என் ஆயிரமாவது பதிவு

Wednesday, October 03, 2012






சின்ன சின்ன ஆசை

    இது என்னுடைய ஆயிரமாவது பதிவு. கொஞ்சம் சிறப்புவாய்ந்த பதிவு ஆதலால் எதைப்பற்றி எழுதலாம் என்று நிறைய யோசித்தேன். என் அப்பா பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். என் பெற்றோர் இருவரையும் பற்றி ஒன்றாக எழுதலாம் என்று நினைத்தேன். என்னை பற்றி, என் காதலை பற்றி, என்னவளை பற்றி, அல்லது ஒரு கற்பனை கதையாச்சும் எழுதலாம் என்று நினைத்தேன், சிறிதாய் ஒரு கவிதை எழுதலாம் என்றும் நினைத்தேன், அல்லது நான் வரைந்த ஓவியங்களை இதுவரை இணையத்தில் வெளியிட்டதில்லை அதை இங்கே என் ஆயிரமாவது பதிவாக வெளியிடலாம் என்றும் நினைத்தேன். இப்படி இன்னும் நிறைய யோசித்தேன். என் ஆயிரமாவது பதிவிற்காக ஆயிரம் விஷயங்களைப் பற்றி யோசித்திருப்பேன். என்ன பதிவு செய்யலாம் என்று யோசித்து யோசித்து தலையே வலித்துவிட்டது. அப்புறம் தலைவலியை ஓரம்கட்டிவைத்துவிட்டு, புதிதாய் ஒரு யோசனை வந்தது. நான் இதுவரை சிந்தித்தவைகளைப் பற்றி அப்புறம் எழுதிக்கொள்ளலாம். என் மனதில் ஒளிந்திருக்கும் சின்ன சின்ன ஆசைகளை இங்கே பதிவு செய்யலாம் என்று முடிவு செய்தேன். என் மனதின் ஆசைகளை இதுவரை யாரும் கேட்டதும் இல்லை நானும் சொன்னதும் இல்லை அது நிறைவேறியதும் இல்லை. என் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை இங்கே பதிவு செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எவ்வளவு ஆசைகளை கொட்டி தீர்க்க முடியுமோ, அவ்வளவையும் இங்கே கொட்டி தீர்த்துவிடுகிறேன்.

1. மழையில் நனையனும். நனைவது என்றால் சும்மா இல்லை. விடாமல் கொட்டும் மழையில் ஒருமணி நேரமாச்சும் எந்த ஒரு கவலையும் இன்றி நனையனும்.

2. எனக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் நீச்சல் கத்துகிட்டு, எதாச்சும் ஒரு பெரிய ஆற்றையோ முடிந்தால் ஒரு கடலை கூட நீந்தி கடக்கனும்.

3. ஒரு நாள் முழுக்க உணவு உறக்கம் ஏதுமின்றி என் மனதிற்கு பிடித்த இசையை கேட்டுட்டே இருக்கனும்.

4. இயந்திரத்தனமாய் இல்லாமல், எனக்கு இரண்டு ரெக்கைகள் வேண்டும். நான் அந்த ரெக்கைகளோடு சுயமாய் வானில் பறக்க வேண்டும்.

5. கடலுக்கடியில் ஒரு கண்ணாடி வீட்டில் ஒரு நாள் முழுவதும் தங்கியிருக்க வேண்டும்.

6. வெகுதூரம் சைக்கிள் பயணம் போகனும்.

7. சைக்கிளை கைகளைவிட்டுவிட்டு ரொம்ப தூரம் ஓட்டனும்.

8. மீன்தொட்டி ஒன்று வாங்கிவந்து மீன்களை என் அறையில் வளர்க்கனும்.

9. வண்ணவண்ண ரோஜா செடிகளை வாங்கிவந்து ஒரு பூந்தோட்டம் அமைக்கனும்.

10. ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாய் வரணும்.

11. மூக்குக் கண்ணாடி அணியாமல் வாழனும்.

12. குதிரை சவாரி செய்யனும்.

13. சிங்கத்தை தொட்டுபார்த்து அதனுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கனும்.

14. வயலின் வாசிக்க கத்துக்கனும்.

15. பரதநாட்டியத்தை ஒரு கலையரங்கில் சென்று பார்க்கனும்.

16. கர்நாடக இசைக்கச்சேரி கேட்கனும்.

17. மேஜிக் ஷோ நேரில் பார்க்கனும்.

18. சர்க்கஸ் பார்க்கனும்.

19. ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அதை தினமும் பராமரிக்கனும்.

20. என் பிறந்தநாளன்று என் நண்பர்கள் என் வீட்டுகதவை தட்டு கேக் கொண்டுவந்து வாழ்த்து தெரிவிக்கனும்.

21. முடியாது என்று தெரியும், இருந்தாலும், நான் படித்த பள்ளியில் மீண்டும் 12th-A Section-ல் ஒரு நாள் அனைவரும் படிக்கனும்.

22. காலத்தில் பின்னாடி செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கனும். அவள் பிரிந்து சென்ற அந்த தருணத்தை நான் மாற்றி அமைக்கனும்.

23. சொந்தமாய் ஒரு வீடு கட்டனும். இரண்டு அடுக்கு வீடு. மொட்டைமாடியில் கடற்கரை காற்று நம்மை வந்து கூட்டி செல்லனும்.

24. திரையரங்கில் எதாச்சும் ஒரு திரைப்படத்தை நான் மட்டும் தனியாக பார்க்கனும். முடிந்தால் என் மனதிற்கு பிடித்தவளுடன் தனியாக ஒரு திரைப்படத்தை பார்க்கனும்.

25. எப்போது பயணித்தாலும் எனக்கு ஜன்னலோர இருக்கையே கிடைக்கவேண்டும்.

26. தொலைதூர பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் தலைசாய்த்து கொஞ்சம் பழைய பாடல்களை ரசித்து கேட்டவாரே பயணிக்கனும்.

27. இந்தியாவை முழுவதுமாய் சுற்றி பார்க்கனும்.

28. பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கனும்.

29. லாரியில் ஓட்டுனர் அருகே அமர்ந்து ரொம்பதூர பயணம் செல்லனும்.

30. பாஷை தெரியாத ஊரில் ஒரு வாரம் தங்கி இருந்து எப்படித்தான் நான் சமாளிக்கிறேன் என்று பார்க்கனும்.

31. காசிக்கு போகனும்.

32. இமயமலையின் உச்சிக்கு செல்லனும்.

33. இல்லாத இறைவனை ஒருமுறையாச்சும் பார்க்கனும்.

34. என்றும் மனதளவில் குழந்தையாய் இருக்கனும், இளமையாய் இருக்கனும்.

35. நாடிவரும் அத்தனை பேருக்கும் இல்லையென சொல்லாமல் உதவி செய்யனும். அந்த அளவிற்கு வாழ்வில் உயரனும்.

36. விண்வெளிக்கு செல்லனும்.

37. நிலவின் தரையில் பாய்விரித்து தூங்கனும்.

38. மரத்தில் எந்த உதவியும் இல்லாமல் ஏறனும்.

39. சொந்தமாய் நிலத்தில் பயிரிட்டு ஒருமூட்டை அரிசியை அறுவடை செய்யனும்.

40. கயிற்று கட்டிலில் வெட்ட வெளியில் படுத்து உறங்கனும்.

41. அம்மா எனக்கு இந்த வயதிலும் சாப்பாடு ஊட்டி விடனும்.

42. கையில் மருதாணி வெச்சுக்க எனக்கு பிடிக்கும். ரொம்ப டிசைன்ஸ் பிடிக்காது. சாதாரணமாக மருதாணி வெச்சுக்கனும்.

43. ஒரு பெரிய கட்டிடத்தில் இருந்து கீழே குதிக்கனும். எந்த அடியும் படக்கூடாது.

44. ஒரு நோபல் பரிசு அப்புறம் ஒரு ஆஸ்கார் விருது வாங்கனும்.

45. பாம்பை கையில் பிடிக்கனும்.

46. எனக்கு பிடிச்ச கோயில்கள் அனைத்திற்கும் சென்று வரனும்.

47. மலேசியா முருகன் கோயிலுக்கு நிச்சயம் ஒருநாள் போகனும்.

48. இந்தியாவை சுற்றி முடித்தபின்னர் உலகை சுற்ற ஆரம்பிக்கனும்.

49. பறப்பதில் விமானம், மிதப்பதில் கப்பலைத் தவிர மற்ற எல்லா 
வகை உணவுகளையும் சாப்பிட்டு பார்க்கனும்.

50. தண்டவாளத்தில் ரயில் வராதபோது தலைவைத்து படுக்கனும்.*

51. ஒரு நாள் முழுக்க ஆழ்ந்த தியானத்தில் இருக்கனும்.

52. ஒரு திரைப்படம் இயக்கனும். ஒரு படம் மட்டுமல்ல, என் 
மனதில் இருக்கும் எல்லா கதைகளையும் திரைப்படமாக்கனும்.

53. நான் எழுதிய புத்தகங்களை அச்சடித்து வெளியிடனும்.

54. இன்னும் பல ஆயிரம் பதிவுகளை என் வலையில் நான் எழுதனும்.

55. ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் ஏழை நாடுகளில் சில மாதகாலம் தங்கியிருந்து அந்த மக்களின் வாழ்க்கையை வாழனும்.

56. அமேசான் காட்டில் ஒரு இரவு முழுதும் இருக்கனும்.

57. பாலைவனத்தை பார்க்கனும்.

58. ஒட்டக சவாரி செய்யனும்.

59. அண்டார்டிகா போகனும்.

60. விமானத்தில் பயணிக்கனும்.

61. புல்லட் ரயிலில் போகனும்.

62. உலகத்தில் இதுவரை யாரும் பயணிக்காத வேகத்தில் நான் பயணிக்கனும்.

63. பல ஆயிரம் பூக்கள் இருக்கும் ஒரு தோட்டத்தில் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கனும்.

64. எரிமலை சீற்றத்தை நேரில் பார்க்கனும்.

65. பாராசூட்டில் பறக்கனும்.

66. என் வீட்டில் ஒரு நூலகம் அளவிற்கு புத்தகங்களை சேகரித்து வைக்க வேண்டும்.

67. வீணை இசையை கேட்டுட்டே இருக்கனும். அப்படியே புல்லாங்குழல் இசையையும் கேட்டுட்டே இருக்கனும்.

68. மீண்டும் ஒருமுறை என் கல்லூரி வாழ்க்கையை ஒரு நாள் மட்டும் வாழ்ந்து பார்க்கனும்.

69. மீண்டும் ஒருமுறை மனதை பாதித்த அவளுடன் இன்னொரு டெல்லி பயணம் போகனும்.

70. நானும் அவளும் பேசிக்கொண்டதையும் எங்களின் குறுஞ்செய்திகளையும் மீண்டும் என் நினைவுகளில் இருந்து எடுத்து மறுபடியும் கேட்க வேண்டும்.

71. ஒரு வாரம் சாப்பாடு தண்ணீர் இல்லாத காட்டில் இருக்கனும். எப்படித்தான் என்னால் அங்கே உயிர் வாழ முடிகிறது என்று நான் பார்க்கனும்.

72. ஒருமுறையாச்சும் ஆம்புலன்ஸில் போய் பார்க்கனும்.

73. சென்னையின் அனைத்து தெருக்களையும் சைக்கிளில் சுற்றி வரனும். ஆனால் என்ன, வெயில்தான் தாங்க முடியாது.

74. அதிகாலை சூரியனை கடற்கரையில் பார்க்கனும் *

75. கடற்கரையில் அவளுடன் கைகோர்த்து நடக்கனும்.

76. இயன்றவரை திருமணமே செய்துக்கொள்ளாமல், கடைசிவரை தனியாகவே இருந்திடனும்.

77. கண்டிப்பாக ஒரு நாள் நான் IAS ஆகியே தீரனும்.

78. அனைத்து செய்தித்தாளிலும் முதல் பக்கத்தில் என் புகைப்படத்தோடு என் சாதனையும் என் பேட்டியும் வர வேண்டும்.

79. கபடி விளையாடனும்.

80. சிலம்பாட்டம் கத்துக்கனும்.

81. ஒவ்வொரு சனிக்கிழமையும் திரையரங்கிற்கு சென்று ஒரு திரைப்படம் பார்க்கனும்.

82. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலைக்கு போகனும்.

83. ஒருவேளை திருமணம் ஆனால், அவளைப்போல அழகான ஒரு ஆண் குழந்தை வேண்டும்.

84. ஹிந்தி நல்லா பேச கத்துக்கனும்.

85. கராத்தே சின்ன வயசில் கத்துக்கிட்டேன். ஆனா மறந்துபோச்சு, அதையும் குங்பூ இரண்டையும் கத்துக்கனும்.

86. எனக்கு சொந்தமாக ஒரு துப்பாக்கி வேணும். யாரையும் கொல்ல அல்ல. இருந்தாலும் தோட்டா இல்லாத ஒரு உண்மை துப்பாக்கி எனக்கு வேண்டும்.

87. சொந்தமாய் ஒரு கோயில் கட்டனும்.

88. Spiderman போல நானும் கட்டிடங்கள் மத்தியில் தாவி பறக்கனும்.

89. மனதிற்கு பிடித்த பாடலை கேட்டுக்கொண்டே, அந்த பாடல் முடியும்வரை அவளை முத்தமிட வேண்டும்.

90. இந்த பூமியை விண்வெளியில் இருந்து பார்க்கனும்.

91. கிராமத்து தோட்டத்தில் ஆலமரத்தடியில் மதிய நேரத்தில் படுத்து உறங்கனும்.

92. நெடுந்தூர ரயில் பயணம் நண்பர்களுடன் போகனும்.

93. ஈழத்திற்கு சென்று என் தமிழ் மக்களை சந்திக்கனும்.

94. Galapogus தீவிற்கு சென்று அங்கு சில காலம் தங்கியிருக்கனும்.

95. 70 வயது வரை வாழனும்.

96. உலகில் யாராலும் செய்ய முடியாத ஒரு விஷயத்தை நான் செஞ்சு காட்டனும்.

97. நடுரோட்டில் நண்பர்களுடன் ஓடிப்பிடிச்சு விளையாடனும்.

98. ஒரு International Film Festival-ல் என் திரைப்படமும் கலந்துக்கனும்.

99. ஒரு மிகப்பெரிய புரட்சியை உண்டாக்கனும்.

100. வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடனும்.

101. கையில் புகைப்படக் கருவி, ஒரு கணினி, ஒரு வண்டி, போதும் என்கிற அளவிற்கு பணம். இவைகளை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்றிவர வேண்டும். என் பார்வைக்கு வித்தியாசமாய் தெரிவதையெல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டும்.

102. என்னைப்பற்றி நான் சொல்லாமலே புரிந்துக்கொள்ளும் ஒரு அன்பான வாழ்க்கைத்துணை வேண்டும்.

103. கடைசிவரை கூட இருக்க உண்மையான நட்பு ஒன்று வேண்டும்.

104. அவளும் நானும் ஒன்றாக சேர்ந்து சிறிது மது அருந்தி பார்க்கனும்.

105. Drums வாசிக்கனும்.

106. ரொம்ப Thrill-ஆன விஷயத்தை செய்து பார்க்கனும்.

107. தலைகீழா ரொம்ப நேரம் நிற்கனும்.

108. ஒரு எறும்பு அளவிற்கு சிறியதாய் மாறி அந்த நிலையில் வாழ்க்கை எப்படி இருக்கு என்று பார்க்கனும்.

109. கொஞ்சம் அயல்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்ளனும்.

110. ஒரு மசூதிக்கு போகனும். ஒரு தேவாலயத்திற்கு போகனும். அங்கே சென்று பிரார்த்தனை செய்யனும். ( இறைவன் ஒன்று தானே )

111. கூட்டமான பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ரொம்பதூரம் பயணிக்கனும்.

112. யாராச்சும் சில வெட்டிபயல்களோடு சின்ன கைகலப்பில் ஈடுபடனும். சண்டை போட்டால் எப்படி இருக்கும்னு பார்க்கனும்.

113. Goods ரயிலில் கடைசி பெட்டியில் பயணிக்கனும்.

114. செல்போன் டவர் மேல ஏறி நின்று ஊரை பார்க்கனும்.

115. நிலவொளியில் அவள் மடியில் படுத்து நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கனும்.

116. நண்பர்களோடு சேர்ந்து சின்னதா ஒரு குத்தாட்டம் போடனும்.

117. ஒருநாள் முழுக்க யாருடனும் பேசாமல் மௌனவிரதம் இருக்கனும்.

118. கடல் பயணம் போகனும்.

119. நண்பர்கள் ஒரு 20 பேருக்குமேல் ஒன்னா சேர்ந்து குட்டி சுவற்றில் அமர்ந்து வெட்டி கதை பேசனும்.

120. கடற்கரையில் துப்பாக்கியால் பலூனை சுடும்போது அனைத்து குண்டுகளையும் சரியாக சுடனும்.

121. சொந்தமாக ஒரு பள்ளிக்கூடம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லை, ஒரு முதியோர் இல்லம் கட்டனும்.

122. Hockey விளையாடி பார்க்கனும்.

123. என் வாழ்க்கையை ஒரு பள்ளிக்கூட கணக்கு வாத்தியாராக வாழனும். 

124. நம் தேசியகொடியை ஒரு விழாவில் நான் கொடியேற்றனும்.

125. அருவியில் தன்னந்தனியாய் குளிக்கனும்.

126. ரொம்ப ஆழமான கிணற்றில் மேலிருந்து குதிக்கனும்.

127. மீன் பிடிக்கனும்.

128. சுரங்கம் ஒன்றின் உள்ளே சென்று பார்க்கனும்.

129. பிரமிட் உள்ளே சென்று பார்க்கனும்.

130. Eiffel Tower மேலே போய் நிற்கனும்.

131. மாசு இல்லாத காற்றையே எப்போதும் சுவாசிக்கனும்.

132. தீபாவளி அன்று நிறைய பட்டாசு வெடிக்கனும்.

133. விடிய விடிய தெருக்கூத்து

134. வேட்டைக்கு போகனும்.

135. ஒரு பெரிய காற்றாலையின் மேல் நிற்க வேண்டும்.

136. கடற்கரை மணலில் மணல் வீடு கட்டனும்.

137. தாஜ்மஹாலுக்கு அவளுடன் செல்ல வேண்டும்.

138. எனக்கு முன்னரே அவள் இறக்க வேண்டும், அவள் இறந்த அடுத்த நொடியே நானும் இறக்க வேண்டும். எங்கள் இருவருக்கும் அருகருகே கல்லறை அமைக்க வேண்டும்.

139. எவ்வளவு வயதானாலும் அவள் மீது நான் கொண்டிருக்கும் காதலும் என் மீது என்னவள் கொண்டிருக்கும் காதலும் என்றும் குறையாமல் இருக்கனும்.

140. போதி மரத்தின் அடியில் அமர்ந்து நானும் தியானம் செய்யனும். 

141. எத்தனை வருடங்கள் ஆனாலும் நான் இப்படியே இருக்க வேண்டும்.

142. தூக்கத்திலேயே என் உயிர் பிரிய வேண்டும் 

143. ஒரு பெண்ணை பார்க்கனும். அவ பின்னாலயே சுத்தனும். அவளைபத்தி தெரிஞ்சுக்கனும். அவ கண்ணை பார்த்து I Love you சொல்லனும். எங்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செஞ்சுக்கனும்.

இன்னும் சின்ன சின்ன, பெரிய பெரிய ஆசைகள் நிறைய இருக்கு. இப்போதைக்கு என் ஆயிரமாவது பதிவுக்காக 143 ஆசைகளை இங்கே பதிவு செய்திருக்கேன்.

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: