கற்போம் கற்பிப்போம்

Sunday, March 30, 2014


   இந்த காலத்தில் படிப்புக்கு ஏத்த வேலை கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அது மனதுக்கு பிடித்ததாய் இருப்பதில்லை. நம் நாட்டில் வளரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் எதை கற்றுத்தருகிறது என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீ நல்லா படிச்சு ஒரு டாக்டராகனும், இஞ்சினியர் ஆகனும், வக்கீல் ஆகனும் இப்படி சொல்லி சொல்லியே வளர்க்கிறோம். அவன் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அந்த எண்ணத்தை வளரவிடாமல் நம் எண்ணத்தை திணித்து நாளாக நாளாக அது அவனை ஆட்கொண்டுவிடுகிறது.

 நம் பள்ளிகளில் மாணவனில் அறிவை வளர்க்க எந்த கல்வியும் கற்பிக்கப்படுவதில்லை. உயர்கல்விக்கு என்ன தேவையோ அதைத்தான் கற்பிக்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் நான் இயற்பியலிலும் வேதியலிலும் என்ன படித்தேனோ அதே பாடங்கள்தான் என் பொறியியல் முதலாம் ஆண்டு பாடத்திலும் வந்தது. 

  SILVER NITRATE, SULPHURIC ACID, CENTRIPETAL FORCE, INTEGRATION, DIFFERENTIATION, HIBISCUS, ORYZA, METABOLISM, GYMNOSPERM, இப்படி பல வார்த்தைகள் படித்திருக்கிறேன். ஆனால் அவைகளை என் நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதில்லையே.

 நான் என் பள்ளியில் படித்த அனைத்தும் என் வேலைக்கு பயன்படும்படியாக மட்டுமே இருந்திருக்கிறதே தவிர, என்னை மனிதனாக்கியது எனது கல்வியோ அல்லது எனது கல்விமுறையோ அல்ல. என்னை ஒரு குடிமகனாக்கியது எனது கல்விமுறையா என்றால் இல்லை என்ற பதில்தான் என்னிடம் இருந்து வரும்.

  சாலையில் செல்லும்போது என்ன மாதிரியான விதிகளை பின்பற்ற வேண்டும், சமூகத்தில் எந்தெந்த பிரச்சனைகள் வரும் அவைகளை எவ்வாறு கையாள வேண்டும், ஒரு அரசாங்க அலுவலகத்திற்கு சென்றால் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் இன்னும் இந்த மாதிரி வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை என் கல்விமுறை எனக்கு கற்றுதரவில்லை. நான் படித்ததெல்லாம் புத்தகங்களில் இருந்த பாடங்களைத்தான். ஆசிரியர்களும் பள்ளியும் மாணாக்கர்களை மதிப்பெண் எடுக்க வைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். மாணவனை சிறந்த குடிமகனாக்க எந்த கல்விமுறையும் நம் நாட்டில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. பள்ளியில் ஒருவன் எடுக்கும் மதிப்பெண்தானே ஒருவனின் தலையெழுத்தையே நிர்ணயிக்கிறது இங்கு. பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தவன் பன்னிரெண்டாம் வகுப்பிலும் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் எடுக்கிறான். அவனுக்கு மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ இருக்கும் சிறந்த கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறத்து. அவனை வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து கொத்தி சென்றுவிடுகின்றன. ஒருவனை பாடுபட்டு வளர்த்தது வெளிநாட்டிற்கு தாரைவார்க்கவா ?

  இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வகுப்பில் தேர்ச்சிபெறும் மாணவன்தானே இன்று அரசு வேலைகளிலும் மற்ற வியாபரங்களையும் பார்த்துக்கொண்டு நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுகிறான்.

  இந்திய கல்விமுறையில் எங்கோ பிழை இருக்கிறது. அனைவரும் சொல்கின்றனர் இந்தியாவின் கல்விமுறைதான் உலகில் சிறந்தது, இதுதான் பல அறிஞர்களையும் உயர்ந்த சிந்தனையாளர்களையும் உருவாக்கியது என்று. அனைவருக்கும் நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

  இன்று நாம் பின்பற்றும் கல்விமுறை ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டு சென்றது. இங்கு அந்த கல்விமுறை இல்லாதபோதே உலகிற்கு பல அறிஞர்களை கொடுத்த தேசம் என் இந்திய தேசம். நம் கல்விமுறையில் இருக்கும் அந்த குறைப்பாட்டை என்னவென்று ஆராய்ந்து அதை மாற்றிவிட்டால், நிச்சயம் இந்தியாவை வல்லரசாக்க நம் குழந்தைகள் தயாராக இருக்கிறார்கள், அவர்களின் முயற்சியால் நம் நாடும் உலக நாடுகளின் வரிசையில் முதலில் நிற்கும் என்பதில் ஐயமில்லை..


* தினேஷ்மாயா *

0 Comments: