அளவில்லா காதல்

Thursday, September 14, 2017


உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று ஒரு கேள்வியை என்னிடம் வைத்திருக்கிறாய் நீ ?

இதற்கு என்னால் பதிலெல்லாம் சொல்ல முடியாதடி.. இதை ஒரு கேள்வியாகவே நான் கருதவில்லை. எல்லையில்லா, அளவில்லா அன்பை கேள்விக்குள்ளாக்குவதை நான் விரும்பவில்லை.

எனக்கு உன்னை பிடிக்கும். உன்னை மட்டுமே பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். உன் குழந்தைத்தனம் பிடிக்கும். தேவையில்லாத  விடயங்களுக்கு நீ பயப்படுவது பிடிக்கும். உன் சிறு சிறு சண்டைகள் பிடிக்கும். உன் பெரிய பெரிய கோபங்களும் பிடிக்கும். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும்வரை நாமிருவரும் உரையாடிக்கொண்டே இருப்பது மிக பிடிக்கும். நீ எனக்கு சூட்டிய செல்ல பெயர்கள் பிடிக்கும். உன் கண்கள் பிடிக்கும். உன் இதழ் பிடிக்கும். உன் நடனம் பிடிக்கும். உன் திருட்டு விழி பிடிக்கும் !

உன் கள்ளம் கபடமற்ற மனம் பிடிக்கும். என்னிடம் பேசுகையில் உனக்கு தோன்றும் வெட்கம் எனக்கு பிடிக்கும். உன் காதல் மிக மிக பிடிக்கும். உன் கொஞ்சல் ரொம்ப பிடிக்கும். நீ என்னை குழந்தையாய் பாவிப்பது பிடிக்கும். நீ என் குழந்தையாய் மாறிவிடுவது பிடிக்கும். நம் எதிர்கால திட்டமிடல்கள் பிடிக்கும். உன் அறிவு பிடிக்கும். நாம் சமூக பிரச்சனைகளை விவாதிப்பது பிடிக்கும். சப்தமின்றி நீ தரும் முத்தங்கள் பிடிக்கும். அன்பான உன் அரவணைப்பு பிடிக்கும். நான் தவறிழைத்துவிட்டால், உன் செல்ல திட்டுகள் பிடிக்கும். என்னை கண்டிப்பது பிடிக்கும். சில நேரங்களில் நீ கோபமாய் கத்தினாலும், அதுவும் எனக்கு பிடிக்கும். 

இப்படி சொல்லிக்கொண்டே போனால், எழுத்துக்கள் வற்றிவிடும் கண்ணே. உன்னை மொத்தமாய் எனக்கு பிடிக்குமடி.

இனிமேலும் என்னால் சில விஷயங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.  கொஞ்சம் பொறுத்திரு என் கண்ணே. உன் கணவனாக நான் உன் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கிறேன், என் ஆருயிர் மனைவியே !

* தினேஷ்மாயா *

0 Comments: