் விற்பனை செய்யலாம். இதுவே உலகமயமாக்கலின் அடிப்படை தத்துவம். 

சீனப் பொருட்கள் தரமற்றது, ஆனாலும் அதன் மலிவான விலையால் மக்கள் அதிகம் அதை நாடுகின்றனர். இதுவே மக்களின் மனநிலை. இதை முதலில் அரசாங்கம் உணர வேண்டும்.

இந்தியாவில் ஒரு நிறுவனத்தை தொடங்கி அதில் உற்பத்தி செய்து அந்த பொருளை சந்தைப்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளது. பல நிலைகளில், இலஞ்சமும் ஊழலும் வரி ஏய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால், மக்களுக்கு மலிவான விலையில் ஒரு பொருளை கொண்டுவந்து சேர்க்க முடிவதில்லை. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணாமல், சீனப்பொருட்களுக்கு தடை விதித்தால் அது வேறு வகையில் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும். 

இந்திய இளைஞர்களின் உழைப்பை நம் அரசாங்கம் சரிவர பயன்படுத்தாதவரை, Make In India வெறும் கனவாக இருக்கும், Made in China மட்டுமே நிரந்தரமாக இருக்கும்.

* தினேஷ்மாயா *

தகப்பன்சாமி

Saturday, July 25, 2020

Pic Courtesy: Internet


வாழ்க்கை எனக்கு இன்னுமொரு வரத்தை அளித்துள்ளது.

இயற்கையின் அருளால், இறையருளால் எங்களின் அன்பின் வெளிப்பாடாய் மகன் பிறந்திருக்கிறான்.

இனி எனக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொடுக்கும் இன்னொரு ஆசானாய் வந்திருக்கிறான் என் மகன்.

என் வாழ்வை முழுமையடைய செய்திருக்கிறான். வாழ்க்கையின் அர்த்தங்களை உணர்த்தப் போகிறான். என்னை மென்மேலும் பட்டைத்தீட்டி மிளிர செய்யப் போகிறான்.

எனக்கே குருவாக விளங்கி தகப்பன்சாமியாக விளங்கப்போகிறான்.

* தினேஷ்மாயா *

இறை நிலை


நீ கோபத்தின் உச்சியில் இருந்தாலும்

வார்த்தையாலும், மனதாலும் பிறரை

துன்புறுத்த விரும்பவில்லை என்றால் -

நீயும் இறை நிலையை அடைந்துவிட்டாய் !!

* தினேஷ்மாயா *

விவசாய போராளி !

Saturday, July 11, 2020



எந்தவொரு விவசாயியும், எவ்வளவு வறுமை வந்தாலும் தன் விதை நெல்லை பொங்கி திண்ண மாட்டான். ஆனால், அவனை சூழ்ந்த வறுமையும் பசி என்னும் அரக்கனும், தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தாரையும் மூழ்கடிக்கும் அந்த தருணத்தில் அவன் வேறு வழியின்றி அந்த விதை நெல்லை பொங்கி வைத்து அவர்களுக்கு உணவு படைப்பான்.

ஆனால், அவன் அந்த உணவை உண்ண மாட்டான். அந்த விதை நெல்லை அவர்கள் குடும்பத்தார்கள் திண்ணும் அந்த வேளையில் இவன் குடிந்த அந்த பூச்சிமருந்து இவன் சீவனை பரலோகத்திற்கு பக்கத்தில் கொண்டு போயிருக்கும்...

கொண்ட கொள்கைக்காக உயிர்விடும் ஒவ்வொருவரும் போராளியே..

அப்படி பார்த்தால் - இந்த விவசாயியும் ஒரு போராளியே !!

* தினேஷ்மாயா *

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அவசரமான உலகத்திலே

ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா

காசில்லாதவன் குடும்பத்திலே..

 

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அவசரமான உலகத்திலே

ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா

காசில்லாதவன் குடும்பத்திலே..


தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்

வயிறும் வேறடா

சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்

சொந்தம் என்பதும் ஏதடா..

 

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அவசரமான உலகத்திலே

ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா

காசில்லாதவன் குடும்பத்திலே..

 

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை

கட்டி வைத்தவன் யாரடா..

அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்

சோறு போட்டவன் யாரடா..

 

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்

வருந்தவில்லையே தாயடா..

மனித ஜாதியில் துயரம் யாவுமே

மனதினால் வந்த நோயடா..

 

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அவசரமான உலகத்திலே

ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா

காசில்லாதவன் குடும்பத்திலே..

 

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்

வந்து சேர்கிறார் பாரடா

கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை

மதித்து வந்தவர் யாரடா..

 

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்

பந்தபாசமே ஏனடா..

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்

அண்ணன் தம்பிகள் தானடா.

 

திரைப்படம்: பழநி.

இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி

வரிகள்: கவியரசர் கண்ணதாசன்

பாடியவர்: டி.எம்.எஸ்.


x

போனால் போகட்டும் போடா



போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ…

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது
இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

ஒஹோஹோ…

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா
அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா

திரைப்படம்: பாலும் பழமும்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.எஸ்.


வெகு நாட்கள் கழித்து, கண்ணதாசன் பாடல்களில் மூழ்கிப்போனேன். நான் இரசித்த, நீங்களும் இரசித்த சில பாடல்வரிகளை இங்கே பதிகிறேன்.

* தினேஷ்மாயா *

நான் அவன் இல்லை




செய்யாத தவறுக்காக நாம் வசவு வாங்குவதும், தண்டனை பெறுவதும் ஆகப்பெரிய கொடுமை என்பேன் நான்.

அது என்னவோ தெரியவில்லை, என்ன மாயமோ தெரியவில்லை என் வாழ்வில் மட்டும் இதுப்போன்ற சம்பவம் எனக்கு நிறைய நடந்திருக்கிறது, நடந்துக்கொண்டும் இருக்கிறது..

சிறு வயதில் யாரோ ஒருவன் தள்ளிவிட என் அருகில் இருந்த உடன்பயிலும் மாணவன் கீழே விழுந்து அவன் கை முறிய நான்தான் தள்ளிவிட்டேன் என்று எல்லோரும் சொல்ல, நான் அவன் இல்லை என்று எவ்வளவு சொல்லியும் நம்புவதற்கு எவரும் இல்லை என்னையும் ஆண்டவனையும் தவிர..

எட்டாவது படிக்கும்போது, ஒரு மாலை வேளையில் என் நண்பன் ஒருவனுடன் நானும் விளையாடிக் கொண்டிருந்தேன். அன்று எங்கள் பக்கத்துத் தெருவில் இருக்கும் ஒருவர் வீட்டில் ஒரு கை கடிகாரம் களவு போய்விட்டது என்றும், நான் விளையாடி கொண்டிருக்கும் என் நண்பன் மதியம் அவர்கள் வீட்டிற்கு சென்றான் என்றும், அதனால் அவனே அதை எடுத்திருப்பான் என்றும் அவர்கள் அவனை குற்றம் சாட்டினார்கள். நான் அவனுடன் விளையாட ஆரம்பித்ததோ மாலையில் தான். ஆனால், அந்த களவில் நானும் உடந்தை என்று பொய்யாக என்னை குற்றம் சாட்டிய போது, நான் அவன் இல்லை என்று சொல்ல அதை அவர்கள் நம்ப தயாராக இல்லை. பிறகு என் களங்கம் போக்க சில ஆதாரங்களை இறைவன் எனக்காக கொடுத்தான். ஆனாலும், செய்யாத தவறுக்காக குற்றம் சாட்டப்பட்டு நாணித் தலைகுனிய நேர்ந்ததை என்னவென்று சொல்ல ?

பன்னிரெண்டாவது படிக்கும்போது என் நண்பன் ஒருவன் செய்த தவறுக்காக, அவனும் நானும்தான் மாலையில் ஒன்றாக வீட்டிற்கு செல்வோம் என்கிற ஒரே காரணத்துக்காக, அவனோடு சேர்ந்து என்னையும் குற்றம் சாட்டி, ஒரு மணி நேரம் பள்ளி முதல்வர் அறைக்கு வெளியே நின்றிருந்தபோது, நான் அவன் இல்லை என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்/


இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைப்பதுபோல, கல்லூரி விடுதியில் நடந்த நிகழ்வை சொல்லலாம். எனக்கு தொடர்பே இல்லாத ஒரு செயலில் என்னையும் தொடர்புப்படுத்தி, என்னை இந்த சென்னை மீதும், கல்லூரி மீதும், என் வாழ்க்கை மீதும் என்னுடைய ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழக்க செய்த சம்பவம் அது. அந்த சம்பவத்தின்போது சுற்றி இருந்த 100 மாணவர்களில் ஒருவன்கூட என் பக்கம் இல்லை. நான் அவன் இல்லை என்று உள்ளத்தில் குமுறல் இருக்கிறது. அதை எவரிடம் சொல்ல. ஆனாலும், இங்கே இறைவன் என்னை கீழே விடாமல் பிடித்துக்கொண்டான். அந்த செயலில் எனக்கு தொடர்பில்லை என்று அதில் சம்பந்தப்பட்ட மாணவனே தெரிவித்தான். வாழ்க்கையை வெறுத்து முட்டாள்தனமான முடிவை எடுக்கவும் இந்த சம்பவம் என்னை தள்ளியது. இருப்பினும் இறையருளால் இவற்றை எல்லாம் கடந்து வந்தேன். இதுப்போன்ற சம்பங்களும், இவை தந்த வலிகளுமே என்னை பக்குவப்படுத்தியது. வாழ்க்கை மீதும், மனிதர்கள் மீதும் எனக்கு தெளிவான புரிதலை கொடுத்தது.

திருமணத்திற்குப் பிறகும் இது தொடர்கிறது.. ஆம்.. என் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் செயலுக்கும், சொல்லுக்கும் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தவறு என் பக்கம் இல்லையென்றாலும், நான் அவன் இல்லை என்று சொன்னாலும் என் விதி என்னை விட்டபாடில்லை.

செய்யாத தவறுக்காக வருந்துவதும், மன்னிப்பு கேட்பதும், தண்டனை அனுபவிப்பதும் வாழ்க்கையின் மிகப்பெரும் கொடுமைகளில் ஒன்றென்பதை வாழ்க்கை நன்றாக எனக்கு உணர்த்திவிட்டது..

அதனால்தான் என்னவோ, யார் எந்த தவறு செய்தாலும் அதை நான் பெரிதாய் பொருட்படுத்த மாட்டேன். அந்த தவறை உண்மையாகவே அவர்தான் செய்தாரா, அல்லது சூழ்நிலையால் அவர் செய்யாத தவறுக்காக அவர் குற்றம் சுமத்தப்படுகிறாரா என்றெல்லாம் தெரியாமல், ஒருவரை குற்றம் சொல்வது பாவம் என்றே கருதுகிறேன். 

நான் ஏசுநாதர் போல, மற்றவர்களின் பாவத்தை என் முதுகில் சுமந்து வருகிறேன். போதும்.. மேலும் மேலும் புது புது ஏசுநாதர்களை நான் உருவாக்க விரும்பவில்லை.

ஏனென்றால்...

நான் அவன் இல்லை...

* தினேஷ்மாயா *

இயல்பு வாழ்க்கை



சென்னை !!

முதன் முதலில் இங்கே வந்தபோது

வாகன நெரிசலில் ஊர்ந்து செல்லும்

அவசர ஊர்த்தியை கண்டு 

மனம் அதிகம் பதை பதைத்ததுண்டு..

பின்னாட்களில் -

சென்னையில் ஏதாவது சாலையில்

பயணம் செய்கையில் நிச்சயம் - தினமும் குறைந்தது

பத்து அவசர ஊர்த்திகள் இங்கும் அங்கும்

பறப்பதை காணவோ அல்லது 

தொலைவில் பறப்பதை கேட்கவோ செய்திருக்கிறேன்..

அப்போதெல்லாம் முகம் தெரியாத 

அந்த நபருக்காக பிரார்த்திப்பேன்..

சில மாதங்களாக சென்னையில் கடுமையான ஊரடங்கு..

சமீபத்தில்தான் ஊரங்கில் தளர்வுகள் வந்தது...

நேற்று என் மொட்டை மாடியில் 

வழக்கம்போல் நடமாடிக்கொண்டிருந்தேன்..

பல மாதங்களுக்குப் பிறகு

அதே அவசர ஊர்த்தியின் சத்தம்

தொலைவில் இருந்து வந்து

என் நெஞ்சை தட்டிவிட்டு சென்றது...

நேற்று படித்த செய்தி நினைவுக்கு வந்தது..

“சென்னையில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்” !

* தினேஷ்மாயா *

நீரின்றி அமையாது உலகு

Tuesday, July 07, 2020



நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கு அடுத்து வான் சிறப்பு என்னும் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு அடுத்து வான் மழையே உயர்ந்ததாக கருதப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த சான்று.

நீரில் இருந்துதான் உலகின் முதல் ஒற்றை செல் உயிரினம் தோன்றியது என்பதை அனைவரும் அறிந்ததே. நீரில்தான் உயிர் வளர தேவையான அமினோ அமிலங்களும், பிராண வாயுவும் இருப்பதை அறிவியல் உறுதிசெய்திருக்கிறது.

இந்த உலகமே முக்கால்வாசி நீரினால் சூழப்பட்டதே. நம் ஆதி தமிழர்கள் நீரினை கடவுளாகப் பார்த்தனர். பெண்களை தெய்வமாக வழிப்பட்ட நம் சமூகத்தினர், ஆறுகளுக்கு பெண்ணின் பெயரை வைத்து மகிழ்ந்தனர். காவிரி, கங்கை, கோதாவரி, யமுனை என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளனர். காவிரித்தாய், கங்கைத்தாய் என்றெல்லாம் ஆற்றை தாயுடன் சமமாக பார்த்தனர்.

ஆனால், இன்று இந்த ஆறுகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அந்த ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களைக் கேட்டால்தான் தெரியும். உலகமயமாக்கல் என்னும் பெயராலும், முதலாளித்துவ பொருளாதாரத்தாலும் பல தொழிற்சாலைகளை இந்த ஆற்றின் ஓரங்களில் அமைத்து, தத்தம் கழிவுகளை இந்த ஆறுகளில் கலக்கின்றனர். திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளின் பிரச்சனையை அங்கே வசிக்கும் மக்களிடம் கேளுங்கள். கங்கையில் கலக்கப்படும் கழிவுகளால் நீரின் தன்மை மாசுப்பட்டிருப்பதை பல அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.

இந்த மாசினால், விவசாயத்திற்கு செல்லும் இந்த மாசடைந்த நீர், விவசாய நிலத்தையும், மண்ணையும் பாழ்படுத்துகிறது. ஆற்றின் நீரை குடிநீருக்காக நம்பியிருக்கும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். இதெல்லாம் விட, மழை குறைந்து ஆற்றில் நீர்வரத்து குறைந்தால் ஆற்றில் மணலை அள்ளி கொள்ளையடிக்க அரசாங்கமே அங்கீகாரம் அளித்துள்ளதை என்னவென்று சொல்வது ?

வெளிநாட்டு படங்கள் சிலவற்றில் பார்த்திருப்பீர்கள். ஜாம்பி வகை படங்களில் காரின் உள்ளே பாதிக்கப்படாத ஒரு நபர் இருப்பார், அவரை கொல்ல சுமார் நூறு பேர் அந்த காரை சுற்றி சூழ்ந்து அந்த காரை உடைத்து திறக்க முயன்றுக்கொண்டு இருப்பார்கள்.

அதேப்போன்ற நிலைமை, ஒரு வீட்டினுள்ளோ அல்லது ஒரு காரினுள்ளோ இருக்கும் ஒருவரிடம் ஒரு லிட்டர் தண்ணீர் இருக்கிறது, அந்த நீர் நமக்கு கிடைத்தால்தான் நாம் உயிர்வாழ முடியும் என்கிற சூழ்நிலை பிற்காலத்தில் வரலாம். ஆம். ஆழிசூழ் உலகம்தான் என்றாலும், நீர் நிச்சயம் நம் மனித சமுதாயத்தின் உயிர் என்பதை மறக்காமல் இருப்போம். நீர் சிக்கனம் காப்போம்.

விண்ணின் மழைத்துளி… மண்ணின் உயிர்த்துளி..

* தினேஷ்மாயா *

மழை வேண்டி பிரார்த்தனை


மக்களின் பெரும்பான்மையான பிரார்த்தனைகள் தங்கள் சுயநலம் சார்ந்தே இருக்கிறது. உலக நன்மைக்காக பிரார்த்திப்பது என்பது குறைந்து வருகிறது.

மழை நன்றாக பெய்ய வேண்டும் என்று விவசாயியை தவிர வேறு எவரும் பிரார்த்திப்பார்களா என்று தெரியவில்லை...

நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவ பெருந்தகை சொன்னது போல, மழை இல்லாமல் போனால் உலகம் அழிவை நோக்கியே செல்லும். மழை வேண்டி நாமும் இறைவனை பிரார்த்திப்போம்.. மரம் நடுவோம் மழை பெருவோம்...

* தினேஷ்மாயா *

கள்ளிக்காட்டு இதிகாசம்



நான் என் முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். கள்ளிக்காட்டு இதிகாசம் நூலைப்பற்றி.

என் அலுவலக நண்பர் ஒருவர் ஒரு குறுஞ்செய்தியை பகிர்ந்தார். முதலில் அந்த பதிவை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

“வௌஞ்ச வெள்ளாமைய வேடிக்கை பார்கிறதவிட வெதச்சவனுக்கு வேற என்ன சொகம்.

சாமி எங்கேயோவா இருக்கு... இந்த வெள்ளாமக் காட்ல தான் இருக்கு!

இந்த காக்கா குருவிகமட்டும் இல்லாட்டி, காட்டுக்கே ஒரு கலகலப்பு வந்திருக்காது. தட்டைச்சிட்டுக சோளக் கருதக் கொத்தித் திங்கிறதே ஒரு அழகுதான். கொத்திட்டுப் போகுதுக பாவம்! வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும் சேத்துத்தான்! நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்கிட்டுப் போகும்?

-கள்ளிக்காட்டு இதிகாசம்.”

இந்த வரிகள்தாம் அவை. இந்த வரிகளை படித்த அடுத்த நொடியே என் மனதில் இந்த புத்தகம் குடிசைப்போட்டு அமர்ந்துவிட்டது. உடனேயே இந்த நூலை பதிவிறக்கம் செய்து படிக்கத் துவங்கினேன்.

மொத்தம் 36 அத்தியாயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாத்தை படிக்கும்போது என்னை கவர்ந்த வரிகளையும், அதை படிக்கையில் என் மனதில் எழும்  எண்ணங்களையும் குறிப்புகளாய் எடுத்துக்கொண்டே வந்தேன்.

ஆனால், 31-ம் அத்தியாயம்வரை மட்டுமே என்னால் குறிப்புகள் எடுக்க முடிந்தது. மீதமுள்ள அத்தியாயங்களை படிக்கும்போது குறிப்புகள் எடுக்கும் மனம் இல்லை. அந்த கதையில் நான் மூழ்கிப்போயிருந்தேன். குறிப்புகள் எடுக்க மூலையின் உதவி தேவை. ஆனால் இந்த நூலை நான் கண் கொண்டும் இதயம் கொண்டும் படித்துக் கொண்டிருந்தமையால், மூலையின் உதவி தேவை படவில்லை.

இந்த நூலை படித்து முடிக்கையில் அந்த கள்ளிக்காட்டு வாசம் என் முகத்தில் பளீரென்று வந்து அடித்தது.

மனிதன் எதை எதையோ கண்டுபிடித்திருக்கிறான். ஆனால், அவனால் சில விடயங்களை இன்னும் கைகொள்ள முடியவில்லை. அதில் ஒன்று, ஒரு வாசத்தை பதிவு செய்து மீண்டும் அதே வாசனையை வேறொரு இடத்தில் உருவாக்குவது. புகைப்படம் என்பது ஒளியை கைது செய்து தேவைப்படும் போது வெளியிடுவது. ஆனால், வாசனையை பதிவு செய்யவோ, வேறொரு சமயத்தில் அதே வாசனையை மீட்டுருவாக்கம் செய்யவோ மனிதன் இன்னமும் கற்றிருக்கவில்லை.

ஆனால், அந்த கள்ளிக்காடுகளுக்கே உரிய ஒரு அழகான நெடியை இந்த நூலில் என்னால் நுகரமுடிந்தது. அந்த கள்ளிக்காட்டின் வாசத்தை வார்த்தைகளால் கைது செய்து நமக்கும் அதை கடத்தியிருக்கிறார் ஆசிரியர். இந்த நாவலுக்கு 2003-ம் ஆண்டின் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

நான் எப்போதும் ஒரு நூலை படித்துவிட்டு அந்த நூலை திறனாய்வு செய்ய மாட்டேன். அது திரைப்படமாக இருந்தாலும் சரி, வேறெந்த ஒரு கலை வடிவமாக இருந்தாலும் சரி, அதை விமர்சனம் செய்யவோ அல்லது திறனாய்வு செய்யவோ நான் விரும்பமாட்டேன். அதை இரசிக்கவே விரும்புவேன். நான் விரும்பியவற்றை உங்களுடன் பகிர்கிறேன். என் வலைப்பக்க வாசகர்களில் இதுவரை இந்த நூலை படித்திராதவர்கள்  உண்டென்றால் நிச்சயம் இந்த நூலை படிக்கும்படி கோரிக்கை விடுக்கிறேன்.

இதோ… அந்த கள்ளிக்காட்டின் வாசத்தை இங்கே பகிர்கிறேன். நீங்களும் நுகருங்கள்…

  • Ø  1: - பேயத்தேவரும், மொக்கராசுவும் – தேவர் பசுவுக்கு வைத்தியம் பார்க்கிறார்
  • Ø  மண்ணுதான் சாப்பாடு, மண்ணுதான் மருந்து நம்மளுக்கு
  • Ø  மவுனம் பேசினான்.
  • Ø  மவுனம் சம்மதம் என்பதெல்லாம் ஏடு போட்டவர்கள் செய்த இலக்கணம். மவுனம் என்பது ஒரு கேள்வி.
  • Ø  (விடைத்தெரியாதவர்கள் கேள்வி கேட்டவரை திருப்பிக் கேட்கும் ஒரு கேள்வியே மவுனம்)
  • Ø  தை ஒழவு அய்யாட்டுக் கெட
  • Ø  அந்தரங்க சுத்தி ! J
  • Ø  உப்பு? அந்த ஆடம்பரத்துக்கு அங்கெங்கே போவது ?
  •  
  • Ø  2: செல்லத்தாயி வந்திருக்கிறாள்
  • Ø  இயற்கைதான் மனிதனின் ஆசான். தன் இருப்பு அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது.
  • Ø  வானமும் பூமியும் பாடம் நடத்திக்கொண்டேயிருக்கிறது. புத்தியுள்ளவன் புரிந்து கொள்கிறான். வலியுள்ளவன் அறிந்துகொள்கிறான்.
  • Ø  மனிதனின் படைப்பென்று பூமியில் எதுவுமில்லை. மனிதன் கண்டுபிடிப்பாளனே தவிர படைப்பாளி இல்லை.
  • Ø  வானம்பார்த்த சொட்டையன் கம்போடு சேர்த்து மூன்றுகை உயர்த்தினான்.
  • Ø  ஒரு மாடு குடும்பங்காக்கும், ஒன்பது மாடு குலங்காக்கும்.
  • Ø  எல்லா வாசனையையும் விட கெட்டவாசனை மனுசவாசனைதான். அத எந்தத் தண்ணில கழுவுவ? போடா போடா போக்கத்த பயலே.


  • Ø  3: செல்லத்தாயியின் குணங்கள்
  • Ø  சகிக்கமுடியாத அவலட்சணமுமில்லை. வியக்கமுடிந்த அழகுமில்லை.
  • Ø  பிறந்ததேதி குறித்து வைக்கும் மேட்டுக்குடித் தனமெல்லாம் தெரியாது அவர்களுக்கு.
  • Ø  தக்காளிக்கூடை ஓரணாவிற்கு விற்ற ஓர் அடைமழைக் காலத்தில் அவள் பிறந்ததாய் ஞாபகம் பேயத்தேவருக்கு.
  • Ø  ஈரமும் உண்டு அவளுக்கு. நெருப்பென்று தள்ளவும் முடியாது. இனிப்பென்று கொள்ளவும் முடியாது.
  • Ø  ஒரு பானை வெந்நீருக்கு ஒரு சொம்பு பதம்.
  • Ø  கிராமத்து இரவு ஆழமானது. நிஜமான நிசப்தம் நிலவுவது. பகலெல்லாம் தேய்ந்தவர்கள், பன்னிரெண்டு மணி நேரம் உழைத்தவர்கள், பகல் தூக்கத்தை தரித்திரமென்று சபிப்பவர்கள், இரவில் முற்றும் மறந்து தூங்குவார்கள் மூச்சுவிடும் பிணங்களாய்.
  • Ø  கிளைகளோடு காரசாரமாக விவாதிக்கும் காற்றின் பேரோசை
  • Ø  மௌனத்தின் கர்ப்பப்பைதான் கிராமத்தின் இரவு.
  •  
  • Ø  4,5: செல்லத்தாயியின் மறுமணம், மொக்கராசுவின் வேதனை
  • Ø  புயல் வந்து கேள்விகேட்டால் பூவரசஞ் சருகு என்ன சொல்லும்?
  • Ø  மனிதனுக்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில். ஒன்று வாழத்தெரியாத இளம்பருவம். இன்னொன்று வாழ்ந்து முடிந்த முதுபருவம். இரண்டிலும் தனிமைப் படுத்தப்படுவதுதான் வாழ்வின் சாபம்.
  • Ø  வாழ்க்கை வெறுத்துப்போன மனிதர்கள் கடைசியாய் தண்ணீர் குடிப்பது அந்த கண்மாயில்தான்.
  • Ø  தற்கொலையின் முன் நிமிஷம் வரைக்கும்கூட மனிதனுக்கு சுகம் வேண்டியிருக்கிறது.


  • Ø  6,7: சின்னு - தேவரின் வீட்டின் முன் வந்து கத்துகிறான். சின்னுவின் குணங்கள்.
  • Ø  ஒரு வீட்டில் கோழிச்சாறு கொதிப்பதே ஒரு கவுரவம்தான்.
  • Ø  வேப்பமர இலையில் இருந்து தங்கம் வழிந்தது.
  • Ø  நண்டோட நெல் நடனும்
  • Ø  நரியோட கரும்பு நடனும்
  • Ø  வண்டியோட வாழை நடனும்
  • Ø  தேரோட தென்னை நடனும்
  • Ø  கல்யாணம் என்பது இன்னொரு உயிரின் மனசு – உடம்பு – வயிறு மூன்றையும் திருப்தி செய்வது


  • Ø  8: செல்லத்தாயி பெண்பிள்ளை பெற்றெடுக்கிறாள்.
  • Ø  மண்ணுந் தண்ணியுந் தாண்டா குடியானவன் கும்புடுற சாமி
  • Ø  மிளகாய்ச்செடி காய்க்க எழுபது நாள் ஆகும். வாரம் ஒரு தண்ணீர் கட்டி, மாதமொருமுறை களையெடுக்க வேண்டும்.
  • Ø  சீட்டு, தாயம் மட்டுமல்ல – விவசாயமும் ஒரு சூதாட்டம்தான். ஆட்டக்காரர்களில் எவனோ ஒருவன் தான் ஜெயிக்கிறான்.
  • Ø  மூணு தைப்பொங்கல் கண்டு நைந்துப்போன வேட்டி.
  • Ø  ஒடம்புல உசிர் இருக்கு.. ஒழைக்கத் தெம்பிருக்கு… உச்சில சாமி இருக்கு..


  • Ø  9, 10: நாயக்கரிடம் பணம் வாங்க செல்கிறார் தேவர். அழகம்மாள் இறக்கிறாள். பணம் வாங்காமல், நாயக்கருடன் ஊருக்கு வந்து சேர்கிறார் தேவர்.
  • Ø  நாங்க என்ன உங்கள மாதிரி நகத்துல அழுக்கு ஒட்டாத வேலையா செஞ்சிட்டு இருக்கோம்.
  • Ø  மாறிவரும் சமூகத்தில் மணவாழ்க்கை என்பது ஆணால் கிட்டும் சௌகரியங்களை பெண்ணும், பெண்ணால் கிட்டும் சௌகரியங்களை ஆணும் சட்டப்படி திருடிக்கொள்ளும் சம்பிரதாயமாக இருக்கிறது.
  • Ø  முழுச்சட்டியில் கஞ்சியிருந்தா மூடிவைக்க தெரியாது. ஊர் ஆளுகள கூப்பிட்டு ஊட்டி விடும்யா.
  • Ø  குழம்புவெச்ச பிறகும் மீனு குட்டிகிட்டி போடுமா?
  • Ø  கையில் கணவன் பெயர் பச்சைக்குத்தி அந்த கையையே தலையணையாய் வைத்து தூங்குவாள்.


  • Ø  11: அழகம்மாளின் இறுதிச்சடங்கு.
  • Ø  எல்லோரும் தங்கள் சோகங்களையும் கூட்டிக்கொண்டு வெளியேறினார்கள்.
  • Ø  தன் உடம்பையும் உசுரையும் அந்த கைத்தடிக்கு மாற்றி ஓசையில்லாமல் ஊர்ந்தார்.
  • Ø  தலைமாட்டில் வைக்கும் ஊதுவத்தி, குளித்த பிணத்தைவிட குளிக்காத பிணங்களின் கெட்டவாடையைத்தான் விரட்டுகிறது.
  • Ø  பிறந்தபோது குளிப்பாட்டுவதும் சீவாத்மாக்களுக்கு தெரிவதில்லை. இறந்தபிறகு குளிப்பாட்டுவதும் பரமாத்மாக்களுக்கு தெரிவதில்லை.
  • Ø  திரும்பி நின்னு தேரழகு பார்த்தா நானே ஏறிப்படுக்கலாம் போலிருக்கு. (தொழில் நேர்த்தி, தொழில் சுத்தம்)
  • Ø  ”போடியம்மா போ ! பின்னாலயே வாரேன் போ !” – பேயத்தேவர்.


  • Ø  12: புளியமரத்திற்காக மாட்டை பறிகொடுத்தார் பேயத்தேவர் – சின்னுவின் செயலால்.
  • Ø  பெற்றவர்கள் மறைந்துப்போக, உடன்பிறந்தவர்கள் அவரவர் பிழைப்புத்தேடி ஒதுங்கிப்போக, நல்லது கெட்டதுக்கு மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்து விலகிப்போக, பெற்று வளர்த்த பிள்ளைகள்  “கெழவன் கெழவி செத்தாச் சொல்லிவிடுங்க” என்று கண்ணுக்குத் தெரியாத தங்கள் இன்னொரு தொப்பூழ்க் கொடியையும் அறுத்துக் கொண்டோட, உடம்பிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாய் “ஆளவிடு சாமி” என்று அதனதன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும்போது மனைவியின் மடிசாய்கிறான் கணவன். கணவனின் மடிசாய்கிறாள் மனைவி..  (கணவன் மனைவி உறவினை மிக அழகாக ஆழமாக உரித்துக்காட்டி இருக்கிறார்)
  • Ø  மனசும் ஒரு சுடுகாடுதான். நினைவு வந்து இத்தன பேயாட்டம் ஆடுதே.


  • Ø  13: கவர்ந்து சென்ற மாடுகளின் நினைவுகள், மாடுகள் தேவரிடம் ஓடி வந்துவிடுகிறது.
  • Ø  இந்த அடி அடிச்சதுக்கு அந்த மாடு நீ மனுசந்தானான்னு பார்வையால கூட ஒரு கேள்வி கேக்கலையே !


  • Ø  14: மாடு பஞ்சாயத்து – ஊரே காசுப்போட்டு மாட்டை மீட்டுக்கொடுத்தது.
  • Ø  தவணைமுறையில் விடிந்துக்கொண்டிருந்தது வானம்.
  • Ø  எந்த காசிலும் சாதி ஒட்டியிருக்கவில்லை.


  • Ø  15: பேயத்தேவரின் முன்னோர்கள் வாழ்ந்த ஊரின் கதை. முத்துக்கண்ணியின் கதை


  • Ø  16: சீனு சாராயம் காய்ச்ச ஆரம்பித்தான். அவன் திருட்டு சாமர்த்தியம் பற்றி பேசுகிறது இந்த அத்தியாயம்.
  • Ø  தொட்டா ஒட்டிக்கிற மாதிரி இருட்டு


  • Ø  17: சீனு சாராயம் காச, மோக்கராசுவிடம் மனுச எலும்பு எடுத்துவர கேட்கிறான். முத்தாலம்மன் கோயில் திருவிழா.


  • Ø  18: எலும்புக்காக வெட்டியான் தொத்தனிடம் கேட்டு, அங்கே நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
  • Ø  மனுச வாழ்க்கையில் நல்ல இடம் சுடுகாடுதான். மனசு மட்டுப்படுவது அங்கேதான்.
  • Ø  செத்துப்போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும், வீடு திரும்புறவனுக்கு கொஞ்சம் ஞானமும் தரும் உலகின் பழைய பள்ளிக்கூடம் அது.
  • Ø  மனுசன எரிக்கிறது எப்படின்னு தொத்தன் ஒண்ணும் மனுசாஸ்திரம் படிக்கலை. தீ வைக்கிறது எப்படினு திருக்குறள்லயும் சொல்லல. எல்லாம் வழிவழியா வந்த அனுபவம்தான்.
  • Ø  ஒம்போது ஓட்ட கொண்ட தேகத்தை எரிக்க நாலு ஓட்டைப்போதும். நெஞ்சாங்குழி, வயிறு, இரண்டு முழங்கால்.
  • Ø  சுடுகாட்ட ஏன் வடக்கா வச்சாகன்னா, நம்மூர்ல தெக்கு வடக்காத்தான காத்தடிக்கிறது வழக்கம். பொணம் வேகிற பொக ஊருக்குள்ள வராம அப்படியே ஓடிப்போகட்டும்னுதான் வடக்க வச்சிருக்காக சுடுகாட்ட.
  • Ø  அவுக அவுக நெஞ்சுக்கூட்ல என்ன நெனப்புல சாகுறாகளோ, அதப் பொறுத்துதான் வேகுறதும் வேகாததும்.


  • Ø  19: அழகம்மாளின் சேலை சலவைக்கு தரப்பட்டதால் அதை மீட்க தேவர் செல்கிறார்.
  • Ø  குடல் தொங்கி சரிந்துக்கிடந்த கயித்துக்கட்டில் !
  • Ø  ராசாவுக்கு கிரீடம் மாதிரி அவள் சீல என் தலைக்கு.


  • Ø  20: வெள்ளாமை வெளஞ்சிருக்கு. அத ரசிச்சிட்டு இருக்கார் தேவர். அவரின் இரண்டாவது மகள் மின்னலு வாழ்விழந்து வருகிறாள்.
  • Ø  லாந்தரின் வயசான வெளிச்சத்தில்.
  • Ø  வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும் சேர்த்துதான். நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்க போகும் பாவம்.


  • Ø  21: கருத்தக்கண்ணன் சூத்தப்பல்லானை வெட்டிவிடுகிறான்.
  • Ø  மாமியாருக்கு குடுக்குற மரியாதையை பூனைக்குட்டிக்கும் கொடுப்பா. ரெண்டு சீவன்களுக்கும் ஒரே தட்டு; ஒரே கஞ்சி.
  • Ø  பாதாளத்துல கெடக்கோம். இதுக்கு கீழ விழ எடமில்லே.
  • Ø  இந்த மஞ்சகெழங்கு மட்டும் இல்லனா தாலி கயித்துக்கு என்ன பண்ணியிருப்பாகளோ பொம்பளைக?


  • Ø  22: முருகாயியை இரு மகள்களும் வீட்டைவிட்டு துரத்துகிறார்கள்.
  • Ø  கடவுளுக்கு காது கேக்காம இருந்திருக்கலாம். அல்லது இங்க பகல் அங்க ராத்திரியா இருந்திருக்கலாம். ஒண்ணும் நடக்கல.
  • Ø  தல குளுந்துருக்கணும் பாதம் சூடாயிருக்கனும். அதான் நல்ல மனுச உடம்பு.
  • Ø  நான் முந்தி செத்தா நீ தூக்கிப்போடணும். நீ முந்தி செத்தா நான் தூக்கிப்போடணும்.


  • Ø  23, 24, 25: தேவருக்கும் முருகாயிக்குமான உறவு.
  • Ø  மனசு நாலா பக்கமும் திரும்புது. முதுகத் திருப்ப முடியல.
  • Ø  நாலு கால் மனசு
  • Ø  சுடுகாட்டை கடக்கிறவன் தன் பயத்தை மறக்க சத்தம்போட்டுக்கொண்டே நடப்பதுபோல, தம் குறைகளை மறைக்க அடுத்தவர்களின் குறைகளையே அசைபோடுகிறது மனுசக் கூட்டம்.
  • Ø  அவ உருவம் வட்டமா குறைஞ்சு, புள்ளியா தேஞ்சு, கடைசியா கண்ணவிட்டு கரைஞ்சு காணாமப் போச்சு.


  • Ø  26: சின்னுவை கரைசேர்க்க தேவர் நாயக்கரிடம் பணம் கேட்க செல்கிறார். பணம் வாங்கி திரும்ப வந்தார். வண்டி நாயக்கர் இறந்துவிடுகிறார்.
  • Ø  ஒரு மனுஷன் தானா ஒண்ணுக்கு போறவரைக்கும்தான் இருக்கனும். இடுப்புத் துணிய தானா கட்டிக்குற காலம் வரைக்குந்தான் உசுரோட இருக்கனும். என் கையை தூக்கிவிட இன்னொரு கை வேணுங்கிறப்ப நான் இருந்தா என்ன? போனா என்ன ?


  • Ø  27: தேவர் தன் ஊரடி தோட்டத்தை நாயக்கரின் வப்பாட்டிக்கு எழுதித்தர வற்புறுத்தப்படுகிறார். அவரும் கைநாட்டிக்கொடுக்கிறார்.


  • Ø  28: மொக்கராசுக்கு மார்க்க கல்யாணம். மொய்ப்பணத்தை சின்னு எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறான்.
  • Ø  நாக்கும் மனசும் செத்து கெடக்கிறப்ப ருசி எப்படி தெரியும்?
  • Ø  ஆள் செத்துப்போனா மண்ணுக்குள்ள போயிரலாம். மண்ணு இல்லேன்னு போனா ஆளா சாக முடியும்?


  • Ø  29: கிணறு வெட்டுகிறார். மின்னலு பெண் கிணற்று வெடியில் இறக்கிறாள்
  • Ø  உடம்பு செத்துப்போனா மண்ணுக்குள்ள புதைக்கிறோம். இல்ல எரிக்கிறோம். மனசு செத்துப்போனா அவன் அவன் அத உடம்புக்குள்ளயே புதைச்சுக்கிறான்.


  • Ø  30: கிணற்றில் தண்ணீர் வந்து, வெள்ளாம வெளெஞ்சு. நிலத்தை அளவெடுக்க அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.


  • Ø  31. அணை கட்டும் படலம்
  • Ø  நாங்க பாம்புக்குக்கூட பால் ஊத்துற சாதி.
  • Ø  சாவு நாளைக்கு வருதுன்னு தெரிஞ்சாலும் மூச்சு விடுறத இன்னைக்கு நிறுத்திடறோமா என்ன ?

 

இன்னமும் 5 அத்தியாயங்கள் இருக்கிறது. அதை படிக்கையில் குறிப்பேதும் எடுக்கவில்லை. அதற்கான காரணம் முன்னரே கூறிவிட்டேன்.

ஒவ்வொரு அத்தியாத்திலும் நான் இரசித்த வரிகளை இங்கே பதிவு செய்கிறேன். இந்த வரிகளை படிக்கும் ஒவ்வொருமுறையும் மனது ஏதோ செய்கிறது. இனம் புரியாத ஒருவித உணர்வு ஏற்படுகிறது. யாருக்குத் தெரியும்? இதுப்போன்ற ஒரு சந்தர்ப்பத்தை எதிர்கொண்டு அதிலிருந்து பிழைப்புக்காக ஊர்விட்டு வேறு ஊர் வந்து சேர்ந்த என் பாட்டனோ, பூட்டனோ இந்த நாவலை நான் படிக்கும்போது என்னுடன் சேர்ந்து என் உயிரணுக்கள் வாயிலாக அவர்களும் இந்த நாவலை படித்திருக்கலாம். அதனாலோ என்னவோ இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வலியை என்னாலும் உணரமுடிகிறது.

வைரமுத்து அவர்களை கவிப்பேரரசு என்று அழைப்பதில் குற்றமும் இல்லை குறையுமில்லை. அந்த அடைமொழிக்கு அத்தனை பொருத்தம் வாய்ந்தவர் அவர் என்பதை இந்த ஒரு நாவல் உணர்த்திவிட்டது எனக்கு.

இயன்றால் இந்த நூலை வாங்கிப்படியுங்கள், அல்லது இணையத்தில் இருக்கிறது. பதிவிறக்கம் செய்து படியுங்கள். புத்தகம் தேடியும் கிடைக்காதவர்கள் என்னை அணுகலாம். நான் பகிர்கிறேன்.

மி: dhineshmaya@gmail.com

* தினேஷ்மாயா *