அழகான மனைவி அன்பான துணைவி

Tuesday, August 22, 2017


" அழகான மனைவி.. அன்பான துணைவி..
அமைந்தாலே பேரின்பமே... "
#கல்யாண_மாலை_கொண்டாடும்_பெண்ணே


முதலில் நாம் குறுஞ்செய்தி வாயிலாக பேசத் துவங்கினோம். இணையத்தில் நமக்கு பிடித்த சில புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ள துவங்கினோம். சில நாட்கள் கழித்து நமக்கு பிடித்த பாடல் வரிகளை பகிர்ந்தோம். பின்னர், நமக்கு பிடித்த பாடல்களை பகிர்ந்தோம். சில நாட்கள் கழித்து, குறுஞ்செய்தியில் மனம்விட்டு பேச துவங்கினோம். பெற்றோர்கள் நமக்கு வைத்த பெயர்களை மறந்து, நான் உனக்கொரு பெயர் சூட்ட - நீ எனக்கு பல பெயர்கள் சூட்டி - மகிழ்ந்தோம். நம் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்தோம். நம் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள துவங்கினோம். அன்யோன்யமாக பேச ஆரம்பித்தோம். எதிர்பாரா வண்ணம், தொலைப்பேசியில் பேச ஆரம்பித்தோம். இருவருக்குமே திகைப்பு, ஆச்சர்யம், சில ஏமாற்றமும்கூட. குறுஞ்செய்தியில் பேசுவதுபோல தொலைப்பேசியில் பேச முடியவில்லை நம்மால். தயக்கமா இல்லை இனம் புரியாதா ஏதோ ஒன்றா ! ஏதோ நம்மை தள்ளியிருக்க வைத்தது. நம் அன்பு அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இங்கும் அன்யோன்யமாக பேச ஆரம்பித்தோம். நம்மிருவரின் எண்ணங்களை பகிர்ந்தோம், ஆசைகளை பகிர்ந்தோம், கனவுகளை பகிர்ந்தோம், இலட்சியங்களை பகிர்ந்தோம், கவலைகளை பகிர்ந்தோம், பால்ய நினைவுகளை பகிர்ந்தோம். முன்பெல்லாம் நாம் பேசிக்கொள்ளும்போது முகமறியா யாரோ ஒருவருடன் பேசுவது போன்ற உணர்வு வரும். ஆனால், இப்போது நாம் பேசிக்கொள்கையில், நான் என்னுடன் பேசுவது போன்றொரு உணர்வு. என் மனசாட்சியுடன் பேசுவது போலவே உணர்கிறேன். நீயும் அப்படியே உணர்கிறாய் என்றறிவேன் நான். 

சில விஷயங்களை ஒரு தோழியாக என்னுடன் பகிர்ந்தாய்..
சில விஷயங்களை ஒரு காதலியாக என்னுடன் பகிர்ந்தாய்..
சில விஷயங்களை ஒரு மனைவியாக என்னுடன் பகிர்ந்தாய்..

தோழியாக இருந்து என் குழந்தைத்தனத்தை எனக்கு உணர்த்தினாய்..
காதலியாக இருந்து என் அன்பான இதயத்தின் எண்ணங்களை வெளிக்கொண்டு வந்தாய்..
மனைவியாக இருந்து என் கடமைகளையும், எனக்கான பொறுப்புகளையும் எனக்கு உணர்த்தினாய்..

வேறென்ன சொல்ல....

"அழகான மனைவி.. அன்பான துணைவி..
அமைந்தாலே பேரின்பமே... "

பேரின்பம் காண்கிறேன் - உன்னால் !!!!!!!!

* தினேஷ்மாயா *

0 Comments: