கருப்பு என்கிற கருப்பன்....

Wednesday, October 03, 2018


  கருப்பு....   இது துக்கத்தின் நிறமல்ல. இது சமத்துவத்தின் நிறம். திராவிடத்தின் நிறம். இது சமூக சீர்திருத்தத்திற்கான நிறம். ஆம் இதுநாள் வரையில் கருப்பு என்பது ஒரு துக்க நிறமாகவே என்னுடைய ஆழ்மனதில் சிறுவயதிலேயே பதிந்துவிட்டது. ஆனால் இப்பொழுது நான் இந்த சமூகத்தை பார்க்கும் பார்வை சற்று விசாலமாக ஆகிவிட்டது. இதுவரை எனக்குத் தெரியாத பல காட்சிகளின் கண்ணுக்கு தெரிகிறது. இதுவரை என் காதுகளுக்குக் கேட்காத பல செய்திகள் என் காதுகளுக்கு எட்டுகிறது. இதுவரை உணராத பல வலிகளை என் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வலிகளை என்னால் உணர முடிகிறது.

 எனக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் இந்து மதம் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் அது இறைவனை எடுத்துக் காட்டும் விதம் அவை இறைவன் அல்லது மதம் என்கிற பெயரால் சக மனிதனை ஒடுக்கும் விதம் இதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு  இல்லை.

    தலைவர் பெரியார் ஏன் இறைவனை மறுத்தார் என்பதற்கான புரிதல் எனக்கு வர ஆரம்பித்திருக்கிறது. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு முதல் காரணம் சாதி. சாதி இங்கே தழைத்தோங்க முக்கிய காரணம் மதம். மதம் இருப்பதற்கு முக்கிய காரணம் இறைவன். அங்கிருந்து தான் அனைத்து ஏற்றத்தாழ்வுகளும் ஆரம்பிக்கிறது அதனாலேயே தலைவர் பெரியார் அவர்கள் இறைவனை, மதத்தை, சாதியை ஒழிக்க வேண்டும் என்று போராடினார்.

    அவர் கருப்பு சட்டையை தன் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு , சுயமரியாதையை பின்பற்றுபவர்களுக்கு, கடவுளை, சாதியை, மதத்தை மறுப்பவர்களுக்கு கொடுத்தார். கருப்பு என்பது ஒரு துக்க நிறமாகவே நம் அனைவரின் மனதிலும் திணிக்கப்பட்டுள்ளது. என் மனதிலும் கூட.

      கருப்பு என்பது என்னுடைய நிறம். என் சமூகத்தின் நிறம்.

   கருப்பு என்பது தூக்கமல்ல. கருப்பு என்பது அவமானமல்ல. கருப்பு என்பது அசிங்கம் அல்ல.

   கருப்பு என்பது பெருமை. கருப்பு என்பது அதிகாரம். கருப்பு என்பது சுயமரியாதை. கருப்பு என்பது கௌரவம்.

  அது என்னவோ தெரியவில்லை கருப்பு நிறத்தின் மீது எனக்கு ஒரு புதிய மோகம் பிறந்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் இத்தனை வருடங்கள் கருப்பை ஏதோ ஒரு பதில் சொல்லாத யாரும் விளக்காத சில காரணங்களுக்காக நான் அதை தவிர்த்து வந்தேன் என்பதை நினைக்கும்போது வெட்கப்படுகிறேன் . ஆனால் கருப்பை இன்று முதல் நான் பயன்படுத்தப் போகிறேன். அதுவும் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் அதற்கு ஒரு முக்கிய பங்கு கொடுக்கப் போகிறேன் என்பதை நினைத்து நான் மிகவும் மிகவும் பெருமைப்படுகிறேன். எம் மக்களின் நிறம் கருப்பு என்பதிலும் நான் கருப்பன் என்பதிலும் நான் கர்வம் கொள்கிறேன்......

* தினேஷ்மாயா *
  

0 Comments: