தேசத்தின் சினிமா பக்தியா ?

Thursday, December 01, 2016


சினிமாவின் தேசபக்தியா ?
தேசத்தின் சினிமா பக்தியா ?

சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பித்தது. அது என்னவென்றால், இனி இந்தியாவில் அனைத்து திரையரங்குகளிலும், அனைத்து காட்சிகளுக்கும் முன்னர் தேசியகீதம் கட்டாயம் ஒலிக்கப்படவேண்டும், மேலும் திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும், அரங்கில் இருக்கும் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்சும், அப்போது அரங்கின் அனைத்து கதவுகளும் அடைத்திருக்க வேண்டும், உள்ளே இருப்பவர்களுக்கு எந்த இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காக.

என்ன செய்ய. நானும் ஒரு இந்தியனாச்சே. எந்த விஷயமானாலும் எனக்கொரு கருத்து இருக்கும் இல்லையா. என் கருத்தை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். என் கருத்தை கேட்டுவிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டாலும் போடுவார்களோ ? இருந்துவிட்டு போகட்டும். அதற்காக அஞ்சி என் கருத்தை சொல்லாமல் போவது தற்கொலைக்கு சம்மாயிற்றே.
இந்த உத்தரவை வரவேற்கலாமா வேண்டாமா என்று என்னால் சொல்லமுடியவில்லை. நீதிமன்றம் சொல்லும் அனைத்தும் சரியாகிவிடாது. இதற்கு எடுத்துக்காட்டுக்கள் சரித்திரத்தில் பல உண்டு. கீழ் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு தவறு என்று உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ சொல்லியதுண்டு. அதேபோல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளும் தவறு என்று உச்சநீதிமன்றமே பிற்காலத்தில் அதன் தீர்ப்புக்களை திருத்திய சம்பங்களும் பல உண்டு. எதற்கு இதை சொல்கிறேன் என்றால், நீதிமன்றங்களும் சில நேரங்களில் தவறு செய்யும் என்பதற்கே.
சரி, இந்த உத்தரவிற்கு வருவோம். இந்த உத்தரவு எதைக்காட்டுகிறது ?
சினிமாவின்(ல்) தேசபக்தியா ? அல்லது,
தேசத்தின் சினிமா பக்தியா ?
தேசியகீத்த்திற்கு எழுந்து அனைவரும் கட்டாயம் நிற்கவேண்டும் என்கிற விஷயம் உணர்வு சார்ந்த ஒன்று அதை உத்தரவு போட்டுதான் கொண்டுவரவேண்டும் என்றில்லையே. இந்த உத்தரவு எதற்காக என்றால், மக்கள் மத்தியில் தேசபக்தியை நிலைநாட்ட என்கிறது நீதிமன்றம். இது எப்படி இருக்கிறது தெரியுமா ? சினிமாவில் இப்போதெல்லாம், மது மற்றும் புகை சம்பந்தமான காட்சிகள் வந்தால் உடனே திரையின் கீழே இட்துபுறம் எதோ ஒரு எச்சரிக்கை வரும். அது என்ன்வென்று திரையின் அருகே சென்று நின்று படித்தால் மட்டுமே கண்ணுக்கு தெரியும். அது என்னவென்றால், புகை மற்றும் மது உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது. இதை போட்டுவிட்டால், மக்களுக்கு விழிப்புணர்வு வந்து அனைவரும் புகை மற்றும் மது பழக்கத்தை விட்டுவிடுவார்கள் என்று அரசாங்கம் நினைத்து செய்த விஷயம் போலதான் இந்த நீதிமன்றத்தின் உத்தரவும் இருக்கிறது.
அந்த எச்சரிக்கை சில வருடங்களாக திரையில் வந்தவண்ணம் இருக்கிறது. அந்த எச்சரிக்கை செய்தி திரையரங்கிலும் சின்னத்திரையிலும் வந்தபின்னர், எனக்கு தெரிந்த இப்பழக்கம் இருக்கும் சில நண்பர்கள் இந்த பழக்கத்தை விட்டமாதிரி தெரியவில்லை. இதைப்பற்றி அவர்களிடம் கேட்டால், இதைப்பற்றி புகை மற்றும் மது வாங்கும்போதே எல்லாம் அதில் தெளிவாக இருக்கும். அதை படித்தால் மட்டும் எங்களுக்குள் மாற்றம் வந்துவிடுமா என்றார். இன்னொரு கேள்வியும் எழுகிறது. திரையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களை கிண்டல் செய்வது இதுபோன்ற காட்சிகள் வந்தால் எந்தவொரு எச்சரிக்கையும் திரையில் வருவதில்லையே ? ஏன் ?
அவையெல்லாம் குற்றம் இல்லையா ? அவற்றால் இந்த சமூகம் பாதிக்கப்படுகிறதா இல்லையா ? திரையில் ஒரு நடிகர் புகைப்பிடிப்பதை பார்க்கும் இரசிகன் அந்த தவறை தானும் செய்கிறான் என்று நினைக்கும் அரசாங்கம், இதுபோன்ற காட்சிகள் வரும்போதும் அதே கொள்கையை கடைப்பிடிக்க வேண்டுமா இல்லையா ?

தேசபக்தியை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் இருக்கிறது. இந்த உத்தரவை முதலில் கல்வி நிலையங்களில் அமல்படுத்த வேண்டும். அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதை கட்டாயமாக்க வேண்டும். நான் முதன்முதலில் கல்லூரிக்கு சென்றபோது இந்த ஆசை எனக்கு இருந்த்து. என் கல்லூரியில் சுமார் 1000 மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தினமும் காலையில் ஒன்றாக கூடி தேசிய கீத்த்தை பாட வைப்பார்கள் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் நடந்த்தோ வேறு. என் பள்ளிக்கூட்த்தில் தினமும் காலை பிரார்த்தனை இருக்கும். அனைவரும் ஒன்றாக கூடுவோம். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவோம். பின், எங்கள் பள்ளியின் SPL- School People Leader என்று சொல்வோம், அவர் Prayer - வாசிப்பார், அவரை பின்பற்றி அனைவரும் வாசிப்போம். பின் அன்றைய செய்திகளை யாராவது ஒரு மாணவர் வாசிப்பார். பின்னர் பள்ளி முதல்வர் உரையாற்றுவார். கடைசியில் தேசியகீதம் பாடிவிட்டு அனைவரும் கலைந்து செல்வோம். இது தினமும் நடக்கும் விஷயம். ஆனால் இது என் கல்லூரியில் ஒருநாள் கூட நடந்த்தேயில்லை. ஒருவேளை கல்லூரி மாணவர்களுக்கு தேசபக்தியை ஊட்ட வேண்டாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ ? எதையும் சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். இங்கே சில தனியார் பள்ளிக்கூடங்களில் காலையில் அனைவரும் Prayer-க்காக கூடிய பின்னர், எதாவது ஒரு ஸ்தோத்திரமோ, சரஸ்வதி மந்திரமோ, அல்லது எதாவது ஒரு மந்திரமோ, ஜெபமோ சொல்லி ஆரம்பிப்பார்கள். இந்த பள்ளிகளில் தேசியகீதம் பாடி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. இதற்கு நீதிமன்றம் என்ன பதில் வைத்திருக்கிறது ?
எந்தவொரு விஷயமும் கட்டாயப்படுத்தி வரக்கூடாது. சமீபத்தில் புனே நகரில் ஒரு திரையரங்கில் தேசியகீதம் ஒலிக்கப்பட்ட போது ஒரு கலைஞர் எழுந்து நிற்கவில்லை. இதனால் அங்கே இருந்த சிலர் அவரை தாக்கியதாக வந்த செய்தியை படித்தேன். இதில் வருத்தம் என்னவென்றால், அவர் ஊனமுற்றவர் என்பதும், அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் என்பதே! இந்த தேசபக்தர்கள் போர்வையில் திரியும் போலி தேசபக்தர்களை என்ன சொல்வது ?
இந்த உத்தரவால், கட்டாயம் அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்பதால் அனைவரும் எழுந்து நிற்பார்கள். உண்மையான உணர்வால் எழுந்து நிற்பார்களா என்று தெரியாது ஆனால் நாம் எழுந்து நிற்காவிட்டால் எல்லோரும் நம்மை தவறாக எண்ணுவார்கள் தேவையில்லாமல் போலி தேசபக்தர்கள் பிரச்சனை செய்வார்கள் என்றே பலர் எழுந்து நின்று தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்துவார்கள். இன்னொன்றும் கவனிக்க வேண்டும். அனைத்து கதவுகளும் மூடி இருக்கவேண்டும் என்கிற உத்தரவு. புதுடில்லி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் இதுசார்பாக தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. பொதுமக்கள் கூடியிருக்கும் எந்த ஒரு இட்த்தின் கதவுகளை ஒருபோதும் அடைத்துவைக்க கூடாது என்று. ஏதும் அவசர சூழ்நிலை வந்தால் அனைவரும் தப்பிக்க ஏதுவாக இருக்கும் என்பதாலேயே இந்த உத்தரவு. ஆனால் அதை உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒன்றுமில்லாமல் செய்துவிட்ட்து.
இந்த கேள்விதான் என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது. ஏன் திரையரங்கங்களில் மட்டும் இதை அமல்படுத்த வேண்டும் ?
இது சினிமாவில் இருக்கும் தேசபக்தியை காட்டுகிறதா அல்லது ஒட்டுமொத்த தேசத்தின் சினிமா பக்தியை காட்டுகிறதா ?
ஒவ்வொரு காட்சிக்கு முன்னரும் திரையரங்கில் தேசியகீதம் ஒலிக்கும் வழக்கம் சில திரையரங்கில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு திரையரங்கில் நானும் சென்று படம் பார்த்திருக்கிறேன். தேசியகீதம் ஒலிக்கப்பட்டபோது பெரும்பாலும் அனைவரும் தாமாகவே எழுந்து நின்றனர். இதில் எந்தவொரு கட்டாயமும் இல்லை. ஒருசிலரால் ஒருசில காரணங்களால் எழுந்திருக்க முடியாது. அந்த காரணத்தை பொது மேடையில் பகிந்துக்கொள்ள முடியாது. அப்படி இருக்கும் அவர்கள் எழுந்து நிற்கவில்லை என்பதால் அவர்களை தேசபக்தி இல்லாதவர் என்றுதான் அனைவரும் முத்திரை குத்துவார்களேயன்றி, அவருக்கு இருக்கும் சொல்ல முடியாத கஷ்டம் எவர் கண்களுக்கும் தெரியாது.
தேசபக்தி மக்கள் மத்தியில் ஊற்றாய் இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவர அரசாங்கமோ நீதிமன்றமோ தேவையில்லை. நாமிருக்கும் சமூகம்தான் இதை செய்தாக வேண்டும்.
சமூகத்திற்கு அடிப்படையான பல தேவைகள் இருக்கிறது. உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு இப்படி ஏராளமாய் இருக்கிறது. அரசாங்கத்தாலும் அமைச்சர்களாலும் செயலிழந்து கிடக்கும் இந்த அரசு என்னும் இயந்திரத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் அதிகாரம் நீதிமன்றங்களின் கைகளில் உள்ளது. அதை செவ்வனே செய்து மக்களின் அடிப்படை தேவைகளுக்காக கூட மக்கள் நீதிமன்றத்தை நாடும் அவலநிலையை போக்கும் கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு. அதை செய்தாலே போதும், ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையை செய்வான். தேசபக்தி என்பது அங்கே தானாகவே அனைத்து மக்கள் மனதிலும் விதைக்கப்ப்ட்டு விருட்சமாக வளந்து நிற்கும்.
( Thoughts expressed here are my Personal views )
* தினேஷ்மாயா *

0 Comments: