எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

Saturday, August 15, 2020


 எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே - அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே - இதை

வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்

வாயுற வாழ்த்தேனோ? - இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

 

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்

ஈந்ததும் இந்நாடே - எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந்நாடே - அவர்

கன்னிய ராகி நிலவினி லாடிக்

களித்ததும் இந்நாடே - தங்கள்

பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்

போந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

 

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு

வளர்த்ததும் இந்நாடே - அவர்

தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்

தழுவிய திந்நாடே - மக்கள்

துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்

சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்

அங்கவர் மாய அவருடற் பூந்துகள்

ஆர்ந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம், வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

 

- பாரதியாரின் தேசிய கீதங்கள் நூலிலிருந்து..

 

 * தினேஷ்மாயா *

0 Comments: