ரெஹானா பாத்திமா வழக்கு !

Friday, June 30, 2023


 

இன்றைக்கு கேரளா உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 

நிர்வாணம் என்பது எப்போதும் அருவருப்பானதல்ல என்று கூறியிருக்கிறது.

வழக்கின் சாரம்:

ரெஹானா பாத்திமா என்கிற சமூக செய்பாட்டாளர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதின் தன் மேலுடம்பில் உடை எதுவும் இல்லாமல் தன் குழந்தை தன் உடலில் வர்ணம் தீட்டுவதுபோல ஒரு வீடியோ. 

அதனால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து 13 நாட்கள் சிறையில் அடைத்தது கீழமை நீதிமன்றம். பின்னர் அவரை சிறையில் இருந்து கேரளா உயர்நீதிமன்றம் விடுவித்தும், இந்த வழக்கை இரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு ஆண் மேலாடை இன்றி சுதந்திரமாக செயல்படும் இந்த நாட்டில் பெண்ணுக்கு அவ்வாறு செயல்பட உரிமைகள் மறுக்கப்படுவதென்பதை எப்படி பார்ப்பது. அதற்காக அனைத்து பெண்களும் அந்த உரிமையை விரும்பவில்லை. ஆனால் அப்படி விரும்பும் பெண்களுக்கு அந்த உரிமைகளை மறுப்பது எப்படி நியாயமாகும்?

ஒரு பெண்ணுக்கு தன்னுடைய உடல் மீது முழு சுதந்திரமும் அதிகாரமும் இருக்கிறது. அது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது.

அந்த வீடியோவில் தன் உடல்மீது தன் குழந்தையை வர்ணம் தீட்ட அனுமதிப்பதென்பதை ஒரு கலையாக மட்டுமே அவர் காண்பிக்க விரும்புகிறார். அதில் கொச்சையாக எதுவும் இல்லை. அது பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது. 

ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான உறவென்பது ஒரு புனிதமான உறவு. அதை இங்கே எவராலும் கேள்விக்குள்ளாக்க முடியாது. ஒரு தாய் தன் உடல்மீது தன் குழந்தையை வர்ணம் தீட்ட அனுமதிப்பதால் அந்த குழந்தையை எந்த விதத்திலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை.

ஒரு ஆண் குழந்தை தன் தாயின் மேலுடம்பை பார்த்து வளரும்போது, பிற பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான் என்பது பாத்திமா அவர்களின் வாதம். அது ஏற்புடையதும் கூட.

ஒரு பெண் தன் உடம்பை இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு ஆணாதிக்க சமுதாயம் எப்படி முடிவு செய்ய முடியும்? அது அந்த பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ? அவளுக்கான சுதந்திரம் இல்லை என்றுதானே அர்த்தம்?

நீங்கள் கலாச்சார காவலர்களாக நடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். 

காலவெள்ளத்திற்கு ஏற்ப கலாச்சாரம் தன்னை தகவமைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்கும். அதற்கு எவரின் காவலும் தேவையில்லை..

ஆண் பெண் அனைத்து விதத்திலும் சமம் என்பதை தினம்தினம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் போல. அப்போதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்திற்குப் புரியுமோ ?


* தினேஷ்மாயா *

0 Comments: