வந்தே மாதரம் என்போம்

Saturday, August 15, 2020


வந்தே மாதரம் என்போம் - எங்கள்

நிலத் தாயை வணங்குதும் என்போம்

வந்தே மாதரம் என்போம் - எங்கள் 

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

 

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே

 

வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.


ஈனப் பறையர்க ளேனும் அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத் தராய்விடு வாரோ? - பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

 

வந்தே மாதரம் என்போம்எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.


ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

 

வந்தே மாதரம் என்போம்எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.


ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?


வந்தே மாதரம் என்போம்எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.


எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்

யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்


வந்தே மாதரம் என்போம்எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

 

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி


வந்தே மாதரம் என்போம்எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

- பாரதியாரின் தேசிய கீதங்கள் நூலிலிருந்து..

 

* தினேஷ்மாயா *

0 Comments: