விடுதலை

Friday, July 09, 2010

    


      சற்று தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி கேட்டேன். நம் தமிழகத்தின் முன்னாள் உயர் பதவி வகித்தவர் ஒருவர் (X என்று இனி அவரை அழைப்போம்) ஆயுள் கைதிகளை அவர்களின் தண்டனைக் காலம் முடியும் முன்னர் விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதைப் பற்றி எனது சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். 
     கைதி என்பவர் யார். கைதிகளில் பலவிதம் இருக்கின்றனர். ஆத்திரத்தில் தவறு செய்பவர், திட்டம் போட்டு கொலை கொள்ளையில் ஈடுபடுபவர், வற்புறுத்தலின் பேரில் தவறு செய்பவர், விதிவசத்தால் செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிப்பவர், இன்னும் இப்படி பலவிதமாய் கைதிகள் இருக்கின்றனர். ஆனால் இவர்களையும் மீறி மக்கள் பணத்தை தன் சுயநலத்திற்காக சுருட்டிக் கொள்ளும் ஈன மனிதர்களை நான் ஒரு போதும் கைதிகளின் வரிசையில் சேர்க்க மாட்டேன். அவர்களை மனிதனாகவே நான் கருதுவதில்லை அவர்கள் மிருகத்தைவிடவும் கேவலமான ஒரு பிறவி என்பது என் தனிப்பட்ட கருத்து. அது யாராக இருந்தாலும் சரி.    
     நம் X சொன்ன கருத்து என்னவென்றால், அவ்வாறு ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை அவர்களின் தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலை செய்தால் சமூகத்தில் தவறுகளும் குற்றங்களும் அதிகரிக்கும். ஆகவே அவர்களை தண்டனைக் காலம் முடியும் முன்னர் விடுதலை செய்யக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.
     சிறைச்சாலை என்பது குற்றவாளியை சமூகத்திலிருந்து தனிமைப் படுத்தி, அவர் செய்த குற்றத்தை உணர வைத்து அவரை நல்வழிப் படுத்தவே உருவாக்கப்பட்டது. ஒரு கைதிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் தவறை 6 ஆண்டுகளிலேயே உணர்ந்து திருந்தி வாழ ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கிறார். அவர் ஆயுள் கைதி என்கிற ஒரே காரணத்தினால் அவர் இன்னமும் 8 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும். தன் தவறை உணர்ந்து திருந்த வாய்ப்பை எதிர்பார்ப்பவர்க்கு அப்படியொரு வாய்ப்பை அளிப்பது தவறு ஒன்றும் இல்லையே.    
     இன்றைய இந்தியாவில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளைவிட
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் தானே அதிகம். நம் X மீது கூட சொத்து குவிப்பு வழக்கு இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன். அதுவும் பல ஆண்டுகளாக இந்த வழக்கு தாமதமாக்கப் பட்டு வருவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஒருவேளை அவர்மீது இருக்கும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவரை கண்டிப்பாக அவர் கட்சிக்காரர்கள் ஜாமீனில் எடுப்பார்கள். அப்போது அவர் சொல்வரா, நான் ஒரு ஆயுள் தண்டனை கைதி, என்னை ஜாமீனில் வெளியே எடுக்காதீர்கள், குற்றங்கள் அதிகரிக்கும் என்று…..   
“இன்னா செய்தாரை …..” குறள் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். குற்றவாளியை தண்டிப்பத்தைவிட மன்னிப்பதே சிறந்தது, அதைவிட அவர் திருந்தி வாழ விரும்பும்போது அவருக்கு அந்த வாய்ப்பை அளிப்பதே மிகவும் உயர்ந்த காரியம். அதை தடுப்பது மனித உரிமை மீறல் என்பேன் நான்……..
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: