இமயம்..

Saturday, October 06, 2012




Our Imayam Foundation & Siva Brothers Foundation இணைந்து திண்டுக்கல் அருகே இருக்கும் ஓர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு வரும் அக்டோபர் 14 அன்று சென்று அங்கிருக்கும் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சில  போட்டிகளையும் விளையாட்டுக்களையும் நடத்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளோம். இன்று மதியம் 3 மணி முதல் 7 மணி வரை எனக்கு இங்கே தெரிந்தவர்கள் சிலரை நேரில் சந்தித்து பேசினோம். நல்ல விஷயங்களை செய்யும்போதுதான் பல நல்ல உள்ளங்களை பார்க்க முடிகிறது. இன்று மட்டும் 3,100 ரூபாய் நன்க்கொடையாக கிடைத்தது. பணம் மட்டுமல்லாது பலரும் பல உதவிகளை செய்ய முன்வந்திருக்கின்றனர். மருத்துவர்கள் இருவரை அணுகினோம். அவர்கள் இருவரும் நேரில் வந்து அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்ய முன்வந்தனர். இன்னொரு நண்பர் ஒருவரை அணுகினோம் அவர் கொள்முதல் விலையில் மருந்துகளை விற்பனை செய்பவர். அங்கிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான மருந்து அனைத்தையும் அவர் தருவதாக சொல்லியிருக்கிறார். ஓட்டல் ஒன்றில் நமக்கு தெரிந்த நண்பரை அணுகினோம். அன்று அந்த குழந்தைகள் அனைவர்க்கும் உணவு, இனிப்புகளை அவர் வழங்க முன்வந்திருக்கிறார். இன்னும் பல நல்ல உள்ளங்கள் உதவி செய்யவிருக்கின்றனர். ஆதரவாக கைக்கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

காமராஜர் சொன்ன வார்த்தைதான் நினைவுக்கு வந்தது. குழந்தைகள் படிப்பிற்கு பணம் இல்லையா. வா, இரண்டு பாத்திரங்களை ஏந்தி தெருவில் நிற்போம். பிச்சை எடுத்தாவது பிள்ளைகளை படிக்க வைப்போம் என்றார். இங்கே நாம் யாசகம் எடுக்க வேண்டாம். அள்ளி கொடுக்க உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கின்றனர். நீங்கள் தேநீர் அருந்தும் 10 ரூபாயை நமக்கு அளித்தால் கூடப் போதும். அங்கிருக்கும் குழந்தைகள் இருவருக்கு பேனா வாங்கித்தருவோம். உதவி என்பது செய்யும் அளவில் இல்லை, உதவி செய்யவேண்டும் என்று நினைக்கும் நம் இதயத்தின் அளவைப்பொறுத்ததே.

நாம் வசதி இல்லாத இவர்களை படிக்க வைப்போம். நாளை இவர்கள் இன்னும் சிலரை படிக்கவைப்பர். நாளை அந்த சிலர் இன்னும் பலரை படிக்கவைப்பர். ஒருவனுக்கு கல்வி அளிப்பதைவிட அவனுக்கு சிறந்த உதவியை யாராலும் இங்கே செய்துவிடமுடியாது. அதை நம்மால் இயன்றவரை செய்வோம்.

உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். அது எதுவானாலும் சரி. பணத்தை நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. உங்கள் ஈடுபாடு ஒன்று மட்டுமே போதும். எதாவது ஒருவகையில் உங்கள் ஒத்துழைப்பு நம் இயக்கத்திற்கு கிடைத்தால் அதுவே போதும்..

வாழ்வோம்.. வாழ வைப்போம்..

-அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: