எபோலா !!

Wednesday, August 13, 2014


சமீபகாலமாக உலகையே உலுக்கிவரும் ஒரு பெரிய பிரச்சனை - எபோலா !

இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. மருத்துவதுறையில் எண்ணற்ற வளர்ச்சி கண்டுவிட்டாலும், இந்த கொடிய நோய்க்கு மருந்து இன்னமும் கண்டறியப்படவில்லை. 

நம் அரசாங்கம் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்கதக்கதாக இருந்தாலும், இன்னமும் பல முற்போக்கான நடவடிக்கை முயற்சிகளிலும் ஈடுபடலாம்.

நாம் இங்கே மக்களுக்கு தைரியம் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், அங்கே அமெரிக்கா விஞ்ஞானிகள் இந்த நோய்க்கான மருந்து ஒன்றை கண்டறிந்து சோதிக்க ஆப்ரிக்க நாடுகளுக்கு கொடுத்திருக்கின்றனர். நம் அரசும், நம் விஞ்ஞானிகளை இந்த நோய்க்கான மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் முடுக்கிவிடலாம். ஒருவேளை அமெரிக்கா இந்த மருந்து வெற்றிகரமானது என்பதை உறுதிசெய்துவிட்டால், இந்த நோயை ஒரு வியாபார யுக்தியாக அந்நிய சக்திகள் கையில் எடுத்துக்கொள்ளும். பின்னர் அவர்கள் வைத்ததுதான் விலை என்கிற நிலைவந்துவிடும். இது  உலக பொருளாதாரத்தையும் மக்களின் உயிரையும் பெரிதும் பாதிக்கும். 

இதுவரை உலக மருத்துவ விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து இந்த நோய்க்கான மருந்தை கண்டறிய எந்த ஒரு கூட்டமும் கூட்டவில்லை என்பதுமட்டும் எனக்கு தெரிகிறது. உலகத்தின் ஒவ்வொரு மூலையில் இருக்கும் சிறந்த அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தை கண்டறிய முயற்சி செய்யவேண்டும்.

இந்திய அரசாங்கம், ஆப்ரிக்க நாட்டில் இருந்து குறிப்பாக நோய்தொற்று இருக்கும் நாடுகளில் இருந்து இந்தியாவரும் ஒவ்வொரு பயணியையும் தீவிரமாக கண்காணிப்பதாக தெரிவித்துள்ளது. நம் அரசாங்கத்திற்கு இன்னொரு கோரிக்கையும் வைக்கிறேன். ஆப்ரிக்க தேசத்தில் இருந்து வரும் மக்களைமட்டும் கண்காணிக்காமல், கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் ஆப்ரிக்க தேசத்துக்கு பயணம் மேற்கொண்டு பின்னர், வேறு நாட்டிற்கு சென்று அங்கிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளையும் கண்காணிப்பது இந்த தருணத்தில் கொஞ்சம் அதிகம் கைகொடுக்கும் என நம்புகிறேன். இதற்கு ஏதுவாக பயணிகளே தாமாக முன்வந்து தாங்கள் அந்த நாடுகளுக்கு சமீபத்தில் பயணப்பட்டிருக்கிறார்களா என்றும் தெரியப்படுத்தலாம்.

எது எப்படியிருந்தாலும், இந்த நிலை இப்படியே இருந்துவிடப்போவதில்லை. இந்த கொடிய நோய்க்கு மருந்தும் தடுப்பு மருந்தும் அதிவிரைவில் கண்டறியப்படும். அதுவரை இந்த நோய்க்கு பலியான அந்த அப்பாவி மக்களுக்காக பிரார்த்திப்போம்.

* தினேஷ்மாயா *

0 Comments: